உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

வெள்ளி, ஏப்ரல் 27, 2007

சிரிங்க... சிந்திக்காதீங்க... (3)

கிரிக்கெட் ரசிகரான தருமி இந்தியாவின் உலக கோப்பை ஆட்டத்தை பார்த்து வாந்தி எடுத்து, வயத்தால போய் ஆட்டங்கண்டு புலம்பி கொண்டு இருக்கிறார்...

"அய்யோ நாலு வருஷமாச்சே, நாலு வருஷமாச்சே... கோப்பை நமக்கில்லை, நமக்கில்லை எவனோ தள்ளிட்டு போகப்போறான்... நான் எங்கே போவேன் என்ன பெட் கட்டுவேன்? சொக்கா... ஐ சி சி கொடுக்கற கோப்பை இந்தியாக்கே கிடைக்கற மாதிரி அருள் புரிய மாட்டியா? ஆமா சூப்பர் எய்ட்டுகே சுக்கிர திசை இல்லை... கோப்பை வேறயா? கோழிகுஞ்சு கூட கிடைக்காது.."

அப்போது அங்கே சிவபெருமான் தோன்றுகிறார்...

"தருமியே..."

"யாருய்யா கூப்பிட்டது?"

"அழைத்தது நான் தான்"

"யாருய்யா நீ?"

"செஞ்சுரியும், சிக்ஸரும் அடித்து, பவுண்டரியும், பவுலரையும் அடிக்கும் கிரிக்கெட் பேட்ஸ்மேன் நான்"..

சிறிது நேர விவாதத்துக்கு பிறகு தருமி கேள்வி கேட்க ஆரம்பித்து விடுகிறார்....

பிரிக்க முடியாதது என்னவோ?

நம்மாளுகளும் பெவிலியனும்

சேர்க்க கூடாதது?

நம்மாளும் பார்ட்டிகளும்..

சேர்ந்தே இருப்பது?

நம்மாளும், செல்போனும்

சேராமல் இருப்பது?

நம்மாளு பேட்டும் எதிர் டீம் பாலும்...

சொல்ல கூடாதது

நம்ம ஆட்டம்

சொல்ல கூடியது

எதுவுமே இல்லை

செஞ்சுகிட்டே இருக்கிறது?

விளம்பர சூட்டிங்

செய்யாமயே இருக்கிறது?

பிட்ச்ல பேட்டிங்

நம்மாளு அறியாதது?

அடித்து ஆடுவது..

நன்றாக அறிந்தது?

குடித்து ஆடுவது...

விக்கெட் என்பது?

நாம் வேகமாக இழப்பது...

ரன் என்பது

மற்றவர்கள் வேகமாய் எடுப்பது...

பவுண்டரி என்பது..

எங்கேயோ இருப்பது...

சிக்ஸர் என்பது..

எட்டாமலே இருக்குது..

பால்னு சொன்னா?

நோ பால்

அதுக்கு மேல

வைடு பால்

விக்கெட்டுக்கு

சேவாக்

விளம்பரத்துக்கு

சச்சின்

அடக்குவது

ஐ சி சி

அமுக்குவது

பி சி சி

அய்யா நீர் வீரர் நீர் வீரர்...

நீர்?

நான் வீரர் இல்லை நான் அம்பயர்.

புதன், ஏப்ரல் 25, 2007

புலம்பல் மணி

நாட்டுல எவ்வளோ விதமான ஆளுங்க இருக்காங்க... சில பேருக்கு சமுதாயத்து மேல அக்கறை இருக்கும்... சில பேருக்கு இருக்காது.. சமுதாயத்து மேலயும், நாட்டு மேலயும் அக்கறை இருக்கிறவங்க பல விதம்..

சில பேரு தப்பு நடக்கும் போது உடனே ரியாக்ட் பண்ணி தப்பு பண்றவங்களை ஒரு அறை, ஒரு முழுசு விட்டுருவாங்க... சில பேரு மொட்டை பெட்டிஷன் முடி வெச்ச பெட்டிஷன் எல்லாம் போட்டுருவாங்க... சில பேரு இந்து, சந்து பொந்து எல்லாத்தலயும் எழுதிருவாங்க...
பல பேரு பஸ்ஸுல், ட்ரெயின்ல, சலூன்ல எல்லாம் மூஞ்சி முகம் தெரியாதவங்க கூட எல்லாம் தொண்டை கிழிய வாக்குவாதம் பண்ணுவாங்க...

ஆனா சிலபேரு பாருங்க … தனக்கு தானே புலம்பிப்பாங்க.. புலம்பல்னா புலம்பல் அப்படியொரு புலம்பல்... அந்த மாதிரி ஒரு கேரக்டர் தான் நம்ம "புலம்பல் மணி"....

(அப்பாடா ஒரு வழியா கேரக்டர் இன்ட்ரொடக்க்ஷன் முடிச்சாச்சு...)

இனி அப்பப்ப அவர் வந்து புலம்பரதை உங்களுக்காக ஒட்டு கேட்டு சோல்லலாம்னு இருக்கேன்...

லேட்டஸ்ட் புலம்பலை கேளுங்க..

"என்னாங்கடா... பாராளுமன்றதுக்கு போய் அரசாங்கம் தப்பு பண்ணா கேள்வி கேளுங்கடான்னு அனுப்பி வெச்சா.. இவனுங்க விதவிதமா தப்பை பண்ணிட்டு போலீசுக்கும், CBI-கும் பதில் சொல்லிட்டு இருக்கானுங்க...

இன்னொரு பக்கம் விளையாட ஒரு க்ரூப்பை அனுப்பிச்சா அவனுங்க பாலிடிக்ஸ் பண்ணிக்கிட்டு திரியரானுங்க.. அரசியல்வாதிங்க விளையாடிட்டு இருக்கானுங்க...

என்ன பண்றதுன்னே தெரியலை...

சரி நாட்டுப்பற்றை வளர்க்க தியாகிகளுக்கு அங்கங்கே சிலை வைக்கலாம்.. நம்ம ஏரியால எந்த தியாகிக்கு சிலை வைக்கலாம்னு பசங்க கிட்ட கேட்டேன்பா..
ஒட்டு மொத்தமா அபிஷேக் பச்சன்னு சொல்றானுங்க.. எங்க போய் அடிச்சிகறது?"

செவ்வாய், ஏப்ரல் 24, 2007

கோவில்கள்

நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா?

நீங்கள் கஷ்டபட்டு அங்குலம் அங்குலமாக நகர்ந்து கடவுளை தரிசிக்க நிற்கும் போது... 100, 500, 1000 என பணத்தை வாரி இறைத்து, உங்களை தாண்டி சென்று கடவுள் அருளை பெறுபவர்களை பற்றியும்? அவர்களுக்கு பணத்தை பெற்று கொண்டு அவ்வசதியை அளிக்கும் கோவில்களை பற்றியும்..

உங்களை ஒரு அரை நிமிடம்... இல்லை இல்லை 20 நொடிகள் கூட நிற்க விடாமல் 'ஜரகண்டி', 'ஜரகண்டி' என்று விரட்டும் கோவில் நிர்வாகிகள், பணமும், அதிகாரமும் படைத்தவர்களை பூரண கும்ப மரியாதையோடு வரவேற்று கடவுள் சிலை அருகிலேயே அமர வைத்து எவ்வளவு வேண்டுமானலும் தரிசித்து கொள்ள அனுமதிப்பது பற்றி?

கேட்பாரன்றி ஆயிரக்கணக்கான கோவில்களும், கடவுள்களும் இருக்க ஒரு சில குறிப்பிட்ட கோவில்களுக்கே எல்லோரும் வாரி வழங்குவது ஏன் என்பது பற்றி?

சமதர்மத்தையும், அருளையும் போற்றி பரப்புவதற்காக அமைக்கப்பட்ட கோவில்களும், மடங்களும் லாபங்களை குறித்து செயல்படும் வியாபார தலங்களாகவும், சுற்றுலா தலங்களாகவும் மாறி போனது பற்றி...?

யாரது? எங்களுக்கு கோவிலில் நுழையவே அனுமதி இல்லை... ஆதலால் இந்த கேள்வி எங்களுக்கு அநாவசியம் என்றது?

அதெல்லாம் பழைய கதை நண்பர்களே... கோவில்கள் மத, சாதி வெறியிலிருந்து பண வெறிக்கு மாறிவிட்டன.

ஏழைகள் எந்த சாதியாயினும் எள்ளி நகையாட படுகின்றனர்... பணக்காரர்களின் சொர்க்கமாகவும், ஏழைகளின் நரகமாகவும் இந்த உலகம் மாறி கொண்டு வருகிறது.. முன்னெப்போதையும் விட வேகமாய்.

ஞாயிறு, ஏப்ரல் 22, 2007

சிரிங்க... சிந்திக்காதீங்க... (2)

தலைவரே...

மழையை வரவழைக்கிற ரசாயன பவுடரை தூவினா போதும்னு மழை வரும்னு தலைவர்கிட்ட சொன்னது தப்பா போச்சு....

ஏன்?

ரசாயன பவுடர் கிடைக்கலைன்னா டால்கம் பவுடராவது தூவுங்கன்னு பப்ளிக்கா சொல்லி மானத்தை வாங்கிட்டாரு...
------------------------------------------------------------------------------------------------


ஆனாலும் தலைவர் ரொம்ப மோசம்..

ஏன் என்னாச்சு?

நேத்து மழைனால மீட்டிங் கேன்சல் ஆனதுக்கு எதிர்க்கட்சி சதி தான் காரணம்னு பத்திரிகைக்கு பேட்டி கொடுத்துருக்காராம்.
------------------------------------------------------------------------------------------------


ஆனாலும் நம்ம தலைவர் அநியாயத்துக்கு புளுக ஆரம்பிச்சிட்டார்.

ஏன் அப்படி சொல்றே?

அடுத்த வாரம் நம்ம கட்சி சார்பா பறக்கும் பிளேனை வானத்தில் படுத்து மறியல் பண்ணப் போறதா சொல்லியிருக்கார்.
------------------------------------------------------------------------------------------------


தலைவரோட ஊழல் எல்லை மீறி போய்கிட்டிருக்கு..

என்ன விஷயம்?

சென்னை ஜார்ஜ் கோட்டை அகழிக்கு தண்ணி விட்ட வகையில 5 கோடி செலவுன்னு சொல்லி ஊழல் பண்ணியிருக்கார்...
------------------------------------------------------------------------------------------------


சினிமா தயாரிப்பாளரா இருந்தவரெல்லாம் தலைவரானா இப்படி தான்...

என்னடா ஆச்சு?

நாம நடத்த போற பிரம்மாண்டமான விழாவுக்கு பட்ஜெட் எவ்வளவு? வினியோகஸ்தர் யாராவது கிடைப்பாங்களா?..ஏ சென்டர்ல தேறுமான்னு எல்லாம் கேட்டுட்டு திரியறாம்...
------------------------------------------------------------------------------------------------


எதுக்கு தலைவரை C.M திட்டினாரு?

கலப்படம் பண்றேன் பேர்வழின்னு தேங்காயெண்ணெய்ல மண்ணெண்ணையை கலந்துட்டு, கேட்டா தேங்காய் மண்ல தானே முளைக்குதுன்னு சால்ஜாப்பு சொல்றாராம்.
------------------------------------------------------------------------------------------------


தலைவருக்கு ஆனாலும் தலைக்கனம் ரொம்ப ஜாஸ்தி..

ஏன்பா?

நாம போன விழாவில பரிசளிச்ச கைக்கெடிகாரம் விலை கம்மின்னு காமிக்கறதுக்குகாக அதை கால்ல கட்டிட்டு அலையறாராம்.
------------------------------------------------------------------------------------------------


தலைவரு தன் தாத்தா பேரை பார்லிமென்ட்டுக்கு வைக்க ரொம்ப முயற்சி பண்ணார்.. முடியலை...

அப்புறம்..

அப்புறமென்ன? தாத்தா பேரை பார்லிமென்ட்டுன்னு மாத்தி வெச்சுட்டாரு...
------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, ஏப்ரல் 20, 2007

32 பேர் படுகொலை

ஜோ என்ற மாணவரின் வெறிச்செயல்...........

"இன்றைய பொருளாதாரத்தின் படி.. ஏழைகள் மேலும் ஏழைகளாகிக் கொண்டே போவார்கள். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிக் கொண்டே போவார்கள்..."

"இப்படியே உலகம் போனால் இருப்பவனிடத்தில் இல்லாதவன் பிடுங்கி தின்பான்..."

"வசதி படைத்தவன் தர மாட்டான்... வயிறு பசித்தவன் விட மாட்டான்..."

"கலாச்சாரமே இல்லாமல் இருப்பது தான் கலாச்சாரமாகி வருகிறது..."

படுகொலையின் பின்னனி, செய்தவரின் பின்னனி, சூழ்நிலை... வெறிச்செயலுக்கு அவர் கூறும் விளக்கங்கள்...

மேற்சொன்ன கருத்துக்கள், சம்பவத்தின் பின்னனி இவற்றிக்கும் ஏதோ நெருங்கிய தொடர்பு இருப்பதாக எனக்கு படுகிறது...


பல கேள்விகளுக்கு விடை காண முடியாமல், அந்த இளைஞர் இப்படிப்பட்ட வெறிச்செயலை செய்திருப்பதாக படுகிறது... அந்த கேள்விகளுக்கு முன்பே அவருக்கு விடை கிடைத்திருக்குமானால் இந்த சம்பவமே நிகழ்ந்து இருக்காதோ...

அடக்குமுறைக்கும், ஆடம்பரத்துக்கும் எதிரான போராட்டங்கள் பல வகை... பல களம்.. அதற்கு அவர் தேர்ந்தெடுத்த வழியும், இடமும், அப்பாவிகளை இந்த இளைஞர் கொன்ற விதமும் அந்த ஆவேசத்தையே அர்த்தமில்லாமல் செய்து விட்டது...

இதற்கு இந்த உலக சமூகத்தில் இப்படிபட்ட ஏற்றத்தாழ்வுகளை படைத்து, மக்களை அதில் உழல விட்ட அனைவருமே வெட்கி தலைக் குனிந்து.. இறந்தவர்களிடமும், அவர்களின் குடும்பங்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்...

அனைவரின் ஆத்மாவும் சாந்தியடைய.. இறைவன் அருள் புரிவானாக..

முதலாம் ராஜேந்திரன்

சரித்திரம் என்றாலே எனக்கு இப்பொழுதெல்லாம் நினைவுக்கு வருவது சோழர்கள் தான்.

அதுவும் பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், யவன ராணி போன்ற புதினங்களை படித்த பின்பு.... நாமும் அவர்கள் காலத்தில் வாழ்ந்திருக்கலாமே என்று கூட தோன்றுகிறது.

எவ்வளவோ மன்னர்கள், தளபதிகள், வீரர்கள். ஆனால் என்னைக் கவர்ந்தவர் முதலாம் ராஜேந்திரன்.

பல்லாயிரம் கடல் மைல்களுக்கு அப்பால் இருந்த கடாரம், ஸ்ரீ விஜயம் போன்ற நாடுகள் கூட அவன் இலக்கில் இருந்து தப்பவில்லை என அறியும் போது, எப்படிப் பட்ட பட்டறிவும், தொலைநோக்கும் உள்ள வீரனாக அவன் இருந்திருப்பான் என்று வியப்பாக இருக்கிறது.

பல்லயிரக்கணக்கான யானைகளையும், குதிரைகளையும், போர் தளவாடங்களையும், ஆட்களையும் கப்பலில் ஏற்றிக் கொண்டு அவ்வளவு தூரம் பயணப்படுவது என்றால், எவ்வளவு பெரிய, திறம் வாய்ந்த, அசாத்தியமான கடற்படை அவனிடத்தில் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது.

முதலாம் ராஜேந்திரனின் வீர வாழ்க்கையை மையமாக வைத்து ஏதாவது புதினங்கள் வந்துள்ளனவா என்று அறிய ஆவல்.

(சாளுக்கிய சோழ மன்னர்களில் முதல்வனான முதலாம் குலோதுங்கனுடைய வரலாற்றை சுவைப்பட விவரிக்கும், விஷ்வக்சேனன் எழுதிய "பாண்டியன் மகள்" என்னும், கல்கி இதழில் தொடர்கதையாக வந்த புதினம் இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது)

செவ்வாய், ஏப்ரல் 17, 2007

காற்றுள்ள போதே கார் வாங்குங்க...


காற்று சக்தியில் இயங்கும் கார்.

வியப்படைய வேண்டாம். காற்று சக்தி துணைக் கொண்டு இயங்கும் கார் இப்பொழுது சாத்தியாமாகியிருக்கிறது.

காற்று சக்தி என்றால் என்ன? அது எப்படி காரை இயக்கும்?

காற்று சக்தி என்பது உயர் அழுத்தத்தில்(90M3) ஒரு உருளைக்குள்(Cylinders) அடைக்கப்படும் காற்றின் வெளியேறும் சக்தியாகும்.(90M3 Compressed Air) உயர் அழுத்தத்தில் அடைக்க படும் காற்றானது சீராக வெளிப்படும் பொழுது எந்திரத்தின் குதிரையை(Piston) இயக்குமாறு எந்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இந்த அதிசய விஞ்ஞானக் கண்டுபிடிப்பை பற்றிய சில தகவல்கள் இதோ உங்களுக்காக...

பத்து வருட ஆராய்ச்சிக்கு பின் "மோட்டார் டெவெலெப்மென்ட் ஆஃப் ஃபிரான்ஸ்"(Moteur Development International of France) என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது இந்த கார்.
(இந்தியாவின் டாடா நிறுவனம் (Tata Motors) கூட வர்த்தக ரீதியாக இந்த வகை கார்களை தயாரிக்க இவர்களோடு ஒப்பந்தம் செய்திருப்பதாக ஒரு செய்தி கூறுகிறது)

மற்ற சாதாரண ரக கார்களை போல இந்த காரினால் எந்த சுற்றுப்புற சுகாதார சீர்கேடும் உண்டாகாது என்பது இந்த காரின் முக்கியமான அம்சமாகும். சாதரண எரிபொருள் கார்களை விடவும் இது மலிவானதாகவும் இருக்கும் என்பது கூடுதல் மகிழ்ச்சியான செய்தி.(ரூ.350000)

இது இருவிதமான செயல்பாடுகள் கொண்ட இயந்திரங்களோடு வருகிறது.

ஒருமுக சக்தி - காற்றழுத்ததில் இயங்கும் இயந்திரம்.(Single energy compressed air engines)

பன்முக சக்தி - காற்றழுத்ததில்/எரிபொருளில் இயங்கும் இயந்திரம்.(Dual energy compressed air plus fuel engines)

ஒருமுக சக்தி கொண்ட இயந்திரங்கள் நகரத்தில் குறைந்த தூரம் செல்ல பயன்படும் கார்களில் பொருத்தப்படும்.(MiniCAT and CityCAT)

பன்முக சக்தி கொண்ட இயந்திரங்கள் அதிக தூரம் செல்லும் வாகனங்களில் பயன்படுத்தப்படும். உயரழுத்த காற்று கொள்கலன்க காலியாகும் போது எரிபொருள் உபயோகித்து வாகனத்தை செலுத்தலாம் என்பது இந்த வகை இயந்திரத்தின் கூடுதல் சிறப்பு.

இரண்டு வகை இயந்திரங்களுமே முறையே 2,4,6 கொள்கலன்கள்(Tanks-Cylinders)கோண்டவையாக இருக்கும்.
இதன் வேகம் மணிக்கு 50 KM (வேகத்தை மணிக்கு 220KM. ஆக அதிகரிப்பதற்கான ஆராய்ச்சிகள் தொடர்கின்றன) . இதற்கு சாதாரண வேக அளவீட்டு கருவிகள் பொருத்தப்பட மாட்டா. இதற்கென ஒரு கணினி திரை அமைக்கப்பட்டிருக்கும். அதில் வேகம், இயந்திர சுழற்சி, எரிபொருள்/காற்று அளவு முதலியன குறித்த தகவல்கள் தெரியும். இது ஒரு அதிர்வில்லாத, மாசுப்படுத்தாத இலகு ரக காராக இருக்கும்.

ஒரு முறை எரிபொருளை(காற்று) நிரப்ப ரூ.90 மட்டுமே செலவாகும். சந்தை இதற்கென தயாராகும் போது.. உள்ளூர் எரிபொருள் நிலையத்திலேயே 2-3 நிமிடத்தில் எரிபொருளை(காற்று) நிரப்பிக் கொள்ளலாம். இது 200 KM வரை ஓடும். இதனுள் அமைக்கப்பட்டிருக்கும் சிறிய ரக கருவியை உபயோகித்து 2-3 மணி நேரத்தில் வீட்டிலேயே கூட காற்றை நிரப்பிக் கொள்ளலாம்.

இந்த கார் வெளியிடும் உபயோகிக்கப்பட்ட காற்று சுத்தமானதாக, 0-15 டிகிரி பதத்தில் தான் இருக்கும். அதே காற்று மறுசுழற்சி முறையில் காரை குளிரூட்ட பயன்படும். தனியாக AC இயந்திரம் பொருத்த தேவை இல்லை.

மேலும் தகவல்களுக்கு http://www.theaircar.com/ என்னும் இணைய தளத்தை பாருங்கள்.

சனி, ஏப்ரல் 14, 2007

கமல் கூறும் தத்துவம்

சமீபத்தில் கமல்ஹாஸன் நடித்த 'வசூல்ராஜா MBBS' படத்தை மீண்டும் பார்க்க நேர்ந்தது.

நகைச்சுவை படம் தான். பலமான கதையம்சம் இல்லாத மசாலா படம் தான். ஆனாலும் பெரிய பெரிய மகான்கள், யோகிகள், வாழ்வியல் நிபுணர்கள் கூறும் வாழ்வியல் தத்துவங்களை சாதாரணமாக படத்தில் அள்ளி தெளித்து இருக்கிறார்கள்.

கமல் ஒரு நாத்திகவாதி என்பது அனைவருக்கும் தெரியும். சில, பல மகான்கள் சொல்லும் அதே விஷயத்தை தான் அவரும் சொல்கிறார். கடவுள் பெயரை இழுக்காமல். நான் தான் கடவுள் என்று சொல்லாமல்.

"அனைவரிடமும் அன்பாய் இருங்கள்"...

"மனிதனுக்கு தேவை அன்பும் பாசமும் தான்"...

"கடமையை செய்யுங்கள்.. பலனை எதிர்ப்பார்க்காதீர்கள்(பலன் தானே உங்களை தேடி வரும்)"

"சாதிக்க தேவை மனோபலமும் நம்பிக்கையும் தான்"

எவ்வளவு விளையாட்டாக போகிற போக்கில், அந்த கருத்துக்களை அறிவுரை போல் அல்லாமல் கதையோடு கதையாக, சம்பவத்தோடு சம்பவமாக சொல்லி இருக்கிறார்கள்.

ஒவ்வொருவரும் தத்தம் கடமையை சரியாக செய்து வந்தாலே போதும்.. நாட்டை தனியாக யாரும் திருத்த தேவை இல்லை...

செவ்வாய், ஏப்ரல் 10, 2007

சிரிங்க... சிந்திக்காதீங்க...

ஒரே நாளில் 2 விமானங்கள் தரை இறங்கும் போது கோளாறு...

என்னடா இது அநியாயமா இருக்கு...

ஏண்டா என்னாச்சு..

2 விமானங்கள் தரை இறங்கும் போது கோளாறாம்...தரை இறங்கினா தானே பிரச்சினைன்னு தரை இறங்கவே மாட்டேன்னு பைலட் அடம் பிடிக்கிறாராம்.

========================================

(அரசியல்வாதி பொதுக்கூட்டத்தில்...)

இது நிச்சயம் எங்கள் ஆட்சிக்கு களங்கம் கற்பிக்க, எதிர்க்கட்சியினர் பாகிஸ்தான் தீவரவாதிகளோடு சேர்ந்து செய்த சதி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்....

========================================

சார் எங்க கம்பெனி ஃப்ளைட்ஸ் லேண்ட் ஆகும் போது பிரச்சினை ஆனது உண்மை தான்... அதுக்காக இப்ப ஃப்ளைட் லேண்ட் ஆகும் போது.. இப்படி உரத்த குரல்ல கோவிந்தா, கோவிந்தான்னு கத்தி ஸீன் க்ரியேட் பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை சார்....

========================================

(பெயரியல்/வாஸ்து நிபுணர்)

ஏர் இந்தியான்னு பெயர் இருக்கறதால தான் அடிக்கடி லேண்டிங் கியர் பிரச்சினை வருது... பேசாம கியர் இந்தியான்னு பேரை மாத்திட்டோம்னா பேர்லயே கியர் இருக்கறதால பிரச்சினை வராது.

இன்னொரு விஷயம் சொன்னா அதிர்ச்சி ஆயிடுவீங்க.. "ஏர்" இந்தியான்னு பேர் இருக்கறதால அடிக்கடி ஃப்ளைட் வயல்வெளில போய் லேண்ட் ஆக வாய்ப்பு இருக்கு. ஏன்னா வயலுக்கும், ஏர்க்கும் தொடர்பு இருக்கு இல்லையா?

========================================

(போலீஸ் ஸ்டேஷனில்)
ஏம்மா உன் புருஷன் உன்னை கொல்ல முயற்சி பண்றார்னு எப்படி சொல்றே?


எப்ப அம்மா வீட்டுக்கு போகனும்னு சொன்னாலும் ஃப்ளைட்ல போடின்னு சொல்றாரு.. சும்மாவே உன்னை ஃப்ளைட்ல ஏத்தி விட்ருவேன்னு அடிக்கடி மிரட்டறார்.

========================================

வியாழன், ஏப்ரல் 05, 2007

பணம் பண்ணலாம் வாங்க..

எளிய, நேர்மையான வழியில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள்...

பணம் தேவையா, இல்லையா என்ற சித்தாந்த வேதாந்த தத்துவங்கள் ஒரு புறம் இருக்கட்டும்...

தேவைக்கு ஏற்ற பணத்தை சம்பாதிக்க என்ன எளிமையான வழிமுறைகள் உள்ளன என்பதை பற்றி நாம் ஆராய்ந்து பார்க்கலாம்.(சம்பளத்தை விடுங்கள்.. அது வருவதும் தெரிவதில்லை.. போவதும் தெரிவதில்லை..)

எளிமையான முறை என்றால் என்ன?

1)குறைந்த முதலீடு.

2)புத்திசாலித்தனமான உழைப்பு.

3)நேர்மையான வழிமுறை.

4)குறைந்த நேரச்செலவு.

5)நம் அறிவிற்கும், வாழ்வியல், சமூகவியல் முறைக்கும் ஒத்து வரக்கூடிய முறை.


முதலில் சில விஷயங்களை தெளிவுப்படுத்தி விடலாம் என்று நினைக்கிறேன்.

நான் எந்த முறையையும், தொழிலையும் சிறந்தது என்று கூற வரவில்லை. இது எந்த நெட்வொர்க் மார்க்கெட்டிங்கான முயற்சியும் இல்லை.

உலகத்தில் நடைமுறையில் உள்ள எளிமையான பணம் பண்ணும் முறைகளை நாம் பகிர்ந்து கொள்ளவே இந்த தலைப்பு.

இந்தியர்களாகிய நாம் நிறைய நேரத்தை வீணடித்து கொண்டிருக்கிறோம் என்று படுகிறது. அதற்காகவே இந்த தலைப்பு. தலைப்பு உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் ஒரு வரி கருத்தை எழுதிப் போடுங்களேன்.