உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

திங்கள், மார்ச் 31, 2008

ஆபத்தில் உதவும் ICE…..

நவீன உலகம்... பல புதிய வசதிகளை உலகிற்கு அறிமுகப்படுத்தும் அதே நேரத்தில் பல புதிய ஆபத்துகளையும் சேர்த்து அறிமுகப்படுத்தி கொண்டிருக்கிறது...

புதிய புதிய வியாதிகள், புது விதமான ஆயுதங்கள், வெடிகுண்டுகள், வெப்ப மயமாக்கல் மூலம் புதிய இயற்கை சீரழிவுகள், சாலை விபத்துகள், தரமற்ற கட்டிடங்கள், பூகம்பம், மழை-வெள்ளம்....

நீங்களோ நானோ ஆபத்தில் சிக்கிக்கொள்வது என்பது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்...

இந்த சூழ்நிலையில் தான் முளைத்திருக்கிறது இந்த இயக்கம்.... ICE

ICE என்பது In case of emergency என்ற ஆங்கில பதத்தின் சுருக்கம் ஆகும்...

இந்த பரபரப்பான பரந்த பெரிய உலகில் மனிதநேயம் என்பது மிகவும் அரிதான ஒன்றாகவே இருக்கிறது... மனிதநேயம் குறைவாக போனதற்கான காரணிகளுல் முக்கியமான ஒன்று.. நேரமின்மை..

(இப்போதெல்லாம் மனித நேயம் என்பது ஆபத்தில் இருப்பவரை பார்த்து பரிதாபப்பட்டால் போதும் என்கிற அளவில் சுருங்கி போய் விட்டது... இதற்கு நானும் விதிவிலக்கல்ல... குற்ற உணர்வுடன் தான் இதை சொல்கிறேன்...)

தன்னை கவனித்துக்கொள்ளவே நேரம் இல்லாத பரபரப்பான நகர வாழ்க்கை சூழலில்.. பிறரை கவனிக்க ஏது நேரம்... (கிராமங்களும் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு வருகின்றன...)

அப்படியே நேரத்தையும், சிரமத்தையும் பொருட்படுத்தாமல் ஆபத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவி புரிய வரும் நபர் ஆபத்திலிருக்கும் நபரின் உறவினருக்கோ, நண்பருக்கோ தகவல் சொல்லலாம் என்றால்... லாண்டரிக்கடை எண்ணிலிருந்து... லஸ்ஸிக்கடை எண் வரை எல்லாம் பதிந்து வைத்திருப்பார் ஆபத்தலிருக்கும் நண்பர்...

அப்படியே அம்மா, அப்பா, மனைவி, கணவன் எண் என்று ஏதாவது இருந்தாலும், ஆபத்து சமயத்தில் உடனே வர முடியும் நிலையில் யார் இருப்பர் என்று எப்படி தெரியும்? ஒரு வேளை ஆபத்திலிருக்கும் நண்பர் வெளியூரை சேர்ந்தவராக இருக்கலாம்.. உள்ளூரில் அவரின் அலுவலகத்தையோ, உறவினரையோ, நண்பரையோ அழைக்க வேண்டியிருக்கலாம்...

இதை உதவி செய்ய வரும் யாரோ ஒருவர் எப்படி தெரிந்து கொள்வது?

இதை விட முக்கியமாக மயக்க மருந்துக்கோ, சில விதமான உயிர் காக்கும் மருந்துகளோ உங்களுக்கு ஒவ்வாததாக இருக்கலாம்... சிலருக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்கள் இருக்கலாம்...அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்குமுன் அவருக்கு என்ன மருந்து கொடுக்கலாம், கொடுக்கக்கூடாது, எந்த மாதிரி சிகிச்சை அவருக்கு கொடுக்கக்கூடாது என்பதையெல்லாம் தெரிந்துக்கொண்டால் மருத்துவர்கள் இன்னும் சிறப்பாக சிகிச்சை அளிக்க முடியும்.

iஇதற்காக பரிந்துரைக்கப்படும் முறை தான் ICE என்கிற முறை...

இந்த வேகமான நவீனமான கால சூழ்நிலையில் (கவனியுங்கள்.. நவீனமான என்று தான் சொன்னேன்.. பின் நவீனமான என்று சொல்லவில்லை) அநேகமாக அனைவரும் மொபைல் தொலைபேசி வைத்திருப்பதாகவே படுகிறது... அனைத்து தொலைபேசி எண்களும் அதில் தான் பதிந்து வைக்க பட்டிருக்கும்.... மொபைல் தொலைபேசி இல்லாதவர்கள் ஒரு சின்ன நாட்குறிப்பான்(டைரி) போல வைத்துக்கொண்டு வேண்டியர்கள் எண்ணை எழுதி வைத்து இருப்பார்கள்...

அவ்வாறு குறித்து வைக்கும் போது ICE, ICE1 என்று உங்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் உங்களுக்கு உதவ வரும் நபர், யாரை முதலில் தொடர்பு கொள்வது என்பதை குறித்து வைக்க வேண்டும்...

இது ஆபத்தில் இருக்கும் போது யாரை நீங்கள் நம்பிக்கையுடன் உங்களுக்கு உதவ அழைக்க நினைப்பீர்களோ அவர்களை அழைக்க உதவும்...

வயதான பெற்றோர், பதட்டப்படும் மனைவி, கணவன் இவர்களை தவிர்த்து சமயோசிதமாக செயல்படும் நண்பர்களுக்கு நாம் ஆபத்திலிருக்கும் செய்தி முதலில் தெரிவது வசதி தானே....?

லண்டனில் கடந்த 1995-ம் நடந்த குண்டு வெடிப்பின் போது அங்கே,மீட்புக்குழுவில் இடம் பெற்றிருந்த Bob Bratchie என்கிற அவசர மருத்துவக்குழு உறுப்பினருக்கு தோன்றிய ஓர் எண்ணமே ஒரு இயக்கமாக மாறி இன்று உலகை வலம் வந்து கொண்டிருக்கிறது....

அவர் BBC-க்கு அளித்த ஒரு பேட்டியில் பின் வருமாறு கூறியிருக்கிறார்...

"அன்று குண்டுவெடிப்பில் காயம் அடைந்த பலரால் பேசவே முடியவில்லை... அவர்கள் யார் என்பதையும் யாரை தொடர்புக்கொள்ள வேண்டும் என்பதும் எங்களுக்கு தெரியவில்லை... அவர்களில் பெரும்பாலானோர் கைத்தொலைபேசி வைத்திருந்தனர். அதை உபயோகித்து அவர்களின் அடையாளங்களை தெரிந்து கொள்ள எங்கள் குழுவினர் முயன்றுக்கொண்டிருந்தனர்.... காயமடைந்தவருக்கு இன்னும் எளிதாக உதவ, இதற்கு பதிலாக ஒரு உலகலாவிய முறை ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை இருந்ததை உணர்ந்தேன்..."

கைத்தொலைபேசி தயாரிப்பாளர்கள் இது குறித்த விழிப்புணர்வை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றும், இந்த இயக்கத்துக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்...

இது குறித்த மின்னஞ்சல் கூட பலருக்கு வந்திருக்கலாம்... ஆனால் கூட ICE குறித்த விழிப்புணர்வும், செயல்படுத்தலும் குறைவாகவே உள்ளது...

இன்னும் ஒரு படி மேலாக, கனடா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் மருத்துவ குறிப்புகள், அவர்களின் அவசர தொடர்பு, அடையாளங்கள் ஆகியவற்றை இதற்கென உள்ள சேவை நிறுவனங்கள் மூலம் ஆவணப்படுத்தி ஒரு அடையாள அட்டை (கடன் அட்டை போன்றது) போல வழங்குகிறார்கள்.. உலகில் எந்த இடத்தில் ஆபத்து நேர்ந்தாலும் இந்த அட்டையை உபயோகப்படுத்தி அவரது விபரங்களை தெரிந்துக்கொண்டு சிகிச்சை அளிக்க உதவி செய்யும் நோக்கில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது...

நாம் செய்ய வேண்டியது:

மொபைல் போனின் அட்ரஸ் புக்கில்

ICE என்பதை பெயராக பதிந்து, உங்கள் ஆபத்து நேரத்தில் யாரை முதலில் தொடர்பு கொள்ள வேண்டுமோ அவர்களுடைய எண்ணை பதிந்து வையுங்கள்...

ஒன்றுக்கு மேற்பட்ட எண்கள் எனில்(ஒரு வேளை முதல் நம்பர் கிடைக்காவிட்டால்)
ICE1, ICE2 என்று பெயர் பதிந்து எண்களை பதிக்கவும்...

அவ்வளவே... ஆபத்து நேரத்தில் உங்களுக்கு உதவும் மனித நேயமிக்க நண்பரின் நேரத்தை மிச்சப்படுத்தவும், உங்களுக்கு விரைவாக சிகிச்சை அளிக்கவும் இது உதவும்...

For further Reference

www.icesticker.com
www.icecontact.com
www.iceincaseofemergency.ca

சனி, மார்ச் 29, 2008

வெள்ளி, மார்ச் 28, 2008

கண்ணாடியும் சமூகத்தின் சில முரண்பட்ட கண்ணோட்டங்களும்

கண்ணாடி....

கண்பார்வை கோளாறுக்காக போடப்படும் கண்ணாடிக்கு மூக்கு கண்ணாடி என்று பெயர் வைத்தது யார் எனத் தெரியவில்லை... அங்கேயே ஆரம்பித்து விட்டது பிரச்சினை...

இந்த கண்ணாடிகள் யாரால், எப்போது கண்டுப்பிடிக்கப்பட்டு உபயோகத்துக்கு வந்தன என்பதும் தெரியவில்லை... (வவ்வால் இதைப் பற்றி ஒரு பதிவு எழுதினால் தெரிந்துக்கொள்ளலாம்...)

நான் இதைப்பற்றி பேச வந்தது ஒரு ஜாலிக்காக...

நானும் என் நண்பரும் பேசிக்கொண்டிருக்கையில் கண்ணாடிகள் பற்றி பேச்சு வந்தது.. தூரத்தில் காஃபி சாப்பிட்டு கொண்டிருந்த யாரோ ஒருவர் அணிந்திருந்த கண்ணாடியை பார்த்து விட்டு, "அந்த காலத்துல ப்ரதாப் போத்தன் போட்ட கண்ணாடி மாதிரியே இருக்கு" என்று சிரித்து கொண்டிருந்தார் நண்பர்..

ஆனால் ஒன்று ஒப்பு கொள்ள வேண்டும், கேரக்டருக்காக கண்ணாடி போட்டு எவ்வளவோ பேர் நடித்திருக்கலாம். ஆனால், ஒரு ஹீரோவாக பயப்படாமல் இமேஜ் பார்க்காமல் கண்ணாடிப் போட்டு நடித்தவர் பாக்கியராஜ் தான்.

அதுவும் சாதா கண்ணாடியல்ல பூதக்கண்ணாடி...
என்னென்ன வித்தை காட்டுவார்.... அதை கழட்டி வைத்தால் ஃபைட் செய்யப்போகிறார் என்று அர்த்தம்.. அதை லைட்டாக அட்ஜஸ்ட் செய்தார் என்றால் ஏதோ காமெடி வசனம் பேச போகிறார் என்று அர்த்தம்...

யோசித்து பார்க்க வேண்டும்.. கண்பார்வை கோளாறுக்காக தான் கண்ணாடி போடுகிறார்கள். ஆனால் சமூகம் அதை எவ்வாறெல்லாம் எதிர்கொள்கிறது...

உதாரணமாக திரைப்பட கதாநாயகிகள், சிறு வயதில் கஷ்டப்பட்டு ஒரு நல்ல நிலையை அடைவதாக திரைக்கதை இருக்கிறது என்றால் ஒரு கண்ணாடியை அந்த நாயகிக்கு மாட்டி விடுவார்கள்.. முடிந்தது.. அவள் கலெக்டர் என்றோ, டீச்சர் என்றோ மக்கள் ஒப்புக் கொண்டு விடுவார்கள்...("சூர்ய வம்சம்" படத்தில் கூட பார்க்கலாம்...தேவ்யானி ஆட்சியர் ஆன உடனே கண்ணாடியுடன் தோன்றுவார்)... கண்ணாடியென்றால் சாதாரண கண்ணாடி அல்ல... பஸ் முன்பக்க கண்ணாடி அளவிற்கு பெரிய கண்ணாடி போட்டால் தான் செல்லும்...

விஜய் கூட தனக்கிருந்த ப்ளே பாய் இமேஜை உடைத்து நல்ல பையன் இமேஜுக்கு மாற கண்ணாடி அணிந்து சில படங்களில் தோன்றினார்... அதற்கு பலனும் கிடைத்தது...

கண்ணாடி போட்டால் அறிவாளி, அறிவுஜீவின்னு ஒரு நினைப்பு பரவலாக இருக்கவே செய்கிறது... இது எப்படி ஏற்பட்டது என்று தான் புரியவில்லை...

ஆனால் இந்த கண்ணாடியை போட்டு கொண்டு நம்மாட்கள் செய்யும் அக்கப்போர் இருக்கிறதே... சொல்லி மாளாது...

பஸ்ஸில், கண்ணாடியை ஸ்டைலாக கழற்றி அதை "ஹா..." என்று வாயினால் ஊதி லாவகமாக கர்ச்சீப்பினால் துடைப்பர்கள்... உடனே நாமும் நம் முகத்தை துடைத்துக் கொள்ள வேண்டும் இல்லையென்றால்.. கவுண்டமணி மாதிரி ஆவி அடிச்சிடுச்சிப்பா என்று மயங்கி சரிய வேண்டியது தான்...

சினிமாவில் டாக்டர்கள் கண்ணாடி போடுவதே கடைசி சீனில் அதை கழட்டி "காட் ஈஸ் க்ரேட்" என்று சொல்வதற்கு தான் என்று ஒரு S.V. சேகர் நாடகத்தில் கூட வரும்...

கண்ணாடி போடாத ஆளை ஆசிரியர் என்றோ, டாக்டர் என்றோ, விஞ்ஞானி என்றோ, கலெக்டர் என்றோ நம் மக்கள் சினிமாவில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அவர்களுக்கு ஒரு நினைப்பு போல...

நிஜத்தில், கண்ணாடி போட்ட மாணவர்கள் என்றாலே படிப்பாளிகள் என்று சக மாணவர்கள் ஒரு முடிவுக்கு வந்து விடுவார்கள்...எனக்கு தெரிந்து என் நண்பன் ஒருவன் ஒவ்வொரு பரீட்சையிலும் சொல்லி சொல்லி கோட் அடிப்பான்... ஆனால் அவன் கண்ணாடி போட்ட ஒரே காரணத்துக்காக சாரின் பிரம்படியில் இருந்து தப்பி விடுவான்...

இப்படி கண்ணாடி அணிந்த பையனை படிப்பாளி என்று நம்பி, அவனை பார்த்து காப்பி அடித்து, பெயில் ஆகி அப்புறம் அவனை அடித்த கதையெல்லாம் உண்டு எங்கள் பள்ளியில்...

கண்ணாடி அணிந்த பெண்ணை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள் நம் பையன்கள்.. ரொம்ப இன்ஃபீரியராக ஃபீல் பண்ணுவார்கள் போல.. கண்ணாடி போட்ட பையன்களும் இதற்கு விதி விலக்கல்ல... ஒரு வேளை ரொம்ப நல்ல பெண்.. நம்மிடம் பேச, பழக துணிய மாட்டாள் என்ற எண்ணமோ என்னமோ...

கண்ணாடி போட்டா ஓவர் டீசண்டா தெரிது மச்சி என்று காண்டாக்ட் லென்ஸ் போட்ட நண்பர்களும் இருக்கிறார்கள்...

ஒரு காலத்தில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் திருமணம் நடப்பதற்கே கண்ணாடி போடுதல் என்பது ஒரு ஸ்டிராங்கான முட்டுக்கட்டையாக இருந்து இருக்கிறது... மாப்பிள்ளை கொஞ்சம் வயசானவர் மாதிரி தெரியலை? என்று கேட்டு குழப்பி கல்யாணத்துக்கு கும்மி அடித்து விடும் பக்கத்து வீட்டு அக்காக்கள் எவ்வளவோ பேர் இருந்திருப்பார்கள்... என்னடா பெண்ணுக்கு நாலு கண்ணாமே என்று மாப்பிள்ளையை ஓட்டி கல்யாணத்தை கெட்டுக்கும் நல்ல நண்பர்களுக்கும் பஞ்சம் இருந்து இருக்காது...

இப்போ இதிலெல்லாம் கொஞ்சம் மாற்றம் வந்திருக்கிறது போல படுகிறது... (எல்லாம் எங்க தலைவி சிம்ரன் கண்ணாடி போட்டு போஸ் கொடுக்க ஆரம்பித்தது தான் என்று யாரேனும் சொல்லக்கூடும்)

நம் சமூக அமைப்பு தவிர வெளி சமூக அமைப்புகளில் இது போன்ற வித்தியாசங்கள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை...

கண்ணாடி அணிதல் என்ற விஷயம் ஏன் இவ்வளவு முக்கியமானதாக, பல முரண்களுடன், அணிபவரைப் பற்றி ஒரு தீர்மானத்தை கொடுப்பதாக நம் சமூகத்தில் இருந்தது, இருக்கிறது(?) ஒரு புதிராக தான் இருக்கிறது...