உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

புதன், ஆகஸ்ட் 06, 2008

கால் சென்ட்டர்களும் கார் டிரைவர்களும்

தூக்கத்தில் பல வகை. அதே போல் ஆர்வத்திலும் பல வகை.

ஆர்வக் கோளாறு என்றிருப்பதைப் போல தூக்கக் கோளாறு என்று ஏதாவது இருக்கிறதா என்று தெரியவில்லை...
ஆர்வம் அதிகமாக இருக்கும் போது தூக்கமும் அதிகமாக இருந்தால்?

என்னடா இவன் மேட்டரை சொல்லாமல் ஓவராக பம்ப் அடிக்கிறான் என்று தோன்றுகிறதா?

சென்னையின் ஒரு பரபரப்பான IT பன்னாட்டு நிறுவனம். (மெட்ராஸ் பாஷையில் கால் சென்டர். தொலைப்பேசும் செய்யும் வேலை நடந்தாலும் நடக்கா விட்டாலும், அனைத்து BPO மற்றும் IT கம்பெனிகளுக்கும் இது தான் பொது பெயர்)

இந்த மாதிரி நிறுவனங்களில் பணியாளர்கள் ஓவர் டைம் செய்து வேலைப் பார்ப்பதெல்லாம் ரொம்ப சகஜம். முதல் நாள் காலை உள்ளே சென்று மறுநாள் இரவு திரும்புவதெல்லாம் சர்வ சாதாரணம்.

இப்படி கஷ்டபட்டு உழைக்கும் பணியாளர்களை நிறுவனமும் நன்றாக கவனிக்கவே செய்கிறது... அகால நேரத்தில் பணிக்கு வரும், போகும் பணியாளர்களுக்கு அலுவலகம் வந்து போக கார் வசதியும், ஏனையோருக்கு பஸ் வசதி உண்டு... இது போல நேரம் காலம், கண்ணு மண்ணு தெரியாமல் கடுமையாக உழைத்து களைத்த பணியாளர்களை நிறுவன ஒப்பந்த வாகனங்களில் அவர்கள் வீடு வரை கரை சேர்க்கவும், (உடனே )பிக்கப் செய்வதற்குமான வசதியை எல்லா நிறுவனங்களும் தருகின்றன....

இந்த ஒப்பந்த வாகனங்களின் கதை ஒரு சோக கதை...

பெரிய டிராவல் நிறுவனங்கள் இந்த வாகன ஒப்பந்தங்களை IT நிறுவனத்துடன் செய்துக் கொள்ளும்... இத்தனை வாகனங்களை IT நிறுவனத்தின் சார்பாக இயக்க வேண்டும் என்பதாக... பெரிய டிராவல் நிறூவனத்திடம் அவ்வளவு வாகனங்கள் இருக்காது... அவர்கள் சிறிய டிராவல் நிறுவனங்களிடமும், டூரிஸ்ட் வாகன ஓட்டிகளிடமும் துணை ஒப்பந்தங்கள் செய்து கொள்வர்...

இப்படிப் பட்ட வாகனங்களில் டிரைவராக பணியாற்றும் ஜீவன்கள், எப்போது என்ன பிக்கப், என்ன டிராப் தருவார்கள் என்று தெரியாமல் வாகனத்திலேயே IT நிறுவன வளாகத்தில் காத்திருக்க வேண்டும்....

இன்ன இடத்துக்கு, இத்தனை மணிக்கு, இத்தனை பேருக்கு வாகன வசதி தேவை என்ற தகவல் பணியாளரிடமிருந்து IT நிறுவன வாகன உதவி மையத்துக்கு போகும். அங்கிருந்து அதே வளாகத்திலேயே இருக்கும் பெரிய டிராவல் உதவி மையத்துக்கு இந்த தகவல் சேர்க்கப்படும். அங்குள்ள நபர் இதை ஏதவது ஒரு துணை ஒப்பந்த டிராவல் நிறுவன பொறுப்பாளரிடம் தருவார். அவர் எந்த வாகனத்துக்கு இந்த ட்ரிப்பை தருவது என்று வாகன இருப்பை பொறுத்து முடிவெடுத்து வாகனங்களை பணிப்பார்.

இப்படி பெரிய சுற்றுக்கு பின் டிரைவரிடம் அந்த ட்ரிப் ஷீட் வந்து சேரும். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பணியாளர் வந்து அமர்ந்தவுடன் வாகனம் அவரை குறிப்பிட்ட இடத்துக்கு கொண்டு சேர்க்கும்... இப்படி ஒவ்வொரு துணை நிறுவனமும் நூற்றுக்கணக்கில் வாகனங்களை பணியில் அமர்த்தியிருக்கும்.

இவைகளில் டிரைவராக பணியாற்றும் பெரும்பான்மையானோர் தென் தமிழ் நாட்டில் இருந்து வந்தவர்கள்..

அங்கன, இங்கன… அங்கிட்டு, இங்கிட்டு என்று வட்டார மொழியில் பேசிய படி சென்னை முழுதும் அதகளம் செய்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருப்பவர்கள்.

இந்த பின் புலம் போதும்...

ஒருநாள் அதிகாலை 3 மணி சுமார்... பின்னிரவு நேரம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும்... பணியையும், நிறுவனத்தையும் பெரிதும் நேசிக்க 2 நாட்களாக கட்டாயப் படுத்தப்பட்ட ஒரு கொலைவெறி பணியாளர்.. களைப்பாக அந்த வாகனத்துக்கு வந்து சேர்ந்தார்... வேறு வாகனம் எதும் இல்லாததால், ஒரு புத்தம் புது டிரைவர் ஒருவருக்கு அந்த டிராப் கிடைத்தது... அவர் சென்னைக்கு மட்டுமல்ல, கால் சென்டர் வாகன தொழிலுக்கே புதிது... யாரோ சொந்தக்காரர் ஒருவர் டிராவல்ஸ் ஒன்றில் வண்டி போட்டதால் திடீர் டிரைவராகியிருந்தார்...

நம் ஓட்டுநருக்கு ஆங்கிலம் தெரியாது...ட்ரிப் ஷீட் ஆங்கிலத்தில் தான் இருக்கும்..

"எங்கே சார் டிராப் செய்யனும்" என்று சூப்பர்வைசரை கேட்க, அவர் எரிச்சலாக
"திருமங்கலம்... ஏன் தொரை படிக்க மாட்டீயளோ"

என்று சொல்லிவிட்டு கிளம்ப யத்தனிக்க...

"சார் அவ்வளவு தூரம் போய் வர்றது கஷ்டம் சார்"

"வெங்காயம்... தினம் போய் வர்றவன் பைத்தியக்காரனா... போய்ட்டு வெரசா வாடே"

முதலில் ஓட்டுநருக்கு சற்று குழப்பம் இருந்தாலும் முதன் முதலில் புது கம்பெனியில் கிடைத்த பிக்கப் ஆகையால் அதீத ஆர்வத்துடன் புறப்பட்டார்... பணியாளர் 2 நாள் கம்ப்யூட்டரில் வெந்த களைப்பில் செம தூக்கக் கலக்கத்தில் இருந்தார்... வந்த வேகத்தில் பின் சீட் முழுதும் ஆக்ரமித்து படுத்து...

“திருமங்கலம் வந்ததும் சொல்லுங்க... வீட்டுக்கு வழி சொல்றேன்..."

அவ்வளவு தான் ஆள் மட்டையாகி விட்டார்..

வண்டி சென்றது... சென்றது... சென்றது... டீ குடிக்க ஒன்று இரண்டு இடங்களில் நின்றது... சென்றது.. திண்டிவனம், விழுப்புரம் நடுவே எங்கோ வரும் போது நம்ம கொலைவெறிப் பணியாளர் எழுந்து விட்டார்... ஸ்லோமோஷனில் வாட்ச்சை பார்த்தவர்… குழப்பமாய்…

"என்னங்க... எங்க போயிட்டிருக்கோம்?"

"சார் இப்ப தான் திண்டிவனம் தாண்டிப் போயிட்டிருக்கோம்... திருச்சி, மதுர அப்புறம் தான் திருமங்கலம்… இன்னும் நேரமிருக்கு படுங்க"

சென்னை அண்ணா நகரை அடுத்த திருமங்கலத்துக்கு போக வேண்டிய கொ.வெ. பணியாளர் போட்ட அலறலில் நெடுஞ்சாலை மொத்தமும் திரும்பி பார்த்ததாம்...

அய்யோ…அய்யோ…

இப்போது முதல் பாராவை மறுபடி படியுங்கள்...

(திரைக்கதை வசனம் தான் நான் எழுதியது... கதை உண்மையான சம்பவம்...)

(தலைப்பு முழுதும் ஆங்கிலம்... மன்னிக்க)

செவ்வாய், ஆகஸ்ட் 05, 2008

அமெரிக்காவின் திடீர் கரிசனம்

அமெரிக்க உளவு நிறுவனம் திடீரென ஆஃப்கானிஸ்தான் இந்திய தூதரகம் மீதான குண்டு வெடிப்பில் ISI-யின் பங்கும் இருக்கிறதென குற்றம் சாட்டுகிறது...

அமெரிக்க அதிபர் பாகிஸ்தான் பிரதமரை ISI யார் கட்டுப்பாட்டில் உள்ளதென்று கேள்வி கேட்கிறார்..


என்ன மாயம் இது?

இத்தனை நாளாக இல்லாமல் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் தவறு செய்கிறதென புரிந்து விட்டதா?


இந்தியாவின் ISI குறித்தான குற்றச்சாட்டுகளில் நம்பிக்கை பிறந்து விட்டதா?

கீழ்க்கண்ட தனித் தனி விஷயங்களை பாருங்கள்...

1) இந்தியா மற்றும் சீனா இரண்டும் கலாச்சார பாரம்பரியம் மிக்க நாடுகள்...

2) கலாச்சார பாரம்பரியம் மிக்க நாடுகளே வல்லரசாக முடியும் என்று கலாச்சார போர்கள் பற்றிய பிரபலமான மேனாட்டு புத்தகங்கள் சில சொல்லும் செய்தி...கலாச்சாரமில்லாமல் இருப்பதே தங்கள் கலாச்சாரம் என்று இருக்கும் அமெரிக்கர்கள் ஒன்று கலாச்சார முகமூடி அணிய வேண்டும் அல்லது கலாச்சாரங்களை கெடுக்க வேண்டும்... இரண்டாவது வழி தான் எளிது...

3) இந்தியா, சைனா இந்த இரண்டு பெரும் கலாச்சார சக்திகளுள் கூட்டு வைக்க அமெரிக்காவுக்கு முதலாளித்துவ இந்தியாவே சரி...

4) பாகிஸ்தானோ சீனாவுடன் மறைமுக உறவு கொண்டுள்ளது... இந்தியாவும் சீனவும் பரம வைரிகள்...


5) இந்தியாவின் அணு சக்தி இப்போது அமெரிக்காவின் கண்காணிப்பில்...

6) என்ன இருந்தாலும் பாகிஸ்தான் ஒரு முஸ்லிம் நாடு... பழமைவாதிகள் அமெரிக்
காவை செத்தாலும் ஆதரிக்க மாட்டர்கள்...

7) மத்திய கிழக்கில் இஸ்ரேல் குவைத் போல, சீனவுக்கு அருகில் அமெரிக்காவுக்கு ஒரு ஸ்ட்ராங்கான தளம், கூட்டாளி தேவை...

8) இந்தியாவில் உள்ள அறிவு வளம் (சேவை மலிவு விலையில் கிடைக்கும்), மனித வளம் (பொருட்களை விற்பனை செய்ய மார்க்கெட்) இரண்டும் அமெரிக்
காவை வழி நடத்தும் பன்னாட்டு நிறுவனங்களை கவர்ந்து இழுக்கிறது...

இவற்றுள் ஒன்றோ, ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்களோ அமெரிக்கவின் இந்த திடீர் கரிசனத்துக்கு காரணமாக இருக்க கூடும்...

இதன் கேயோஸ் தியரி, மற்றும் பட்டர்பிளை எஃபக்டுகளை அவரவர் கற்பனைக்கே விடுகிறோம்...

திங்கள், ஆகஸ்ட் 04, 2008

திகிலூட்டும் தினசரிகள்

இன்று ஒரு தமிழ் நாளிதழ் ஒன்றின் தலைப்புச் செய்தியைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டேன்...

பத்திரிகையில் இன்று என்ன முக்கியமான நிகழ்வை கவர் செய்துள்ளார்கள் என்று தெரியப்படுத்தி பொதுஜனத்தை தினசரியை வாங்க வைக்க கடைகளில் தொங்க விடுவார்களே அந்த தலையங்க பக்கத்தில்,

"2 மணி நேரம் கழிவறையில் சிக்கித் தவித்த நடிகர்" என்றுச் சுடச் சுட அறிவிப்பு கொடுத்து அசத்தியிருந்தார்கள்.

அதுவும் எதன் கீழே... ஹிமாச்சல பிரதேசத்தில் நெரிசலில் சிக்கி 130 பேர் பலி என்ற செய்தியின் கீழே...

ஆஹா பிரமாதம் என்று நீங்கள் புகழ்வது கேட்கிறது...

மக்கள் யாரந்த நடிகர் என்று ஆர்வமாக பத்திரிகையை வாங்கி படித்து விடுவார்களாம்... சேல்ஸ் பிய்த்து கொண்டு போகுமாம்... இது தான் அந்த தலையங்கத்தின் நோக்கமாக இருக்க கூடும்...

மக்களின் ரசனையை உருவாக்குவதில் பெரும் பங்கு இது போன்ற தினசரிகளுக்கு தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது...

இறந்த வாலிபரின் ஜட்டி அம்பு குறியிட்டு காட்டப்படுவதில் தொடங்கி... கள்ளக் காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை வரை சுவாரசியமாக விவரிக்கும் இன்றைய தினசரிகள் அதில் பாதி சிரத்தையைக் கூட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளுக்கு தருவதில்லை...

அமெரிக்காவுடன் ஆன அணு ஒப்பந்தம், அது குறித்தான சர்ச்சைகள், விலைவாசி உயர்வு, பொருளாதார பின்னடைவுக்கான காரணம், உலக மயமாக்கல், உலகம் வெப்பமடைதல், புவிச்சுற்றும் வேகம் குறைதல், ஒஸோன் படலம், உலக நிகழ்வுகள் இப்படிப் பட்ட விஷயங்களை பற்றி உண்மையான சிரத்தையோடு செய்திகளையோ, விவாதங்களையோ முன் வைத்தது உண்டா?

மிஞ்சி போனால் வருடத்தில் ஒரு முறை ஆர்ட்டிக்கிள் ஒன்று எழுதி விடுவார்கள் அல்லது ஒரு சப்ளிமென்ட் போட்டு விடுவார்கள்...

எதிர்மறை விளைவுகளை சமூகத்தில் உண்டாக்கும் செய்திகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை குறைத்து.. பாஸிட்டாவான விஷயங்களுக்கான முக்கியத்துவத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பது என் தனிப்பட்ட தாழ்மையான கருத்து...

நடிகர் ஸ்ரீமன் கேரவன் கழிவறையில் மாட்டிக்கொண்டதை தெரிந்து தெளிவு பெறுவதை காட்டிலும் நம் மக்கள் தெளிவு பெற இன்னும் நிறைய செய்திகள் இருக்க கூடும்...

நயன்தாராவுக்கு ஏற்பட்ட இடுப்பு சுளுக்கையும், ரஜினிகாந்த் அடித்துக் கொண்ட மொட்டையையும், கமல்ஹாசன் வைத்துக்கொண்டிருக்கும் புது சிகை அலங்காரத்தையும், சினிமா பத்திரிகைகள் எழுதட்டும்... தினசரிகள் ஏன் மெனக்கெட்டு தலையங்கம் எழுத வேண்டும்?

சமுதாயப் பொறுப்புணர்வு என்பது அவரவர்கட்கு வர வேண்டும்.. நாம சொல்லி திருந்தி விடப் போகிறார்களா என்ன?

தனி மனித ஒழுக்கம் என்பது நாம் சார்ந்துள்ள சமூகத்தினால் தான் தீர்மானிக்கப் படுகிறது.. அத்தகைய சமூகம் எதை கேட்க வேண்டும், எதைப் பார்க்க வேண்டும் என்று தீர்மாணிக்கும் அதிகாரத்தில் உள்ள தினசரிகள், தொலைக்காட்சிகள், வானொலிகள், வார மாத பத்திரிகைகள் போன்ற வெகுசன ஊடகங்கள் தத்தம் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.