உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

ஞாயிறு, ஜனவரி 31, 2010

ஆயிரத்தில் ஒருவன் - நானும் கொஞ்சம் திட்டிக்கறேன்

குறை சொல்வது மட்டும் தான் இந்த பதிவின் நோக்கம்...

ஆங்கிலத்தில் எப்படி எடுத்தாலும் பார்க்கிறீங்க... தமிழ்ல எடுத்தா ஏன் லாஜிக் பார்க்கறீங்க என்று புத்திசாலித்தனமாக கேள்வி கேட்பவர்களுக்கு...

ஆங்கில படத்துல எதை காமிச்சாலும் ஒத்துகறாங்கன்னு சொல்லாதீங்க... அவன் லாஜிக்கலா நம்பற மாதிரி காமிக்கறான்..
லாஜிக்கலா காட்சியமைப்பு வைக்கிறதுக்கும் தொழில்நுட்பத்துக்கும் சம்மந்தம் இல்லை...காதுல எவ்ளோ பூ சுத்துற விஷயத்தை கூட வாயில பேசியே லாஜிக்கலா நம்பற மாதிரி எடுக்கலாம்.. "A man from Earth" படம் பாருங்க...

உங்களுக்கே புரியும்
 ஆயிரத்தில் ஒருவன் படத்தை பொருத்தவரை கதைக்களம் அற்புதம்...

அற்புதமான செட்கள், நல்ல ஒப்பனை, சிறந்த ஒளிப்பதிவு...

தமிழ்ப்படத்துக்கான குறைந்த பட்ஜெட்டுக்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் செய்து காட்டியுள்ளார் செல்வராகவன்...

வாழ்த்துக்கள் அதற்கு மட்டும் தான்...

குறைகளும், கேள்விகளும் தான் நிறைய...
பாண்டியர்-சோழர்களுக்கான Vengeance சரியாக சொல்லப்படவில்லை... வரலாறு பாடத்தில் வீக்காக இருப்பவர்களுக்கு சரியாக புரியாமல் போகும் அபாயம் இருக்கிறது...


அந்த மாதிரி ஒரு இடத்தில் செட்டில் ஆகும் சோழன் கையை காலை வைத்துக் கொண்டு 800 ஆண்டுகள் சும்மா இருப்பான் என்றா நினைக்கிறீர்கள்? அக்கம் பக்கத்தில் உள்ள நாடுகளை எல்லாம் கொஞ்ச நாளில் பிடிப்பது மட்டுமல்ல... 10-20 வருடங்களில் பெரும் படையை திரட்டி மறுபடி தமிழகத்துக்கு கலத்தில் வந்து பாண்டியர்களின் தலைகளை கதிரறுத்து இருப்பான்...

இது சோழனுக்கு மட்டுமல்ல அனைத்து தென்னிந்திய அரசர்களுக்கும் பொருந்தும்.. நரசிம்ம பல்லவன், பராந்தக சோழன், பாண்டியன் மாறவர்மன், விக்கிரமாதித்ய சாளுக்கியன், கரிகால சோழன் இப்படி சொல்லி கொண்டே போகலாம்...

அதுவும் கடாரம், ஸ்ரீ விஜயம் எல்லாம் சோழனுக்கு தண்ணிப்பட்ட பாடு... Sea Expedition-ல் 200 வருடம் கொடிக்கட்டி பறந்தவர்கள் சோழர்கள்...
சோழர்கள் பாண்டியர்கள் என்று சொல்லாமல், வேறு ஏதோ கற்பனையான இரண்டு விரோத இனங்கள் என்று கதையை அமைத்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்.. சோழனையும், அவர் வீரத்தையும் பற்றி நிறைய படித்து விட்டு... சோழன் ஒளிந்து கொண்டிருப்பான், மறைந்து வாழ்ந்து கொண்டிருப்பான் என்றால்.. மனது கேட்க மாட்டேன் என்கிறது...

உச்சக்கட்ட காட்சியில் சோழர்களை எதிர்க்கும் பாண்டியர்கள், பாண்டியர்களின் பழைய கால உடையோடு கையில் கேடயம், வாளோடு தோன்றுவது செம காமெடி.. அவர்கள் தான் சோழர்களை உயிரோடு எதிர்பார்த்திருக்க வில்லையே.. அப்புறம் அந்த உடைகளை எப்படி தயாராக வைத்திருந்தார்களோ?

சோழர்கள் ஆட்சி காலத்தில் எங்கேயும் அந்த கிளாடியேட்டர் மைதானத்தில் நடப்பது மாதிரி சண்டையெல்லாம் நடந்ததாக படித்ததாகவோ கேட்டதாகவோ நினைவில்லை... சுவாரசியத்துக்காக சேர்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்...

இவை ஒரு புறம் இருக்கட்டும்..
இந்திய ராணுவம் ஹெலிகாப்டரில் ஆட்களையும் ஆயுதங்களையும் ரீமா சென் குழுவிற்கு சப்ளை செய்யும் வரை வியட்நாமிய அரசும் சீன அரசும் பல் குத்தி கொண்டிருக்குமா?..

சரி இது Stealth ஆப்பரேஷன் ரகசியமாக செய்யபடுகிறது என்று வைத்துக் கொண்டாலும், ஹெலிகாப்டரில் சுளுவாக போக முடிகிற இடத்துக்கு எதுக்குய்யா கப்பல்ல போய், கொலைகார பயபுள்ளை மீன்கிட்ட மாட்டி, காட்டுவாசிகிட்ட மாட்டி, காட்டு வீரர்கள் கிட்ட கத்தியில வெட்டு வாங்கி.... தியேட்டர்லயே சிப்பு வந்துடுச்சு.. சிப்பு..

மறுபடியும் சொல்றேன்.. இங்கிலீஷ் படத்துல எதை காமிச்சாலும் ஒத்துகறாங்கன்னு சொல்லாதீங்க... அவன் லாஜிக்கலா நம்பற மாதிரி காமிக்கறான்.. இந்த லொகேஷனோட அட்ச-தீர்த்த ரேகையெல்லாம் தெரிஞ்சா தான் ஹெலிகாப்டர்லவர முடியும்… அதனால தான் முதல்லயே ஹெலிகாப்டர்ல வராம கப்பல்ல வந்தோம்னு ஒரு டயலாகாவது வெச்சிருந்தா டைரக்டர் புத்திசாலி...

குகைக்குள் பசியால் வாடும் மக்களாம்.. ஒரு பெரிய நகரம் வெளியே இருந்து இருக்கிறது... தங்கப் பாத்திரங்களாக இறைந்து கிடக்கும் அந்த ஊரில், வியாபாரம் செய்து மக்களின் பசியாற்றும் வியாபார வித்தை கூடவா சோழனுக்கு தெரியாது? பாண்டியனுக்கு பயந்து வளைக்குள் எலி போல் சோழன் 800 ஆண்டுகள் ஒளிந்திருப்பான் என்று நம்ப முடியவில்லை...

சோழர்களின் பொறிகள் என்றவுடன் ஏதோ விஞ்ஞானம், அறிவியல் ரீதியான புத்திசாலித்தனமான பொறிகளை காண்பிக்கப் போகிறார்கள் என்று பார்த்தால்... ஏமாற்றம்… ராமநாராயணன் படம் பார்த்தது போல் இருக்கிறது...

அநாவசியமாக எப்போதோ தமிழ்ப்பாடத்தில் படித்த கொல்லிமலை பாவையெல்லாம் நினைவுக்கு வந்து தொலைத்தது...

ரீமா முதுகில் புலி சின்னத்தை கிராஃபிக்ஸில் காட்டும் இடம்.. நடராஜர் நிழலில் மட்டும் பூமி பிளக்காத இடம்.. கடைசிக் காட்சியில் பிரடேட்டர் போல கார்த்தி மறையும் காட்சி... ராஜகுரு சம்மந்தப்பட்ட காட்சிகள்… எல்லாம் மூடநம்பிக்கைகளை ஆதரிப்பவைகளாக இருக்கிறது..

தெய்வாம்சம் பொருந்தியவர்கள், மாந்தரீகத்தில் சிறந்த சோழர்கள்.. அதை வைத்தே அத்துணை ராணுவ வீரர்களையும் பைத்தியமாக்கியிருக்க கூடாதா?... அவர்களுடன் அநாவசியமாக சண்டை போட்டு ஏன் மடிய வேண்டும்..

இதை Fantasy அட்வென்சர் படமா எடுக்கிறதா, இல்லை Real அட்வென்சர் படமா எடுக்கறதா அப்படின்னு செல்வராகவனுக்கு கடைசி வரை குழப்பமாவே இருந்திருக்கும்னு தோணுது...

கார்த்தியின் மொழியும், அவரின் நடவடிக்கைகளும் தான் ஒரிஜினல் செல்வராகவனின் டச்….

செல்வராகவன்... உங்க களம் நெத்திப் பொட்டுல அறைஞ்ச மாதிரி உணர்வுகளை சொல்ற கதைகள் தான்.. திரும்பி வந்துடுங்க...

பசிக்கொடுமை, அதிகார வர்க்கத்தின் சித்திரவதைகள், நல்லது நடக்கும், தாய் நாட்டிலிருந்து நல்ல செய்தி வரும் என்று காத்திருக்கும் பரிதாபமான மக்கள், கையறு நிலையிலுள்ள அவர்களின் தலைவன், அவர்களின் மொழி, அவர்களை பழி வாங்க துடிக்கும் ஒரு பாதிக்கப்பட்ட பெண் எல்லாரும் சந்தேகப்படறது போல எனக்கும் என்னவோ சொல்ல வர்றீங்கன்னு தான் தோணுது செல்வா... அது தான் உங்க மறைமுகமான எண்ணம்னா வெறும் வாயால சவடால் விடறவங்களுக்கு நடுவுல அதை வெளிச்சம் போட்டு காட்டுற உங்க உணர்வுக்கு நான் தலை வணங்கறேன்...

சனி, ஜனவரி 23, 2010

வித்தியாசமான பொழுதுப் போக்குகள்


வாழ்க்கை சுவாரசியமாக இருக்க வேண்டுமென்றால் நம் எல்லோருக்கும் ஒரு பொழுது போக்கு கண்டிப்பாக தேவைப்படும்...


ஓவியம் வரைதல் (அப்படி தான் சொல்லிகணும்.. பையனுக்கோ பொண்ணுக்கோ ஸ்கூல்ல ஏதோ வரைய சொன்னாங்கன்னு ஏதாவது வரைஞ்சு கொடுத்துட்டு, அடுத்த முறை பேரண்ட்ஸ் டேக்கு முக்காடு போட்டுட்டு போற அளவுக்கு மோசமா இல்லைன்னாலும் ஏதோ ஓவியன்னு எல்லாரும் ஒத்துக்கற அளவுக்கு வரையறது),


புத்தகம் படித்தல் (நெறைய பேருக்கு தூங்கறதுக்கு இது தான் முக்கிய தூண்டுகோல். புத்தக விழாவுக்கு போயிட்டு வந்த கொலைவெறி, பின் நவீனத்துவ பதிவருங்க ரெக்கமண்ட் பண்ணின புத்தகத்தை படிச்சுட்டே தூங்கினா ஸ்பெஷல் எஃபக்ட் உண்டாம்... கனவே வர்றதில்லையாம்.. நைட்டு அதையெல்லாம் சும்மா மேலோட்டமா படிச்சுட்டு படுத்த ரெண்டு மூணு பேரு காலைல எந்திரிக்கவேயில்லைன்னு கூட கேள்விப்பட்டேன்… கம்ப ராமாயணத்தை பரம்பரை பரம்பரையா படிச்சு, இன்னும் முடிக்காத ஒரு குடும்பத்தை எனக்கு தெரியும்),


இளிச்சவாயன்னு யாராவது சொன்னாலும் சிரித்து கொண்டே இருப்பேன் என்று வெறித்தனமாக விடியற்காலை வரை விழித்திருந்து, அரைத்த மாவையே அரைக்கும் நகைச்சுவை சேனல்களை விடாமல் மாற்றி மாற்றி பார்த்தல்,


வாயும் நாக்கும் சுளுக்கும் அளவுக்கு பின், முன், சைடு நவீனத்துவங்களை நண்பர்கள் வேண்டாம், வேண்டாம் என்று கதற கதற கேட்காமல் விவாதித்தல்,


எவ்ளோ மொக்கை படமானாலும் முண்டியடித்து மொத நாள் பாத்துட்டு, ங்கொய்யாலே படமா எடுத்துருக்கான், டைரக்டர் மட்டும் என் கைல கெடச்சான் அவ்ளோ தான் என்று படம் பார்க்காத அப்பாவி நண்பர்களிடம் அகிரா குரோசவா வாரிசு போல உறுமுதல்,


சும்மா போகிறவர்களை ஆஃப் ஒன்றை வாங்கி வைத்து ஆசைக்காட்டி, குடிக்க வைத்து, தனக்கிருந்த ஒரே காதலையும், அது பெய்லியரான பீலிங்க்ஸையும் அவர் டர்ராகி வாந்தி எடுத்து வந்த வழி ஓடும் வரை புலம்பி தீர்த்தல்,


ராங் ரூட்டில் சென்ற படி லேன் மாறி போறான் கம்முனாட்டி, இவனுங்களால தான் ஆக்ஸிடெண்ட் ஜாஸ்தியாயிடுச்சு என்று ரூல்ஸ் ராமானுஜம் போல் அங்கலாய்த்தல்,


இப்படி நமக்கு பல ரெகுரலான ஹாபி, அதான் பொழுது போக்கு உண்டு என்றாலும்...


வெளிநாடுகளில், பொழுது போக்குகள் வித்தியாசமாய் இருக்கின்றன.. நம் நாட்டிலும் கூட பல நல்ல பொழுது போக்குகளில் ஈடுபடும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று இணையத்தில் மேயும் போது தெரிகிறது…


சும்மாச்சுக்கும் வித்தியாசமான சிலவற்றை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்..


Cloud watching


மேகத்தை பார்த்தல்... என்ன ஒரு ஹாபிடா சாமி....


நம்ம ஊர்லயும் கூட இவங்க இருக்காங்க..அண்ணாந்து வானத்தை பார்த்துட்டே இருப்பாங்க.. அமாவாசை பௌர்னமி அன்னைக்கு அவங்க கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்னு கூட சொல்வாங்க...


Garage Sale Shopping


ஒண்ணுமில்ல அங்கங்க அவங்க வீட்டுல இருக்கிற பழசு பட்டையெல்லாம் கார் கேரேஜுல போட்டு விப்பாங்க.. அதையெல்லாம் தேடிப் பிடிச்சு வாங்கறது ஒரு ஹாபியாம்...


நம்மூர்ல இது தொழில்ங்க..."பழைய இரும்பு சாமான் ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழம்"...

People Watching 

 

மக்களை பார்த்தல்.. இது ஒரு ஹாபி.. நாம காலேஜுல படிக்கும் போது பார்க்காத மக்களா... பார்த்தது இல்லாம, விசில் அடிக்கறது, கைத்தட்டி கூப்படறது, பின்னால போறதுன்னு எல்லாம் ஹாபிக்கே எக்ஸ்ட்ரா வெயிட் கொடுத்தவங்க நாங்க அப்படிங்கறீங்களா... அதுவும் சரி தான்...


ஆனா இவங்க என்ன சொல்லாங்கன்னா.. நல்லா வசதியா ஒரு எடத்துல உக்காந்துக்கிட்டு போறவங்க வர்றவங்க எல்லாரையும் பார்க்கணுமாம், அது மட்டுமில்லாம அக்கம் பக்கத்துல உக்காந்து இருக்கிறவங்க என்ன பேசுறாங்கன்னு கேக்கணுமாம்..(தூ இது ஒரு பொழப்பான்னு எல்லாம் கேட்க கூடாது)

 

Wine Making

சாராயம் காய்ச்சறதுன்னு அர்த்தம் வந்தாலும் இது அது இல்லை.. உடனே பானை, ட்யூப், போலீஸ், மாமூல் அப்படினெல்லாம் கற்பனை பண்ணக்கூடாது... ( போலீஸ், மாமூல் ரெண்டும் எப்பயும் ஒண்ணா தான் எழுதத் தோணுது.. ஒரு வேளை ரெட்டை கிளவியா இருக்குமோ.. எதுக்கும் வைரமுத்து கிட்டயோ, வாலி கிட்டயோ கேட்போம்)

வீட்டுலயே திராட்சை பழத்தையோ இல்லை எந்த கருமத்தை வெச்சோ... வைன் தயாரிக்கிறது ஹாபி... காக்டெயில் பண்றதும் ஒரு ஹாபி தான்..( பல வகை மது பானங்களை ஒண்ணா கலந்து குடிச்சு வாந்தியெடுக்கிறதுக்கு பேரு தான் காக்டெயில்)

 

Ghost Hunting


என்ன கொடுமை சார் இது... பேயை புடிக்கறது ஒரு ஹாபியா... (ஒரு வேளை கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கிறதை சூசகமா சொல்றாங்களோன்னு கேட்டது யாரு... யாராவது பெண்ணுரிமை வாதிகள் வந்து என் பதிவுல கும்மியடிச்சுட்டு போறதுக்கா?)

 என்னத்தை சொல்ல.. மூட நம்பிக்கைனாலும் அதுலயும் நம்மளை விட அட்வான்ஸா தான் போயிட்டிருக்கானுங்க...

 animal communication

 

விலங்குகளிடம் பேசுதல்... (பேசறது என்னயா.. பாட்டு பாடி பசுமாடு கிட்ட எங்காளு பாலே கறந்து காமிச்சுட்டாரு, காளையை அடக்கி காமிச்சுட்டாரு.. என்று இடையில் சத்தம் போடும் அந்த ராமராஜன் ரசிகரை(?!) கொஞ்சம் சும்மா இருக்க சொல்லுங்கய்யா)

 

இந்த காக்கா பாஷை, குருவி பாஷை, குதிரை பாஷை இதெல்லாம் கத்துக்கிறது.. (திருவள்ளுவருக்கு தமிழ் கத்து கொடுத்ததே காக்கா சித்தர் தான்யா.. இனான்ய பாஷை தெரிஞ்ச யாகவா முனிவர் வாழ்ந்த பூமிய்யா இது அப்படின்னெல்லாம் அரசியல் வாதி ரேஞ்சுக்கு அளப்பறையெல்லாம் பண்ண கூடாது)

 

stars watching

 

நட்சத்திரத்தை பார்த்தல்...

(ஒவ்வொரு வருஷமும் மத்திய அரசு பட்ஜெட் போட்டாலும் சரி, மாநில அரசு பட்ஜெட் போட்டாலும் சரி மகனே எங்களுக்கு நட்சத்திரம் தான் தெரியுது... இப்போ லேட்டஸ்டா மின் கட்டண உயர்வுன்னு சொன்னாங்களே அப்போ கூட தெரிஞ்சதே... என்று பீதியில் உறையும் மக்களே... இது அந்த நட்சத்திரம் இல்லை.. வானத்துல ராத்திரில தெரியுமே அந்த நட்சத்திரம்...)

(சினிமா நட்சத்திரம் பாக்கிறதும் ஹாபி தாங்க.. ஆனா இது அது இல்லை... )

 

கடைசியாக


cooking zany food

காமெடியான வகையில் உணவு தயாரித்தல்...

(கொய்யாலே மத்தியான டைம்ல மெகா சீரியல் எழவ என்னைக்கு கொட்ட ஆரம்பிச்சானுங்களோ அன்னைல இருந்து எங்க வீட்டு பொம்பளைங்க இப்படி தாங்க சமைக்கிறாங்க... என்று கண்ணீர் விடும் கணவன்மார்களுக்கு இந்த ஹாபி சமர்ப்பணம்)

என்னைக்காவது ஒருநாள் செமயா சமைச்சு பொண்டாட்டிய அசத்திடலாம்னு நெனைச்சு நாம சமையல்ல இறங்குவோம்ல அன்னைக்கு இந்த ஹாபிய நாம் செயல் வடிவத்துக்கு கொண்டு வந்துட்டதா அர்த்தம்...

இவ்வளவு நேரம் பொழுது போகாம எல்லாத்தையும் பொறுமையா படிச்சுட்டு, நமக்கு பொழுதே இல்லை எங்கே போக்கறது என்று அலுத்து கொள்ளும் மகா ஜனங்களுக்கு இந்த பதிவே சமர்ப்பணம்…..

இதையும் போய் பாருங்க...

http://www.buzzle.com/

http://www.notsoboringlife.com/

http://www.hobbyideas.net/


வியாழன், ஜனவரி 21, 2010

செல்போனும் செல்ஃப் எடுக்காத அம்மாவும்

செல்போனில் பேசியபடி நாம் என்னென்ன வேலைகள் பார்க்கிறோம்?


செல்போனில் பேசிக்கொண்டே நடந்து எதிரே வருபவர் மீது எசகு பிசகாக மோதி விளையாடி பின் சாரி கேட்டு வழிபவர்களை இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது...
அப்படி மோதுவதில் கணிசமான பெண்களும் சாதனை படைக்கிறார்கள் என்கிறது ஒரு ஜொள்ளி ஸாரி புள்ளி விவரம்...
(எத்தனை பேர் இப்படி இரயில்வே தண்டவாளத்தைக் கடந்து ரெயிலில் அடிப்பட்டு இறந்திருப்பார்கள் என்று ஏதவது புள்ளி விவரம் கிடைக்குமா தெரியவில்லை)


செல்போனில் பேசிக்கொண்டே சமைக்கிறேன் பேர்வழி என்று, என் தோழி கத்தரிக்காய் சாம்பார் வைப்பதற்கு பதில் கத்தரிக்காய் ரசம் வைத்த கதை எல்லாம் நடந்து இருக்கிறது... (அவள் புருஷன் அதை சாப்பிட்டு அப்புறம் அதை க்ளீன் பண்ண அவர் வாய்க்குள் டாக்டர் கத்தியை விட்டு சுற்றியது ஒரு தனிக்கதை...)


பாத்திரத்தை டிஷ் வாஷரில் வைப்பதற்கு பதிலாக வாஷிங் மெஷினில் போட்டு துவைத்த கதையும் உண்டு...


செல்போனில் பேசியபடி வாகனத்தை செலுத்துகிறோம்...


செலுத்தும் வாகனத்தின் அளவைப் பொறுத்து விபரீதங்களை ஏற்படுத்தி தானும் கஷ்டபட்டு அடுத்தவரையும் கஷ்டபடுத்துகிறார்கள்...


வீட்டுக்காரம்மாவுடன் என்ன மளிகை சாமான் வாங்கி வர வேண்டும் என் ஸ்டைலாக மொபைலில் பேசிய படியே மளிகை கடைக்குள் லாரியோடு நுழையும் லாரி டிரைவர்கள் நிறைய பேர்..


"பக்கத்துல எங்கயாவது பால் கிடைக்குதா பாருங்க"  என்ற வீட்டம்மாவின் உத்தரவை காதில் வாங்குகிறேன் பேர்வழியென்று பக்கத்தில் சைக்கிளில் போவோருக்கு பாலூற்ற முனைப்பாகி விடும் கார்காரர்கள் ஒரு புறம்....


இந்த இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கின்ற கூத்து சொல்லி மாளாது…


 பேசிக் கொண்டே போய் முன்னால் நிற்கும் வாகனத்தின் டிக்கியின் வலிமையை பரிசோதிப்பது,


குழியின் உள்ளே விழுந்து குழியின் அளவை செ.மீ க்யூபில் அளப்பது,


சிக்னலில் நிறுத்தாமல் திடீரென உணர்ந்து பிரேக் போட்டு இதை பார்த்து டென்ஷனாகி விஜய்காந்த் போல நாக்கை துறுத்திக் கொண்டு ஏய்யென்று கூச்சல் போட்டுக் கொண்டு ஓடி வரும் போக்குவரத்துக் காவலரின் இரு கால்களுக்கு நடுவே முன் சக்கரத்தை நுழைத்து வண்டியை நிறுத்துவது,


கழுத்து வலி வந்தவனை போல் கழுத்தை சாய்த்து பேசிக்கொண்டே லாரியை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் வருவதாக நினைத்து நடுவில் போவது...


அப்படியொரு அக்கப்போர்...


இந்த நகைச்சுவை சம்பவத்தை கேளுங்கள்...


என் நண்பர் ஒருவரும், அவருடைய அலுவலக நண்பர் ஒருவரும் ஒருநாள் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார்கள்...


என் நண்பர் 2 கிலோ மைதாவை கொடுத்தால் ஒரே கையில் பரோட்டாவுக்கு மாவு பிசைந்து விடுவார்.. அப்படியொரு பெரிய உருவம்... அவருடைய நண்பர் அந்த பரோட்டாவை அப்படியே மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு ஏப்பம் விடும் அளவுக்கு பெரிய உருவம்... இரண்டு பேரும் வேலை பார்ப்பது மத்திய அரசின் ஒரு துறையில்.


அவர்களுக்கு முன்னால் ஒரு இளம்பெண் தன் குழந்தையுடன் கைனெட்டிக் ஹோண்டா வண்டியில் சென்று கொண்டிருந்தார்... குழந்தைக்கு என்ன ஒரு 2 1/2, 3 வயதிருக்கும். பின்னால் உட்கார்ந்து அம்மாவை பிடித்து கொண்டிருந்தது...


போனவர் சும்மா போகவில்லை... செல்போனை ஒரு காதில் வைத்து... ஒரு கையால் ஸ்டைலாக வண்டி ஓட்டிக் கொண்டிருந்தார் போல... குழந்தை செம தூக்க கலக்கத்தில் இருந்தது... அப்படியே இந்த பக்கம் சாய்வதும், அந்த பக்கம் சாய்வதுமாய், LR ஈஸ்வரி பாட்டு கேட்டது போல அப்படியொரு சாமியாட்டமாம்...


நம் நண்பர்கள் இதைக் கவனித்து விட்டனர்... அந்த பெண்மணியை எச்சரிக்கலாம் என்று தான் முதலில் நெருங்கியிருக்கின்றனர்... ஆனால் அவர் செல்போனில் பேசுவதை பார்த்து கடுப்பாகி விட்டனர்...


எங்கோ ஒரு இடத்தில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் வேகம் குறைந்த போது.. குழந்தையை அலாக்காக கைனெட்டிக் ஹோண்டாவில் இருந்து தூக்கி தம் வண்டியில் இருத்தி கொண்டனர்...


அந்த பெண் இதை கவனிக்கவேயில்லை... அவ்வளவு சுவாரசியமான பேச்சு.. அநேகமாக ஏதாவது மெகா சீரியல் கதையாக தான் இருக்கும் என்று தோன்றுகிறது...


குழந்தையை தூக்கியவுடன் அது விழித்துக் கொண்டது போலும்.. பைக்கின் பெட்ரோல் டாங்கில் உட்கார்ந்து அப்படியொரு சிரிப்பு, எக்காளமாம்... ஹேயென்று சந்தோஷ கூச்சல் போட்டுக் கொண்டே வந்திருக்கிறது...


இவர்கள் குறுக்கும் நெடுக்குமாக இரண்டு மூன்று முறை அந்த பெண்மணியை கடந்து செல்வதும், பின் செல்வதுமாக இருந்திருக்கின்றனர்... அந்த பெண் டாங்கில் அமர்ந்திருந்த குழந்தையை அரசல் புரசலாக பார்த்தும் அடையாளம் கண்டுக்கொள்ள வில்லையாம்...


குழந்தை வேறு தன் பங்குக்கு அம்மாவை பார்த்து உற்சாகமாக கையசைத்து இருக்கிறது...


அப்போதும் அம்மையருக்கு செல்ஃப் எடுக்க வில்லையாம்... அப்புறம் இந்த குழந்தையை எங்கோ பார்த்தது மாதிரி இருக்கிறதே என்று யோசித்திருப்பார் போலும்... சட்டென்று திரும்பி பின்னால் குழந்தையை தேடியவருக்கு அப்போது தான் குழந்தையை காணவில்லை என்று உறைத்திருக்கிறது...


பிறகு தான் அந்த பைக்கில் போவது தன் குழந்தை என உணர்ந்து கூச்சல் போட துவங்கியுள்ளார்.. உடனே நம் நண்பர்கள் பைக்கை ஓரம் கட்டி நிறுத்தினார்கள்...


அந்த பெண் சற்று தூரத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு ஓடி வந்து ஏதோ சொல்ல வாயெடுத்தார்...


"உனக்கு அறிவிருக்கா?" என்று ஆரம்பித்த இரண்டு நண்பர்களும், 10 நிமிஷம் கேப் விடாமல் திட்டி தீர்த்திருக்கிறார்கள்...


கூட்டம் சேர்ந்து அவர்களும் நடந்ததை உணர்ந்து அந்த பெண்ணை பிடித்து செம கத்தாம்...


எல்லாம் சுபமாக முடிந்து கிளம்பும் போது...


அந்த குழந்தை நம் நண்பர்கள் இருவரையும் பார்த்து டாட்டா காண்பித்தது தான் ஹைலைட்...


வந்து நடந்ததை சொல்லி விழுந்து விழுந்து சிரித்தார் என் நண்பர்.


காமெடியையும் மீறி ஒரு வேளை அந்த குழந்தை தவறி விழுந்திருந்தால் என்னாகியிருக்கும் என்று எண்ணும் போது ஒரு படபடப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை...

ஞாயிறு, ஜனவரி 17, 2010

கூகிள் குரோமியம் OS - ஒரு மாற்று பார்வை


கூகிள் குரோமியம் OS பற்றி நண்பர் TVS50 எழுதிய அருமையான பதிவை சமீபத்தில் படிக்க நேர்ந்தது..


அவருக்கு மறுமொழி அளிக்கலாம் என்று ஆரம்பித்து கருத்துக்கள் நீண்டு விட்டதால் தனிப்பதிவு ஆக்கி விட்டேன்..


முதலில் அவர் பதிவுகளுக்கு எனது மனமார்ந்த பாரட்டுக்கள்.. சிறப்பான நடையில் ரொம்பவும் மெனக்கெட்டு நமக்கு புரியும் படி எழுதுகிறார்...


சிறப்பான கட்டுரை




நிறைகளை நண்பர் TVS 50 அழகாக எடுத்து சொல்லி விட்டார்.. வழக்கம் போல நாம் குறைகளை அலசுவோம்...


நிச்சயம் இது கூகிளுக்கு எதிரான பதிவு அல்ல.. நமது தனிப்பட்ட கருத்துக்கள் அவ்வளவே...


நாம் சில விஷயங்களை யோசித்தாக வேண்டும்


நம்முடைய ரகசியமான ஆவணங்களை இது போல இணைய தளத்தில் வைப்பது பாதுகாப்பானதா?


இதில் கூகிளுடைய வன்பொருள் மற்றும் மென்பொருள் மட்டுமே பயன் படுத்த முடியும்... எல்லா துறையிலும் சிறந்த மென்பொருளையோ, வன்பொருளையோ கூகிளால் தந்து விட முடியாது என்பது நிதர்சனமான உண்மை...


கூகிள் ஒரு பன்னாட்டு நிறுவனம்.. நிதிச்சுமை, நெருக்கடி காரணமாக அது செயல்பட முடியாத நிலை வந்து விட்டால் நம் ஆவணங்களுக்கு என்ன ஆகும்?


இன்று சில பல சேவைகளை இலவசமாக தரும் கூகிள், நாளை சந்தையில் அசைக்க முடியாத இடத்தை பிடித்து போட்டியாளர்களை ஒழித்து விட்டால்.. அவர்கள் வைப்பது தான் விலையாக இருக்கும்.. இதற்கு predatary pricing என்று பெயர்... பெப்ஸி, கொக்கோகோலா நிறூவனங்கள் பல நாடுகளில் காலூன்றுவது இப்படி தான்…


இந்த Information Technology யுகத்தில் ஏற்கனவே நம் தனிப்பட்ட விஷயங்களுக்கு பாதுகாப்பில்லை.. அநேகமாக நம்மை பற்றின விவரங்கள் பல கிரெடிட் கார்டு கம்பெனிகளிடமும், பல்நோக்கு நிறுவங்களிடமும் உள்ளது... இந்த அழகில் நம் ஆவணங்களையும் வலையில் சேமித்தால் அவ்வளவு தான்...


இன்னொரு விஷயமும் இருக்கிறது.. இணைய இணைப்பு இல்லவிட்டால் கூகிள் குரோமியம் OS-இல் ஆணியே பிடுங்க முடியாது...


அதே இந்த இயங்கு தளத்தில் வேகம் உங்கள் இணைய இணைப்பின் வேகத்தை சார்ந்தே இருக்கும் என்றால் அது மிகையாகாது...


டவுண்லோடு லிமிட் உள்ள இணைய இணைப்பு உள்ளவர்களுக்கு ஆப்பு தான்.. மளிகை பில்லை இண்டர்நெட் பில் அன்னபோஸ்ட்டாக தோற்கடித்து விடும்...


இந்தியாவில் இது நுழைந்து வெற்றிகரமாக செயல்பட இன்னும் 2 -3 வருடமாவது ஆகும் என்ற நிலை ஒரு புறம் இருக்க, Cloud Computing-இன்னும் வர வேண்டியது நிறைய இருக்கிறது..


உங்க பாஸ்வேர்டை தொலைச்சுட்டாலோ, எவனாவது உங்க அக்கௌண்டை களவாண்டுட்டாலோ முடிஞ்சது...


இது போன்ற விஷயங்கள் நீங்கள் பயன்படுத்தப் போகிற ஒவ்வொரு மென்பொருளுக்கும் ஏற்றார் போல மணிக்கு இவ்வளவு என்று கட்டணம் நிர்ணயித்து வசூலிப்பதில் போய் முடியும்...


பைரேட்டட் மென்பொருள் உபயோகிக்க முடியாது.. கூகிள் செர்வர் டவுன் என்றால் முடிந்தது...


கூகிள் வன்பொருளையே நீங்கள் உபயோகிக்க வேண்டியிருகுமானால் அதிலுள்ள வன்தட்டில் ஆவணங்களை பாதுகாக்கும் வசதியெல்லாம் கொடுக்க மாட்டார்களாய் இருக்கும்...


போதும் ரொம்ப பயமுறுத்தியாச்சு..


ஆனால் நிதர்சனமான உண்மை என்னவென்றால் சேவை நோக்கில் எதுவும் யாரும் செயல்படுவதில்லை.. முக்கியமாக, பன்னாட்டு நிறுவனங்கள்.. ஒரு பொருளை உபயொகிப்பதற்கு முன்பு அது கடனாகட்டும், கடன் அட்டையாகட்டும், கேபிள் கனெக்ஷனாகட்டும், வங்கி கணக்காகட்டும் பல முறை சாதக பாதகங்களை யோசித்த பின்னரே செயல்பட வேண்டும்...

வியாழன், ஜனவரி 07, 2010

திருட்டு விசிடியும், பத்தாயிரம் ரூபாய் அடியாளும்

நடிகர் சரத்குமாரின் ஜக்குபாய் படம் வெளிவரும் முன்பே இணையத்தில் வெளியிட்டதாக ஒருவரை கோயம்புத்தூரில் கைது செய்து இருக்கிறார்கள். அதை இணையிறக்கம் செய்து வெளியிட்டதாக இரண்டு விசிடி வியாபாரிகளை கைது செய்திருக்கிறார்கள்... சரி திரையரங்கில் வெளியாகும் முன் படம் எப்படி அவர்களுக்கு கிடைத்தது? விசாரிக்கிறார்கள். 


லேபில் யாரோ திருடி வெளியிட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுதாய் கூறுகிறார்கள்

லேபில் இருந்து வெளியிட்டவரை காப்பாற்ற முயற்சிக்கிறார்களோ என்று தோன்றுகிறது... அது மட்டும் அல்ல... மற்றொரு திரைப்பட விழாவில் பேசும் போதும் சரி, பேட்டிகளிலும் சரி திருட்டு விசிடிகளை கண்டிக்கிறார்களே தவிர பிரிண்ட் வெளியே போனது எப்படி என்பதை பற்றி பேச மறுக்கிறார்கள்...

சரி.. கூட இருப்பவரை காட்டிக் கொடுக்க மனம் வரவில்லையாக இருக்கும்..

அதை விடக் கொடுமை இயக்குனர் ஒருவரின் பேச்சு... பத்தாயிரம் சம்பளத்தில் அடியாள் வைக்க வேண்டுமாம்.. எல்லா நடிகர்களும் தங்கள் ரசிகர்கள் உதவியோடு திருட்டு விசிடியை ஒழிக்க களத்தில் குதிக்க வேண்டுமாம். பெரிய நடிகர்களின் ரசிகர்கள் திருட்டு விசிடி காரர்களை அடித்து உதைக்க வேண்டுமாம்..

ரசிகர்களுக்கு வேறு வேலை வெட்டி இல்லை போல.. இதை நடிகருக்கு செய்தால்.. அவர் கோடி கோடியாக பணத்தை வாங்கி கொண்டு சுகமாய் இருந்து கொள்வார்.. ரசிகனுக்கு என்ன கிடைக்கும்... அடுத்தவர் தோளில் சவாரி செய்வதின் உச்சக்கட்டம் தான் ரசிகர்கள், தொண்டர்கள் என்ற பெயரில் அவர்களிடம் இலவசமாய் தங்கள் சுயநலத்தை பேண வேலை வாங்குவது... 


இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டு வாய் கிழிய திருட்டு தவறு என்று பேசும் இயக்குனர்கள், நடிகர்கள் ஒரு விஷயத்தை யோசிக்கிறார்களா?

திருட்டு விசிடி தவறு தான்.. ஆனால் அந்நிய மொழி படங்களின் கதை, திரைக்கதை, கான்செப்ட், இசை, காமிரா கோணம், ஸ்டண்ட், நடனம் எல்லாவற்றையும் கூச்சப்படாமல் திருடி படங்களில் உபயோகப்படுத்தும் போது.. உங்கள் மனசாட்சியை ஆணியில் மாட்டி வைத்து விடுவீர்களா? அது திருட்டு இல்லையா? உங்களை என்ன செய்யலாம்? அந்நிய மொழியில் ஒரிஜினல் படத்தை எடுத்தவன் உங்களை ஆள் வைத்து அடிக்கலாமா?

திருட்டு விசிடி என்பது நிச்சயம் ஒரு தவறு தான்.. ஆனால் திருட்டுத்தனமாய் தரமான டீத்தூள் பெயரில் போலி டீத்தூள் செய்வது போல, உணவு பொருட்களில் கலப்படம் செய்வது போல இதுவும் ஒரு வகையான சமூக குற்றம்... பாதிக்கப்படுபவர்கள் சமூகத்தில் பிரபலாமாக இருப்பதால் இதை கொலைக்குற்றம் அளவுக்கு பேசுவது தான் கடுப்பாக உள்ளது...

திருட்டு விசிடி வாங்குபவர்களையும் தண்டிக்க வேண்டும் என்று ஒரு தயாரிப்பாளர் பேசியிருக்கிறார்... ரசிகர்கள் எங்கள் தெய்வங்கள் என்று கொண்டாடும் சினிமாக்காரர்களே கேளுங்கள்... திருட்டு விசிடி வாங்குபவனும் உங்கள் சினிமா ரசிகன் தானய்யா...

என் தந்தைக்கு 4000 ரூபாய் சம்பளம் இருக்கும் போது ஒரு நல்ல தியேட்டரில் சினிமா டிக்கெட் விலை 12 ரூபாய்.. இப்போது அவருக்கு 16000 ரூபாய் சம்பளம் வரும் போது நல்ல தியேட்டரில் டிக்கெட் விலை 120 ரூபாய்.. சம்பளம் 4 மடங்கு ஏறும் போது டிக்கெட் விலை 10 மடங்கு ஏறினால் குடும்பத்தோடு படம் பார்க்க வசதியில்லாத ரசிகன் என்ன செய்வான் என்று யாருமே யோசிப்பதாக இல்லை...

திருட்டு விசிடிக்கு முக்கியமான காரணமாக நான் எண்ணுவது தியேட்டரில் போய் படம் பார்க்க முடியாத கொலைவெறி ரசிகர்கள் அதை ஆதரிப்பதே காரணம்.. ஏழை ரசிகனுக்கு குறைவான டிக்கெட்டில் படம் காண்பித்தால் ஏன் திருட்டு விசிடி வாங்க போகிறான்?

திருட்டு விசிடியை ஒழித்து விடுகிறார்கள் என்றே வைத்து கொள்வோம்...
தியேட்டரில் டிக்கெட் விலையை குறைக்க வில்லை என்றால், பெரிய படங்கள் தவிர மற்ற படங்களை ரசிகர்கள் "உலகத்தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக" என்று 2 மாதத்தில் TVயில் பார்த்து விடப் போகிறார்கள்... அவ்வளவு தான்..