உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

செவ்வாய், ஏப்ரல் 08, 2008

வலையுலகிற்கு ஒரு வேண்டுகோள்

நாம் எத்தனையோ பதிவு எழுதுகிறோம்... சில பதிவுகள் புள்ளி விவரங்கள் எல்லாம் சேகரித்து எழுதி வெளியிடுவதற்குள் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கி விடுகிறது...

எல்லா பதிவர்களுமே ரொம்ப மெனக்கெட்டு தான் பதிவெழுதுகிறார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை....

ஆனால் ஒரு பெரிய விஷயத்தில் நாம் அனைவரும் கோட்டை விடுகிறோமோ என்று எனக்குப் படுகிறது...

பதிவர்கள் எல்லா விஷய்ங்களையும் பற்றியும் எழுதுகிறார்கள்... அறிவியல் ஆரம்பித்து அடுத்த வீட்டு ஆன்ட்டி வரை( சும்மா ஆனாவுக்கு ஆனா ஒரு ரைமிங்க்..)

எனக்கு ஒரு விஷயம் பற்றி பதிவுகளில் என்ன என்ன யார் யார் சொல்லி இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.. இல்லை நான் தேடும் அந்த விஷயத்தை பற்றி யாராவது ஒரு கட்டுரை எழுதியுள்ளார்களா என்று தேட என்ன வழி இருக்கிறது...

குறிச்சொற்களை (label) பயன்படுத்தி தேடுவோம்...

அங்கே தான் பிரச்சினையே... அனைவரும் ஒரே மாதிரியான குறிச்சொல் பயன் படுத்துவதில்லை....

உதாரணத்துக்கு ஒரு நகைச்சுவை பதிவு எழுதப்படுகிறது என்று வைத்து கொள்வோம் ... ஒரு பதிவர் நகைச்சுவை என்று லேபிள் கொடுத்தால் மற்றொரு பதிவர் மொக்கை என்று லேபிள் கொடுப்பார். இன்னொரு பதிவர் எழுத்து பிழையோடு நகச்சுவை என்று கொடுப்பாராய் இருக்கும்... இப்படி வித விதமாய் குறிச்சொற்கள் கொடுக்க படும் போது... தேடுப்பொறிகளின் நேரம் வீணடிக்கப் படுவதோடு... செயல் திறனும் பாதிக்கப்படும்....

நமக்கும் நாம் தேடும் கட்டுரையோ, விஷயமோ கிடைப்பது கடினம்.. நாம் தேடும் பொருளில் நல்ல கட்டுரைகள் பல இருக்கும்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறிச்சொல்லை கொண்டு இருக்கும்... ஒரு குறிச்சொல் போட்டு தேடும் பொது ஒரு சில கட்டுரைகள் தேடுபொறியில் வெளிவரும்...

நாமெல்லாம் உயிரை கொடுத்து எழுதுவது நாம் மட்டும் படித்து பயன்பெற அல்ல... பலரும் படிக்க வேண்டும்... பலருக்கும் நம் எழுத்துக்கள் பயன் பட வேண்டும் என்று தான் நினைக்கிறோம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது...

எப்படி அச்சில் ஏற்றப்படும் புத்தகங்கள், பத்திரிகைகள், திரைப்படங்கள், கதை, கவிதை, கட்டுரைகள் எல்லாம் போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணங்களோ... அதே போல் வலையுலக எழுத்துக்களும் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும்...

பாதுக்காக்கப் பட்டால் மட்டும் போதாது.. அனைவரும் பயனுற வேண்டும் என்பதும் முக்கியம்...

சரி இதற்கு என்ன செய்ய முடியும் என்று கெட்கிறீர்களா?

நாம் பேசி கொண்டிருக்கும் இது ஒரு சாதாரண விஷயம் அல்ல... வலையை முற்றிலுமாக நம்பியிருக்க போகும் நம் எதிர்கால சந்ததிகள் பயன் பெற போகும் ஒரு இயக்கம்...

இதுவரை வெளிவந்திருக்கும் லட்சக்கணக்கான கட்டுரைகள் சரியான ஒரே சீரான குறிச்சொல்லை கொண்டிருக்கவில்லை என்பது ஒரு பயமுறுத்தும் விஷயம் ஆக இருந்தாலும்... இனிமேலும் இது தொடரக்கூடாது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்....

என்ன செய்ய வேண்டும்

1) கட்டுரைகள், இடுகைகள் இவற்றுக்கு தேடுசொற்கள்(குறிச்சொற்கள்) அமைப்பதில் ஒரு ஒற்றுமை இருப்பது அவசியம்...

2) நகைச்சுவை கட்டுரைக்கு, பதிவுக்கு இந்த குறிச்சொல் தான் கொடுக்க வேண்டும், அறிவியல் பதிவுக்கு இந்த மாதிரி குறிச்சொல் தான் தரப்பட வேண்டும் என்று எல்லாவற்றிர்கும் என்ற நிச்சயமான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்....

3) ஒவ்வொரு கட்டுரையிலும் இடுகையிலும் அதை எழுதியவரின் பெயர் அதே பாட்டர்னில்(Pattern) இடம் பெற வேண்டும். ஒரு குறிப்பிட்ட பதிவரின், எழுத்தாளரின் எழுத்தை தேடும் போது இது உதவியாக இருக்கும்...

4) உடனடியாக ஒரு குறிச்சொல் அகராதி உருவாக்கப்பட்டு அதிலுள்ள குறிச்சொற்கள் மட்டுமே பதிவுகளில், கட்டுரைகளில் குறிச்சொற்களாக கையாளப்பட வேண்டும்...

5) இது ஒரு சாதாரண பணியல்ல... ஒரு முக்கியமான மிகுந்த முயற்சியும் உழைப்பும் தேவைப்படுகிற விஷயம்... ஒரு பதிவர் சந்திப்பிலோ, ஒரு பதிவர் பட்டறையிலோ பதிவர் வட்டத்தில் இது போன்ற முயற்சிகளில் துணிந்து ஈடுப்படும் அன்பர்கள், பதிவர்கள் இதை அஜெண்டாவில் சேர்த்து ஒரு பொருளாக விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்...

(பெயர்களை நான் குறிப்பிட விரும்பவில்லை என்பதை விட குறிப்பிட முடியாத ஒரு கசப்பான சூழ்நிலை வலையுலகில் நிலவுகிறது என்பதே உண்மை)

என்னால் முடிந்த உதவிகளை நானும் செய்ய காத்திருக்கிறேன்...

6) ஒரு சீரான குறிச்சொல் அகராதி உருவாக்கப்பட்ட பின் அவரவர் வெளியிட்டுள்ள இடுகைகள், கட்டுரைகளுக்கு முடிந்த அளவுக்கு குறிச்சொற்களில் மாற்றம் செய்ய வேண்டும்...(கஷ்டமான காரியம் தான்... பரிசீலிப்பதில் தவறில்லை... நம் தமிழ் மக்களுக்கு நம் எழுத்துக்களை சரியான முறையில் கொண்டு சேர்க்கும் முயற்சி)...

பதிவர்கள் விவாதத்துக்கு என் கருத்துக்களை முன் வைக்கிறேன்.. சரியா தவறா என் புரிதலில் ஏதேனும் குழப்பமா என்று தெரிவிக்கவும்....

திங்கள், ஏப்ரல் 07, 2008

ஸ்கூபா கார்- தயாராகும் தமிழகம்


சென்ற இடுகையில் ஸ்கூபா காரைப் பற்றி சில விவரங்களை தெரிவித்து இருந்தோம்... இந்த இடுகையில் மேலும் சில தகவல்கள் உங்களுக்காக....

ஒரு வேளை இந்த காரை இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வர்றாங்கன்னு வெச்சுப்போம்... அந்த காரை வெச்சு யார் யார் என்ன என்ன பண்ணுவாங்கன்னு ஒரு சின்ன கற்பனை....

ரஜினிகாந்த் உடம்பில் மோட்டாரைக் கட்டி கொண்டு நீரில் குதித்து ஏற்கனவே மூழ்கிய காரை மூழ்கடித்து எதிரிகளை அழித்து கதாநாயகியையும் அவரின் கொள்ளுப் பாட்டியையும் காப்பாற்றுவார்.... இந்த படத்தின் வசூல் பெங்களூர் தமிழர்களுக்கும், நதிநீர் திட்டத்துக்கும் பிரித்து கொடுக்கப் படும்...

விஜயகாந்த் இந்த காரில் தப்பிச்செல்லும் எதிரியின் திட்டத்தை முறியடிப்பதோடு, எதிரி நாட்டு வில்லனை நடுக்கடலில் நிற்க வைத்து தமிழிலேயே நாற்பது பக்கத்துக்கு நாக்கை பிடுங்கி கொள்கிற மாதிரி கேள்வி கேட்பார்... அவரின் உச்சரிப்பை பார்த்து பீதியில் மிரண்டு போய் செயலற்று நிற்கும் எதிரியை பேக் கிக் அடித்து வீழ்த்து தூக்கி கொண்டே கடலில் 20 மைல் நடந்து வந்து கரையேறுவார்... படம் பார்க்கும் அனைவரும் சீட்டியடித்து சீட்டை பிறாண்டுவார்கள்...

ஷங்கர் அருமையான ஒரு டூயட் காட்சியை நீருக்கு அடியில் எடுப்பார்.... கிராபிக்ஸ் எஃபக்டில் கார் கப்பலாய் மாறும் காட்சி கட்டாயம் இடம் பெறும்... இளிச்சவாய் தயாரிப்பாளர் பட்ஜட்டை கேட்ட உடனே பணத்தையும் போட்டு விட்டு படம் ஜெயிக்க வேண்டுமே என்று திருப்பதிக்கு போய் மொட்டையும் போடுவார்(குடும்பம் மொத்தத்துக்கும்)

மணிரத்னம் யாருக்கும் புரியாத கோணத்தில் திரைக்கதை அமைத்து படம் எடுப்பார்... கடலுக்கு அடியில் சந்தித்து காதலிக்கும் காதலர்கள் பற்றி... படத்தில் ஒரு வில்லனும் உண்டு... அனைவரும் பேசிக்கொள்வது நீருக்கு அடியிலேயே நேரடியாக விஷேச மைக் வைத்து பதிவு செய்யப்படும்... ஹீரோவாக அபிஷேக் பச்சனும், ஹீரோயினாக ஐஸ்வர்யாவும் ஏகமனதாக தேர்வு செய்ய படுவார்கள்..(அபிஷேக்கை வாங்கினால் ஐஸ் இலவசம் போல...)
ஒரு பத்து பேராவது படத்தை பார்த்து விட்டு வாழப்பிடிக்காமல் அந்த கார் போலவே தண்ணீருக்குள் போய் விடுவார்கள்... திரும்பி வரவே மாட்டார்கள்...

அந்த காரின் விஷேச தன்மைகளை பற்றியும் அதை மணிரத்னமும், ஷங்கரும் படமாய் எடுத்த விதம் பற்றியும், கமல் சன் TVக்கு ஒரு பிரத்யேக பேட்டியளிப்பார்... படம் புரியாமல் போயும் மனசை தேத்தி கொண்டு விளிம்பு நிலையில் நின்ற சிலர் இந்த பேட்டியை பார்த்தவுடன் உடனடியாக கடலுக்கு போய் விடுவார்கள்...

இதே போன்ற காரை ஒண்ணே முக்கால் லட்சத்துக்கு விற்பனை செய்ய போவதாக TATA அறிவிக்கும்... ஆனால் உண்மையான விலை இரண்டே முக்கால் லட்சத்து முப்பத்து மூன்று ரூபாய் மூணு பைசாவாக இருக்கும்...

இந்த மாதிரி ஏராளமான கார்களை வாங்கி அதில் நகை, பணம் நிரப்பி கடலுக்கு அடியில் மறைத்து வைத்திருப்பதாக கட்சித்த்லைவர்கள் ஒருவர் மேல் ஒருவர் குற்றஞ்சாட்டி அறிக்கை விடுவார்கள்...

இந்தியா இந்த கார்களில் வந்து தங்கள் துறைமுகங்களை வேவு பார்ப்பதாக பாகிஸ்தான் ஐ.நா சபையில் புகார் கொடுக்கும்...

இந்த காரை வாங்க, ஓட்ட கடும் கட்டுப்பாடுகளை சென்னை போக்குவரத்து காவல் துறை விதிக்கும்... (பின்னே கடல் உள்ளே போய் கட்டிங் வாங்க முடியாதே.. அந்த கடுப்பு தான்)

எல்லவற்றையும் விட பெரிய ஹைலைட்டாக இந்த கார் தயாரிப்புக்கு பின் புலத்தில் CIA இருப்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், அதோடு மட்டுமல்லாமல் விஜயகாந்துக்கும் இந்த கார் தயாரிப்பு கம்பெனியில் கணிசமான பங்கு இருக்கிறது என்பதும், இதை பற்றி வருமான வரித்துறைக்கு தான் எழுதியுள்ளதாகவும் சுப்பிரமணியம் சாமி விடும் அறிக்கையில் அமெரிக்கா, தே.தி.மு.க இரண்டுமே கலகலத்து போகும்....

பெசண்ட் நகரில் இருந்து மெரீனாவுக்கு கடல் வழி பயணம்

கடல் வழி பயணம்னு சொன்ன உடனே படகு பயணம்னு நினைச்சுட்டீங்களா? படகு பயணம் இல்லை... கார் பயணம்....
அதுவும் கடல் மேல் இல்லை... கடல் உள்ளே...


இது என்ன உளறல்னு யோசிக்கிறீங்களா... கார் கடல் உள்ளே போகுமான்னா?

ஜேம்ஸ் பாண்ட் பட ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான கார் இது.



The Spy who loved me படத்தில் ஜேம்ஸ் பாண்ட் பயன் படுத்தும் LOTUS ESPRIT என்ற கற்பனை காரின் உண்மை வடிவமாக ஒரு கார் தயாரிக்கப்பட்டுள்ளது...



சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரின்ஸ்பீடு(Rinspeed) என்னும் கார் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் Frank M Rinderknecht என்னும் தயாரிப்பாளர் உருவாக்கியிருக்கும் ஸ்கூபா (sQuba) என்னும் கார் தான் அது.....



இந்த அற்புதமான காரை பற்றி சில தகவல்கள்...

• Amphibious convertible - (நீரிலும் நிலத்திலும் ஓடக்கூடிய) வகையை சேர்ந்த கார் இது...



• இந்த வகையை சேர்ந்த மற்ற தனி நபர் வாகனங்களான Amphicar, Gibbs Aquada, Gibbs Humdinga, ஆகிய கார்கள் நீரின் மேலே செல்லும் தன்மை கொண்டவை... ஸ்கூபா மட்டுமே தண்ணீரின் அடியில் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது...



• நீருக்கு அடியில் சென்று ஆழ்கடல் காட்சிகளை காணும் விளையாட்டிற்கு, ஸ்கூபா டைவிங் என்று பெயர்... அதிலிருந்து ஸ்கூபா என்பது எடுக்கப்பட்டு காருக்கு பெயரிடப்பட்டிருக்கிறது....



• self-contained underwater breathing apparatus - என்னும் வார்த்தையின் சுருக்கமே SCUBA



• இது மூன்று மின்சக்தியால் இயங்கும் மின்விசைகளால் ஓடக்கூடியது... பின் பக்கம் இருக்கக்கூடிய ஒரு விசையின் உதவியால் தரையிலும், நீர் நிரப்பி நீரில் அமிழ்ந்த பின், 2 சக்தி வாய்ந்த ப்ரொப்பல்லர்கள் உதவியுடன் முன்னோக்கி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது...



• 10 மீட்டர் ஆழத்தில் செல்லக்கூடிய இந்த காரில், Lithium Ion ரீச்சார்ஜபிள் மின்கலன்கள் பயன் படுத்த படுவதால், நீர் மாசுப்பாடு என்பது முற்றிலுமாக தடுக்கப்படுகிறது...



• தரையில் 120 கி.மீ வேகத்திலும், தண்ணீரின் மேற்பரப்பில் 6 கி.மீ வேகத்திலும், நீருக்கு அடியில் 3 கி.மீ வேகத்திலும் செல்லக்கூடிய திறன் படைத்தது....



• நீரின் அடியில் பயணிக்கும் போது காரில் சேமிக்கப்பட்டிருக்கும் பிராண வாயுவை சுவாசித்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது...



• இது தவிர சக்தி வாய்ந்த 2 நீர் நிரப்பிகளும் உண்டு. இவை வாகனத்தை மூழ்க வைக்க நீரை நிரப்பவும், வாகனம் நீரில் இருந்து வெளியே வரும் போது நீரை வெளியேற்றவும், வாகனம் நீரினுள்ளே செல்லும் போது வழி நடத்தவும் உதவுகின்றன...



• லேசர் சென்சார் தொழில்நுட்பத்தில் இது நீரின் அடியில் தானாகவும் இயங்கக்கூடிய வல்லமையும் பெற்றுள்ளது...



• பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்கூரையற்றதாக இந்த கார் வடிவமைக்கப் பட்டிருக்கிறது...



• இதன் தயாரிப்பாளர் இந்த காரைப் பற்றிக் குறிப்பிடும் போது "இது பணக்காரர்களுக்கான ஒரு விளையாட்டுப்பொருள்" என்கிறார்...



• ஜெனீவாவில் 2008, மார்ச் 13ந் தேதி நடந்த கார் கண்காட்சியில் அறிமுகபடுத்தப் பட்ட இந்த காரின் வணிக ரீதியிலான தயாரிப்பு எப்போது துவஙும் என்பது உறுதி செய்யப்படவில்லை... ஆனால் விற்பனைக்கு வந்தால் ரோல்ஸ் ராய்ஸை விட குறைவான விலையில் இந்த காரை வாங்க முடியும் என்று தயாரிப்பாளர் நம்பிக்கை தெரிவிக்கிறார்...



• அப்படின்னா நிச்சயம் நம்மூர் அரசியல்வாதிங்களோட வாரிசில யாரோ ஒருத்தரோ, இல்லை சினிமா கதாநாயகன் யாரோ ஒருத்தரோ இதை வாங்கிடுவாங்க... அப்ப இதை பெசண்ட் பீச்சுல பார்க்கலாம்ல?
(நாம எல்லாம் பார்க்க தான் முடியும்...இதை வாங்கனும்னா சம்பாதிச்சா பத்தாது.. கொள்ளை அடிக்கணும்... சினிமா, அரசியல், பன்னாட்டு கம்பெனி இப்படி ஏதாவது பண்ணி மறைமுக கொள்ளை அடிச்சா தான் வாங்க முடியும்..)

தனிமை - ஏப்ரல் மாத புகைப்படப் போட்டி




வெளிச்சத்தை எதிர்நோக்கி - ஒவ்வொரு
விடியலிலும் கிழக்கு பார்த்தே
விழி இழக்கும்
விந்தை நிறைந்த
விசித்திர வாழ்க்கை

வியாழன், ஏப்ரல் 03, 2008

மக்கு மேலாளரும் ஒரு புதிய லேப்டாப்பும்

இந்த ஆளை எல்லாம் எப்படிய்யா வேலைக்கு எடுத்தாங்க என்று சிலரை பார்க்கும் போது நம்மில் பலருக்கு தோன்றியிருக்கும்....

ஒவ்வொரு நிறுவனத்திலும் இது போன்ற ஆட்கள் பொறுப்பான பதவியில் உட்கார்ந்து கொண்டு அடிக்கும் லூட்டிகள் சொல்லி மாளாது...

நண்பர்கள் அபூர்வமாய் ஒன்றாய் கூடும் தருணங்களில் இது போன்ற விஷயங்கள் பல பரிமாறிக்கொள்ளப்படும்...

இதை கேளுங்கள்...

என் நண்பரின் அலுவலகதில் ஒரு மேலாளர் பற்றிய ஒரு நகைச்சுவைச் சம்பவம்...

அந்த அலுவலகத்தில் மேலாளர்களுக்கு மட்டும் லேப்டாப் வசதி உண்டு...

அவருக்கும் புதிதாக ஒரு லேப்டாப் வந்து சேர்ந்தது...

1 நாளாயிற்று, 2 நாளாயிற்று, 1 வாரம் ஆனது... அவர் லேப்டாப் உபயோகிக்கிற வழியைக்காணோம்...

ஏற்கனவே கஞ்ச தனங்களுக்கு பெயர்ப்போனவர் அந்த மேலாளர் என்பதால் சக ஊழியர்களுக்கு ஒரு சந்தேகம்.. ஏன் இவர் லேப்டாப் கிடைத்தும் உபயோகிப்பதில்லை என்று...

உடனே அனைவரும் சீட்டு குலுக்கி போட்டு ஒரு பலியாட்டை தேர்வு செய்து அவரிடம் இதைப்பற்றி பேச வைப்பது என முடிவு செய்தார்கள்....

ஏன் பலியாடு என்கிறீர்களா? மனிதர் செம மொக்கை.. பேசப் போனால் காது அறுபடாமல் மீண்டு வருவது கடினம்... காய்கறிகாரன் ஏமாற்றிய 50 பைசாவிலிருந்து, பஸ் கண்டெக்டர் ஏமாற்றிய 50 பைசா வரை புலம்பித் தள்ளி விடுவார்...(யெஸ் யுவர் ஆனர்.. பஸ்ஸில் தான் ஆபீஸ் வருவார்.. சம்பளம் எவ்வளவு என்று கேட்கிறீர்களா? ஆண்டுக்கு ஒரு 12 லட்சம் பக்கம் வரும்).....

ஒரு நல்ல நாளான வெள்ளிக்கிழமையாக பார்த்து, தலைக்கு குளிக்க வைத்து, பொட்டு வைத்து, மாலைப் போட்டு பலியாட்டை தயார் செய்து அனுப்பி வைத்தனர்...

மேலாளர், கேபின் வாசலில் தயங்கி தயங்கி வந்து நின்ற நம் பலியாட்டு நண்பரை பார்த்ததும் சந்தோஷம் பொங்கியவராக... "வாய்யா.." என்று ஆரம்பித்தவர் தான்... பலியாடு அப்படியும் இப்படியும் நகர்ந்து தவித்து துடித்தும்.... படுக்க வைத்து, உட்கார வைத்து, நிற்க வைத்து ரத்தம் வர வர காது கழுத்து எல்லாம் அறுத்து தள்ளி விட்டார் ...

கடைசியாக அவர் ஓய்ந்த ஒரு சிறு இடைவெளியில் நண்பர் புகுந்து விட்டார்..
"என்ன சார் லேப்டாப்பை யூஸ் பண்ணாம வெச்சிருக்கீங்க... நல்ல நாளுக்காக வெயிட் பண்றீங்களா?" என்று மெதுவாக பிட்டை போட்டார்...

மேலாளர் மெதுவாக தலையை உயர்த்தி, " வர வர நம்ம IT டீம் சரியில்லைப்பா... மானிட்டர், கீ பேடு, மௌஸ் எல்லாம் கொடுத்துட்டாங்க... CPU இன்னும் தரவேயில்லைப்பா... இன்னைக்கு தான் மெயில் போடலாம்னு இருக்கேன் " என்றாரே பார்க்கலாம்...

(விஷயத்தை கேள்விப்பட்ட சக அலுவலர்கள் மீட்டிங் ரூமில் கதவை சாத்திக் கொண்டு லாஃபிங் தெரபி அளவுக்கு சிரித்தது தனிக்கதை...)

புதன், ஏப்ரல் 02, 2008

எக்குதப்பு ஏகாம்பரம்.


எக்குதப்பு ஏகாம்பரம். ஏதாவது கோக்குமாக்காக செய்து எல்லோரையும் வம்பிழுப்பதே இவர் வேலை... அவரின் வம்படியான வாழ்க்கையிலிருந்து சில துளிகள்.....

சாலையில் நண்பருடன்,

இத பாருங்க.. ஜோதி தியேட்டர் இங்கே தான் இருக்கு... சீனாவுக்கு கொண்டு போனது ஒலிம்பிக் ஜோதி தான்... பரங்கிமலை ஜோதி இல்லை.........
----------------------------------------------------------------

போலீஸ் ஸ்டேஷனில்

இதை பாருங்க விவசாய கடனை ரத்து பண்ணியிருக்கிறது உண்மை தான்.. அதுக்காக உள்ளூர் விவசாயி கிட்ட நீங்க வாங்கின கடனை எல்லாம் ரத்து பண்ண முடியாது…..
---------------------------------------------------------------

வீட்டில் மனைவி,

மெரினாவில கடல்ல குளிக்கறவங்களை விரட்ட போலீஸ் ரோஸின்னு ஒரு நாயை கூட்டிட்டு வருது.. உண்மை தான்... அது மெரினாவில மட்டும் தான்... வீட்டில குளிச்சா எல்லாம் அந்த நாய் ஒண்ணும் பண்ணாது... போய் குளிங்க....
---------------------------------------------------------------

TV கடையில்,
சார்... எல்லா ரேஷன் கார்டுக்கும் இலவச TV தர்றதா அறிவிப்பு வந்திருக்கிறது உண்மை தான்... ஆனா அதை அரசாங்கம் தான் தரும்... இது விக்கிறதுக்காக வெச்சிருக்கிற TV... இதையெல்லாம் இலவசமா தர முடியாது...

--------------------------------------------------------------
கல்லூரியில் பிரின்ஸிபால்,

உங்க மகன் சின்ன வயசுல வாளியில பந்தை போட்டு விளையாடுவங்கறதுக்காக, வாலிபால் ப்ளேயர்னு சொல்லி ஸ்போர்ட்ஸ் கோட்டாவில சீட் கேக்கறது கொஞ்சம் கூட நல்லாயில்லை சார்....


செவ்வாய், ஏப்ரல் 01, 2008

நடிகர்களும் நாடாளும் ஆசையும்

அவர் இவர் என்று இல்லாமல்... அநேகமாக எல்லா நடிகர்களுக்கும் அரசியல் ஆசை இருப்பதாகவே படுகிறது...
நடிப்புலகில அரசியல் இருக்கிறதும், அரசியல்ல நடிப்பு இருக்கிறதும் சகஜம் தானே...
ஒரு பெரிய நடிகர்... அரசியலுக்கு இவர் வந்து விடக்கூடாதே என்று பல கட்சிகளும் கூட்டணி வைத்துக்கொண்டு இவரையும் அப்பாவி (?) ரசிகர்களையும் குமுறு கஞ்சி காய்ச்சின... "முதலமைச்சர் ஆக போறியாமே? வீட்டை புல்டோசர் வெச்சு நிரவிடுவோம் " என்று கவுண்டமணிக்கு ஒரு படத்தில் மிரட்டல் வரும். தொல்லை பொறுக்க மாட்டாமல் "அடாடாடா கருமாந்திரம் புடிச்சவனுங்களா..." என்று படுக்கையில் கிடந்து புரளுவார்... அந்த ரேஞ்சுக்கு மிரட்டல் விடப்பட்டதால் அர்ஜண்டாக அரசியல் வாழ்க்கைக்கு ஒரு முற்றும் (அட்லீஸ்ட் ஒரு கமா) போட்டு கொண்டு இமய மலை, ஐஸ்வர்யா ராய் என்று செட்டில் ஆகி விட்டார் என்று படுகிறது...

ஒரு நடிகருக்கு மேற்கூறப்பட்ட புல்டோசர் இத்யாதிகள் இன்று நடந்து கொண்டு இருக்கிறது... அவரின் கல்யாண மண்டபம் முதற்கொண்டு அவர் கஷ்டப்பட்டு களவாண்டு வைத்த காலி இடம் வரை புல்டோசரை விட்டு புல் செதுக்கிக் கொண்டு இருக்கிறார்கள்...(என்னவோ புல்டோசர் இதற்காகவே கண்டுப்பிடிக்கப்பட்டது போல... நடிகருக்கு இப்போதெல்லாம், JCB, புல்டோசர் என்றாலே பிடிப்பதில்லையாம்... காலி இடத்தில புல்டோசர் வெச்சு எதைய்யா இடிப்பீங்க? உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?)

அவரும் அறிக்கை மேல் அறிக்கை விட்டு உளறி, T.ராஜேந்தர் முதல் தீப்பொறி ஆறுமுகம் வரை அனைவரிடமும் நன்றாக பதிலுக்கு வாங்கு வாங்கு என்று வாங்கி கட்டிக் கொள்கிறார்......

“வீட்டில தெலுங்கு பேசிட்டு, வெளியே தமிழ் பேசுற ஆள் அவரு”- உபயம் டி.ஆர்... தமிழ்நாட்டுல தெலுங்கு பேசினா யாருக்காவது புரியுமா? அதான் வீட்டில மட்டும் தெலுங்கு பேசிட்டு வெளிய தமிழ்ல பேசுறார்... இதெல்லாம் ஒரு பிரச்சினையாய்யா?

ஆமா.. அவருக்கு தெலுங்கு, தமிழ் தான் தெரியும்... ஹிந்தி, இங்கிலீஷ் தெரியாது.. அதனால தான் தீவிரவாதிகளை பிடிச்சா அவங்ககிட்ட தமிழ்லயே பேசி சவால் விடுறார்... அதுக்கென்ன இப்போ? இதெல்லாம் தேசிய ஒருமைப்பாடுங்க... கர்நாடகாவில தான் தமிழ் பேசினா தப்பு.. இங்கே தெலுங்கு பேசினா கூடவா தப்புன்னு அவரு கேக்க போறாரு...

அறிக்கை இவரைப்பொறுத்த வரை அரிக்கையாவே அமைஞ்சுடுது...

இவ்வளவு வாங்கிய பிறகும் அஞ்சாமல் அசராமல் மேலும் அறிக்கை விடுகிறார்....

ஒரு வேளை ஆட்சியை பிடித்தால் எல்லாவற்றையும் சரி செய்துக் கொள்ளலாம் என்ற வழக்கமான தைரியமாக இருக்குமோ?

இவரது கட்சிக்காரர்களும், ஆட்சியில் இருக்கும் கட்சிக்காரர்களுக்கும் எதில் போட்டி இருக்கிறதோ இல்லையோ.. டாடா சுமோ, ஸ்கார்பியோ, குவாலிஸ் போன்ற பெரிய வண்டிகளில் கொடிக்கட்டி பறக்க விட்டுக்கொண்டு வேகமாக சாலையில் சென்று மக்களை விரட்டிக்கொண்டும், மிரட்டிக்கொண்டும் போவதில் கடும் போட்டி....

அப்படி என்ன தான் ஆணிப்புடுங்கற வேலை இருக்குமோ...

ஆட்சியில இருக்கிறவங்க தான் அம்பது வருஷமா இதுல எல்லாம் ஊறி கரைக்கண்டவங்கன்னு பார்த்தா... இவரு பிஞ்சிலயே பழுத்தவரா இருக்காரு...
சீட் கேட்டு வந்த கட்சி பிரமுகர்களை எவ்வளவு சொத்து இருக்கு என்று கேட்டு அசரடித்தவர் அல்லவா.. (தேர்தல் கமிஷனுக்கு சொல்றதுக்காக கேட்டிருப்பாரு...தேர்தல் கமிஷனுக்காகவோ... தேர்தல் 'கமிஷனு'க்காகவோ...)

இப்ப இருக்கிற அதிரடி ஸ்டைல் ஒரு வேளை ஆட்சியை புடிச்சா நல்லது பண்ணுறதுலயும் இருக்கும்னு நம்புவோம்....

ஜனங்க பாவம்... அவங்களும் ஒரு நல்லவன் கிடைக்க மாட்டானான்னு தேடறாங்க... கிடைக்கவே மாட்டுறான்... ம்...

இவரு யானை வெடியை கொளுத்திப்போட்டு துவைச்சு, துடைச்சு துவம்சம் பண்ணிக்கிட்டிருக்காரு... சைடுல இன்னும் 2 நடிகர்கள் ஊசிப்பட்டாசு, கேப் வெடியெல்லாம் வெடிச்சு சத்தம் கேக்குதா, கேக்குதான்னு காமெடி பண்ணிட்டு இருக்காங்க...

அதுல ஒருத்தருக்கு ஜாதி அரசியல் பண்ணலாமா இல்லை கிடைச்ச தலைவர் பதவியில அப்படியே ஒட்டிக்கிட்டு லைஃபை ஓட்டிடலாமான்னு குழப்பமாவே இருந்தாரு போல... கட்சியே அவருக்கு கல்தா கொடுத்துடுச்சு...

இன்னொருத்தர் என்னென்னவோ பண்ணி பார்க்கிறார்.. ஆனா கூட்டம் தான் சேரவே மாட்டேங்குது... (ஆனானப்பட்ட நமீதாவை வெச்சு எடுத்த படத்துக்கே கூட்டம் சேரலை... இவரு தனியா மீட்டிங் போட்டா கூட்டம் சேருமா.. யாருப்பா அது.. இப்படியெல்லாம் அநாகரீகமா கமெண்டு அடிக்கக் கூடாது…)

ஒழுங்கா TV சீரியல் தயாரிச்சுக்கிட்டு இருந்த துணைவியாரையும் இதுல இழுத்து, என்ன நடக்க போகுதோ பாவம்... அவங்க பாட்டுக்கு பெண்களை மெகா சீரியல் காமிச்சு அழ வெச்சுட்டு இருந்தாங்க...

இன்னொரு நடிகர்... அவரு இப்போ எந்த கட்சியில இருக்காருன்னு அவருக்கே தெரியுமோ தெரியாதோங்கிற லெவல்ல காலையில, சாயங்காலம் ரெண்டு வேளையும் மாத்தி, மாத்தி பேசி சொந்த மகனையே குழப்பிக்கிட்டு இருக்காரு...

இதுல லேட்டஸ்ட்டா ஒருத்தர் கிளம்பியிருக்கார்... மெதுவா அடி(கொடி) போட ஆரம்பிச்சிருக்கார்... இப்பவே ஆரம்பிச்சா தானே 45-50 வயசுல ஒரு தனிக்கட்சி, அறிக்கைன்னு செட்டில் ஆக முடியும்... ஆனா அவர் ஒண்ணு யோசிச்சுக்கணும்.. அவருக்கும் கொஞ்சம் கல்யாண மண்டபம், அசையா சொத்து எல்லாம் இருக்கு...... அவ்ளோ தான் சொல்ல முடியும்...

ஆனா ஒண்ணு இப்போ ஆட்சியில இருக்கிற பழம்பெரும் திராவிட கட்சி அடுத்து ஆட்சியை பிடிக்க முடியாம போய், ஒரு வேளை யானைவெடி நடிகர் ஆட்சியை பிடிச்சுட்டார்னு வைங்க... அவரு ரிவன்ஜ் எடுத்தா என்ன ஆகிறதுன்னு யோசிக்காம ஏதேதோ பண்றாங்க.....

தமிழ்நாட்டு ஜனங்களை ரொம்ப நம்புறாங்க போல...

நல்லா நடிச்சுக்கிட்டு இருக்கிற ஒரு ஹீரோ திடீர்னு சம்மந்தம் இல்லாம ஒரு படத்துல சட்டுன்னு விரலை காமிராவைப் பார்த்து நீட்டி வசனம் பேச ஆரம்பிச்சுட்டாருன்னு வெச்சுக்குங்க... உடனே தெரிஞ்சுக்கலாம்... எவனோ குழப்பிட்டான்னு...

இவங்கெல்லாம் பத்தாதுன்னு டைரக்டர் ஒருத்தர் கிளம்பியிருக்கார்... அவர் பண்ற அட்டகாசம் இருக்கே... ஆரம்பகால ராமராஜன் மாதிரி இருந்துக்கிட்டு ராம்போ ஸ்டையில்ல வசனம் பேசுறாரு பாருங்க... தியேட்டர்ல சீட் இல்லைன்னா அவனவன் தரையில படுத்து புரண்டு புரண்டு சிரிப்பான்... அவ்ளோ காமெடி...

இவரு சும்மா இல்லாம, ஒழுங்கா நடிச்சுக்கிட்டிருந்த ஒரு இளம் நடிகரை ஆக்சன் ஹீரோ ஆக்கறேன்னு கிளம்பி... இப்போ அந்த இளம் நடிகர் “நான் யாரு நல்லவனா கெட்டவனா”ங்கிற ரேஞ்சுக்கு அலைஞ்சுக்கிட்டு இருக்கார் பாவம்... அய்யோ, அய்யோ...

மறைந்த ஒரு பெரும் நடிகர்.. அதிர்ஷ்ட கட்டை, கட்சியில இவரு காலை வெச்சாலே கட்சி கண்டம்டா என்று நாத்திகம் பேசும் திராவிட கட்சிகளாலேயே செண்டிமெண்ட் பார்க்கப்பட்டு ஒதுக்கப்பட்டவர்... தனிக்கட்சி எல்லாம் ஆரம்பித்து... பெயரைக் கெடுத்துக்கொண்டார்...

இன்னொரு வில்லன் நடிகர் ஒருத்தர் இருந்தார்... செம டைம் பாஸ்... என்னன்னவோ பண்ணி பரபரப்பா இருந்தாரு... ஒரே மாதிரி தலையை ஆட்டி ஆட்டி டயலாக் பேசி சம்பாதிச்ச காசையெல்லாம் அரசியல் படமா எடுத்து அம்போன்னு விட்டுட்டு காணாமயே போயிட்டார்...
இன்னும் பலப் பேரு சொல்லாம ஃபீல்டு அவுட் ஆயிட்டாங்க...

பொதுவா ஒருத்தரோட தனிப்பட்ட வாழ்க்கையை பார்த்து எந்த முடிவுக்கும் வரக்கூடாதுன்னு சொல்வாங்க...

ஆனா தனிப்பட்ட வாழ்க்கையில தானே வரி ஏய்ப்பு, நில ஆக்கிரமிப்பு, பண மோசடி போன்ற சமூகத்தை பாதிக்கிற தப்புக்களும் அடங்கியிருக்கு... பணத்துக்கு ஆசைப்பட்டு அவர்களை விரும்பும் ஆயிரம் பெண்களை சேர்த்துக்கிட்டு கும்மாளம் அடிக்கட்டும்.. நாறி நைந்து போகட்டும்.. அவர் பணம் அவர் இஷ்டம்...அது அவங்களை பாதிக்கும் தனி விஷயம்... சட்டத்துல மாட்டிக்காத வரை யாரும் கேள்வியே கேட்க மாட்டாங்க... ஆனா மக்களையும், அவங்களுக்கு சேர வேண்டிய வரி முதலான விஷயங்களையும் பாதிக்கிற மாதிரி கை சுத்தம் இல்லாத ஆளுங்களா இருந்துக்கிட்டு என்னத்துக்கு இவங்களுக்கு அரசியலும் இன்னொன்னும்...

தெலுங்கு சினிமா நடிகர்கள் கதை இதை விட காமெடி... இங்கே நாயகர்கள் மட்டும் தான் வேட்டியை வரிந்து கட்டுகிறார்கள் என்றால்... அங்கே நாயகிகளும் அரசியலில் புகுந்து விளையாடுகிறார்கள்... ஆந்திராவில் அனுதினமும் அதிரடி நகைச்சுவை காட்சிகள் தான்...

பொதுவா அரசியல்வாதிங்க அரசியலுக்கு வந்தப்புறம் தான் பிரபலமாகுறாங்க.. லைம்லைட் அவங்க மேல விழுந்த அப்புறம் தான் அவங்க பேண்ட், வேட்டி, டவுசர் எல்லாம் கிழியும்... நடிகர்கள் எல்லாம் நடிக்கும் போதே பிரபலம் ஆயிடறாங்க.. பேண்ட், டவுசர் எல்லாம் அப்பவே கிழிஞ்சு போகுது... அதை அப்படியாவது ஒட்டு போட்டுக்கிட்டு வந்து மறுபடியும் கிழிச்சுக்கணுமா?
(ஒரிஜினல் டவுசர் கிழிதல்-TM என்ற பதத்தின் காப்பிரைட் லக்கிபீடியாவசம் உள்ளது... பதிவுக்கு மிகவும் பொருந்தி வருவதால் GNU லைசன்ஸ் முறையில் இங்கு எடுத்தாளப்பட்டுள்ளது)