உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

வியாழன், ஜூலை 31, 2008

காற்றில் அந்த குரல் - பாயிருபாய்

என்னுடைய சிறு வயது பெரும்பான்மையாக சென்னையில் உள்ள நுங்கம்பாக்கத்தில் கழிந்தது.
நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் அங்கே தான்...

சிறுவனும் அல்லாத, பெரியவனும் அல்லாத பிராயத்தில், கூட தன் வயதையொத்த பிள்ளைகள் குடும்பத்தில் யாருமில்லாத சமயத்தில், புது வீட்டுக்கு அதுவும் கோடை விடுமுறையின் போது குடி போவது என்பது கொடுமையான விஷயம்.

அது போன்ற ஒரு கோடை விடுமறையில் வசமாக சிக்கிய சமயம் அது.

அப்போதெல்லாம் TV கூட மாலை 5.30 மணிக்கு மேல் தான் ஒளிபரப்பை துவங்கும். தூர்தர்ஸன் தொலைக்காட்சி துறையில் தனி ஆவர்தனம் செய்து கொண்டிருந்த காலம். பெரும்பாலும் அந்த தனி ஆவர்தனம் அபஸ்வரமாகவே இருந்ததில் ஆச்சர்யம் இல்லை.... (வயலும் வாழ்வும், உலா வரும் ஒளிகதிர், இளந்தென்றல் - மறக்கக் கூடிய நிகழ்ச்சிகளா அவை? அவர்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாது சார்)

நூலகம் எல்லாம் தெரியாத வயது... ஒரே பொழுது போக்கு சாலையை பார்த்தபடி இருக்கும் ஜன்னலில் சாலையில் போவோர் வருவோரை வேடிக்கை பார்ப்பதாக தான் இருக்கும்....

இப்போது போல மோட்டார் பைக்குகள் எல்லாம் அதிகம் கிடையாது... ஜாவா, ராஜ்தூத், புதிதாக வந்திருந்த யமஹா, ஹீரோ ஹோண்டா, இண்ட் சுசுகி போன்றவை இங்கொன்றும் அங்கொன்றுமாய் சுற்றிக் கொண்டிருக்கும்...

ஆயிரம் பைக்குகள் சென்றாலும், ஜாவா மோட்டார் பைக்கின் சத்தம் தான் நெஞ்சை அள்ளும்....

அப்போதெல்லாம் பேங்க்கில் நல்ல உத்தியோகத்தில் இருப்பவராயிருந்தால் பஜாஜ் அல்லது எல்.எம்.எல் போன்ற ஏதாவது ஸ்கூட்டர் வைத்திருப்பார்கள்.. கொஞ்சம் வசதியான டாக்டர்கள் எல்லாரும் கட்டாயம் ப்ரீமியர் பத்மினி கார் தான் வைத்திருப்பார்கள்...

காய்கறி, ப்ளாஸ்டிக் சாமான், பேன்ஸி ஐட்டங்கள், ஐஸ் வண்டி, சைக்கிளில் மீன்காரர், பால்காரர் என்று தெருக்கள் எப்போதும் பரபரவென இருக்கும்... அநேகமாக அனைத்து வீடுகளிலும் இருக்கும் பெண்களும் ரிலாக்ஸ்டாக மதிய நேரத்தில் தான் பேரம் பேசி வியாபாரம் செய்வார்கள்... மெகா தொடர்கள் எதுவுமில்லாத காலத்தில் அவர்களின் பிரதான பொழுதுபோக்கே இது போன்ற சில்லறை வியாபரங்களும் அக்கம் பக்கத்தில் அலர் பேசுவதும் தான்...

தினம் தினம் வேடிக்கைப் பார்த்து பார்த்து... மண்ணெண்ணய், புளி, சமையல் கேஸ், கோல மாவு என்று எந்த வண்டி போனாலும் என்னால் சத்தத்தை வைத்தே இனம் காண முடியும்.. பின்னே ஜன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பதே வேலை என்று இருந்தால்...

ஆனால் வெகு நாட்களாக ஒரு சத்தம் மட்டும் இன்னது என்று என்னால் அடையாளம் காண முடியாததாய் இருந்து வந்தது...

யாரோ ஒருவர் அடி தொண்டையில் ஆரம்பித்து, உச்ச ஸ்தாயில் சத்தமாக கத்தும் ஒரு குரல்...

"பாயிருபாய்... பாயிருபாய்..."

அதை ராகமாக அவ்ர் சொல்லும் விதமே அலாதி... எங்கள் தெரு சமீபத்தில் அந்த குரல் கேட்டதென்றால் மணி பதினொன்றரை பக்கம் என்று நிச்சயம் சொல்லலாம்... ஞாயிறு தவிர்த்து அநேகமாக எல்லா நாளும் அந்த குரலை கேட்கலாம்...

அது யார்... என்ன வியாபாரம் செய்கிறார் என்று தெரிந்து கொள்ள எனக்கு கொள்ளை ஆசை... எங்கள் தெரு மீது அவருக்கென்ன கோபமோ தெரியவில்லை... அவர் எங்கள் தெருவுக்குள் வருவதேயில்லை... பக்கத்து தெருவிலிருந்து எதிர் தெருவிற்கு போவாராயிருக்கும்... அப்போது குரல் தெளிவாக கேட்கும்...

"பாயிருபாய்...."

* * * * * * * * * *

ரொம்ப நாட்கள் கேட்டு கேட்டு குரல் பழகி என்ன வியாபரம் என்று தெரிந்து கொள்ளும் ஆசை எல்லாம் போன பின் ஒரு நாள் என் தாத்தாவுடன் சைக்கிளில் செல்லும் போது எத்தேச்சையாக வெகு அருகில் அந்த குரல் கேட்டு திரும்பி பார்த்தேன்...

"பாயிருபாய்..."

ஒரு அழுக்கு சட்டையும், பாவாடை போன்ற காக்கி டிராயரும் (சல்லாடம் என்று சொல்வார்கள்) அணிந்து ஒரு இரும்பு தள்ளு வண்டியை தள்ளிக் கொண்டு ஒரு பெரியவர்... வயது அறுபது பக்கம் இருக்கும்...

ரோடு போடும் போது தார் ஊற்றிய ஜல்லி கற்களை தள்ளி கொண்டு வந்து கொட்ட பயன்படும் இரும்பு சக்கரம் வைத்த தள்ளு வண்டி அது...

அதில் என்ன வைத்து விற்கிறார் என்று பார்பதற்குள்... என் தாத்தா அவரை தாண்டி வேகமாக சென்று விட்டார்...

"பாயிருபாய்...."

குரல் தேய்ந்து காற்றில் கலந்து விட்டது...

* * * * * * * * * *

அதன் பிறகு நாங்கள் வீடு மாற்றி விட்டோம்... இந்த முறை நாங்கள் குடியேறிய வீடு சற்று தள்ளி உள்வாங்கி ஒரு சந்தினுள் அமைந்திருந்தது... எந்த சத்தமும் கேட்காத அமைதியான இடம்...

அதன் பிறகு கொஞ்ச காலம் அப்படியே கழிய, அந்த குரலை பற்றி நான் மறந்தே போனேன்...

நான் வளர்ந்து தி.நகரில் இருக்கும் பள்ளி, நூலகம் என்று எல்லா இடத்துக்கும் தனியாக செல்ல ஆரம்பித்த நாட்கள்.

ஒருநாள் காலையில் எத்தேச்சையாக அந்த பெரியவரை பார்த்தேன்... ஒரு தேநீர் கடையில் தேநீர் அருந்திய படி யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார்.. அவருடைய தள்ளு வண்டி சற்று தள்ளி சாலை ஓரமாக நிறுத்த பட்டிருந்தது....

மறுபடியும் பழைய ஆர்வம் வந்து என்னை தொற்றிக் கொண்டது... நைசாக சாலையை கடந்து அந்த வண்டிக்குள் என்ன தான் இருக்கும் என்று பார்ப்பதற்காக போனேன்... போய் எட்டிப் பார்த்தால்...

காலியாக இருந்தது... சே.. என்னவொரு ஏமாற்றம்...

* * * * * * * * * *

நான் சைக்கிள் வாங்கி கிரிக்கெட், திருவிழா, நூலகம் என்று சுற்ற ஆரம்பித்த நேரம்...

நுங்கம்பாக்கத்தில் உள்ள பல பிசியான தெருக்களில் ஒன்றில் இருந்த என் மாமாவின் நண்பரின் கடையில் நானும் என் பால்ய சினேகிதன் ஒருவனும் சும்மா பொழுது போக்கிக் கொண்டிருந்த போது...

அந்த சத்தம் கேட்டது...

"பாயிருபாய்...." அந்த பழைய கம்பீரம் சற்று குறைந்தாற் போல தோன்றினாலும், அதே குரல்...

அந்த பெரியவர் இப்போது சற்று தளர்ந்தவராய் அதே வண்டியை உருட்டியபடி எங்களை கடந்து சென்றுக் கொண்டிருந்தார்...

என் நண்பன் ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜா... அவனிடம் கேட்டால் ஏதாவது விவரம் தெரியுமோ என்று பேச்சு கொடுத்தேன்..

"டேய்.. அந்த தாத்தா என்ன வியாபாரம்டா பண்றாரு?"

"யாரு பாயா?" என்றான் அசுவாரஸியமாய்...

"அவரு பாயா? பாயிருப்பாய்னு ஏதோ விக்கிறாரே அவரையா சொல்றே?"

"ஆங்.. அவரு தான்.. எங்க ஊட்டாண்ட தான் மின்னாடி குடித்தனம் இருந்தாரு... "

"என்ன தாண்டா விக்கிறாரு அவரு?"

"விக்கிலை டா.. வாங்குறாரு…… பழைய இரும்பு சாமான் வாங்குவாரு"

ஓஹோ

பாயிருபாய் என்பதன் அர்த்தம் "பழைய இரும்பு"-ஆ...

அடக்கடவுளே..

சே இது தெரியாமல் போயிற்றே என்று ஒரு இனம் புரியாத ஏமாற்றம் மனதின் எங்கோ ஒரு மூலையில் ஏற்பட்டாலும்...

ஏதோ தொடர்கதையை படித்து முடித்த திருப்தி அந்த கணத்தில் ஏற்பட்டதை மறுக்க முடியாது...

* * * * * * * * * *

அதன் பிறகு சில சமயம் இங்குமங்கும் அவரைப் பார்த்திருப்பேன்...

நான் போரூருக்கு குடி பெயர்ந்த பின், அவ்வபோது பழைய தொடர்புகளால் நுங்கம்பாக்கம் போய் வந்து கொண்டிருந்தாலும் அவரை பார்க்கும் வாய்ப்பு ஏனோ எனக்கு கிடைக்கவில்லை...

ஆனால் அந்த கம்பீரமான, அடிதொண்டையிலிருந்து புறப்படும் அந்த பிரத்தியேக குரலை மட்டும் என்னால் இதுவரை மறக்கவே முடியவில்லை....

சுயநலச் சுழல் - பாகம் 2 (அறிவியல் சிறுகதை போட்டிக்காக)

வர்மா அந்த நிறுவனத்தின் மிக பெரிய அதிகாரியான சந்தர் முன் அமர்ந்திருந்தார்.

"வர்மா.. நீங்கள் எங்கள் நீல் ஆகாஷ் கேலக்ஸி டிரான்ஸ்வேஸ் நிறுவனத்தைப் பற்றி எந்த விதமான சந்தேகமும் கொள்ள இடம் இல்லை... இது வரை 30000 பேரை பத்திரமாக செவ்வாய் கிரத்துக்கு கொண்டு போய் சேர்த்திருக்கிறோம்... உங்களுக்கு தேவையான குடியிருப்பு, வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன... இங்கே எங்கள் ஸ்டேஷனில் கிளம்புவதில் இருந்து அங்கே செட்டில் ஆகும் வரை எல்லாம் எங்கள் பொறுப்பு மிஸ்டர் வர்மா... உங்களுக்கு காஸ்மோநாட்டாக வந்து விண்வெளி கலத்தை செலுத்தப் போவது உங்கள் நண்பர் யோகேந்த் தான்.. அவர் தான் எங்கள் நிறுவனத்தின் சிறந்த காஸ்மோநாட்... நீங்கள் எந்த பயமுமில்லாமல் எங்கள் கலத்தில் பயணம் செய்யலாம்..."

யோகேந்தும் ஆமோதித்தார்.

"உண்மை தான் வர்மா... நீங்கள் செலுத்த போகும் 8 மில்லியன் ஸிராவில் உங்களுக்கு கிடைக்கப் போவது இந்தியன் கேலக்ஸி டிரான்ஸ்வேஸின் வழி, செவ்வாய் இந்தியன் ஷெல்ஸ் குடியுரிமை, ஒரு இல்லம் மற்றும் எங்கள் விண்கலத்தில் பாதுகாப்பான பயணம்.. அங்கேயும் நீங்கள் பணம் பண்ண பல வழிகள் உள்ளன. கம்ப்யூட்டர் நிபுணரான நீங்கள் எங்கு சென்றாலும் வாழலாம்."

வர்மா தலையசைத்தார். சம்மதிப்பது போல.

"அப்போது நான் பணத்தை உங்கள் நிதி நிறுவனத்தில் செலுத்தி விடுகிறேன்.. நாளையே நாம் புறப்படலாம்.."

கிளம்பினார்.

மேகலாவை வழியிலேயே தொடர்புக் கொண்டு விஷயத்தை தெரிவித்தார்.

=================================================

எல்லாம் தயாராகி விட்டது.

விண்கலத்தில் பிரத்யேக உடைகளில் புறப்பட தயாராக யோகேந்த், வர்மா, மேகலா.

சந்தர் எதிரே லேசர் போனில் தெரிந்தபடி ஏதோ பேசிக்கொண்டிருந்தார்..

"சரி கவுண்ட் டவுன் ஆரம்பிக்கட்டும்"

பூஜ்யம் வந்தவுடன், லேசான அதிர்வு ஆரம்பித்தது. வெண்மையான ஒளி விண்கலத்தின் வாலில் தோன்றியது.

வெண்மையான ஒளியில் ஆரம்பித்து, நீலம்- பச்சை- மஞ்சள்- ஊதா நிற ஒளிக்கற்றைகள் ஊடுருவ ஆரம்பித்து,

'ச்சுய்ய்ய்ய்' என்ற ஒலியை தொடர்ந்து விண்கலம் மேல் நோக்கி சீறி பாய்ந்தது. உடனே அடுத்த நொடியே, விநாடிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் பாய ஆரம்பித்தது.

பூமியை விட்டு மூன்று நிமிடங்களில் விலகி அண்டத்தை நோக்கி சென்று கலந்தது.

பல்வேறு ஏரியல் சிக்னல்களில் கிளியராகி,

இந்தியன் கேலக்ஸி டிரான்ஸ்வே எனப்ப்டும் பால்வீதியின் பிரத்யேக வழியில் விரைய ஆரம்பித்தது அந்த விண்கலம்.

======================================


"யோகேந்த.. இந்த அண்டத்தில் எந்த இடையூரும் இல்லை.. ஏன்.. எதற்கு இந்த இந்தியன் கேலக்ஸி டிரான்ஸ்வே?"

"இல்லை. இந்த டிரான்ஸ்வே மூன்று லட்சம் ஒளிமைல் தூரம் வரை தான்.. அதற்கு மேல் நாம் செவ்வாய் கிரகத்தை பார்த்தபடி பயண தூரத்தை கடக்க வேண்டும். வழியில் இரண்டு இடங்களில் எரிபொருள் நிலையங்கள் இருக்கின்றன.. நாம் அங்கே கூட நிற்க தேவை இராது.. தேவைக்கு மேலேயே நம்மிடம் எரிபொருள் இருக்கிறது...இதை பாருங்கள்.. இங்கே தான் மஞ்சள் நிற ஒளிர்வுடன் இருக்கிறதே இது தான் இந்திய வல்லரசு அணுக்கழிவுகளை குவித்து வைத்திருக்கும் இடம். இது பழைய விண்கலங்கள் குப்பையாக கொட்டப்படும் இடம்.."

எதிரே ஸ்க்ரீனில் அண்டம் எனப்படும் பால்வீதியின் பிரம்மாண்டம் நீலமாக தண்ணீர் தெளித்தாற் போல ஒளிப்புள்ளிகளுடன் தெரிந்து கொண்டிருந்தது.

ஒரு அரை மணி நேரம் பின்

லேசர் போனில் தொலை தொடர்பு ஆள் தெரிந்தார்..

"உங்களுக்கு உங்கள் பழைய குறியீட்டில் ஒரு தகவல் வந்திருக்கிறது.. அதை உங்களுக்கு கனெக்ட் பண்ணலாமா?"

"நிச்சயமாக. காத்திருக்கிறேன்.. இணைப்பு கொடுங்கள்..."

அவர் மறைந்து சைலேஷ் தெரிந்தான்... அணைந்தான்...

தொலைதொடர்பு ஆள் மறுபடி தோன்றினார்.. "இணைப்பு துண்டித்து கொண்டது.. மன்னிக்கவும்"

"அவர் மறுபடி தொடர்பு கொண்டால் உடனே இணைப்பு கொடுங்கள்" என்று போனை கட் செய்தார்.

மேகலா அதே நேரம் யோகேந்திடம் ஏதோ கேட்டு கொண்டிருந்தாள்..

"என்ன யோகேந்த் என்ன நடக்கிறது இங்கே?"

"கருந்துளையை பற்றி மேகலா கேட்கிறார்கள்"

"கருந்துளையா?"

"ஆமாம்.. விண்வெளியில் உள்ள பல ஆபத்துகளில் ஒன்று..."

"ரொம்ப ஆபத்தானவையா என்ன ஆபத்து?

மேகலா கேட்டவுடன் சொல்ல ஆரம்பித்தார்..

"இதுவும் சூரியன் போல ஒரு நட்சத்திரம் தான்.. சூரியனை விட பெரிய நட்சத்திரம் என்று கூட சொல்லலாம்.. இவ்வாறான நட்சத்திரங்கள் அண்டத்தில் கோடிக்கணக்கில் உள்ளன.

இந்நட்சத்திரங்கள் காலப்போக்கில் தங்கள் ஒளி கொடுக்கும் எரிபொருள் தீர்ந்த நிலையில் ஒளியை இழக்க ஆரம்பித்து விடுகின்றன. ஆரம்பத்தில் இவற்றின் ஈர்ப்பு சக்தியானது பூமியை விட சிறியதாக தான் இருக்கும்.. எரிபொருள் தீர்ந்தவுடன் அவற்றின் சீதோஷணம் குளிர ஆரம்பிக்கும்.. அது தானே அழிய ஆரம்பிக்கும்...

அதனுள் இருக்கும் அணுக்கள் உடைந்து எலக்ட்ரான், நியூட்ரான், புரோட்டானாக பிரியும்.. இப்படியாக அழிவை நொக்கி பயணித்து தான் இருந்த அளவை விட 100 மாங்கு சின்னதாக ஆகும்.. ஆனால் என்ன காரணத்தாலோ அதன் ஈர்ப்பு சக்தி 10000 மடங்கு அதிகமாகும்... மேலும் மேலும் எலக்ட்ரான் ரிபல்ஷன் என்று சொல்லப்படும் எலக்ட்ரான் தாக்குதல்கள் அதனுள் நடந்து ஈர்ப்பு அக்தி ஏலும் வலுவடையும்..

இப்படியாக நியூட்ரான் ஸ்டார் என்று சொல்லப்படும் நிலைக்கு வந்து 500 மடங்கு பழைய உருவத்தில் குறைந்து ஒளியை உமிழ்ந்து கொண்டிருக்கும்...அப்போது அதன் ஈர்ப்பு சக்தி 100,000,000,00 மடங்கு அதிகரித்திருக்கும். கடைசியாக ஒளி உமிழ்தலால் சக்தி இழப்பு ஏற்பட்டு மேலும் சிறியதாகி ஒரு கட்டத்தில் ஒளி கதிர்கள் வருவது கூட நின்று விடும்..

அப்போது இது கருப்பாக காணப்படுதால் கருந்துளை எனப்படும்.. இதன் ஈர்ப்பு சக்தியின் அழுத்தம் மிக அதிகமாக இருக்கும் காரணத்தால் நெருங்கும் எந்தப் பொருளையும் இழுத்து உள்வாங்கி கொள்ளும்.. அவ்வளவு தான் உள்ளே போன எதுவும் திரும்பி வரவே வராது...

இந்திய வல்லரசு அணுக்கழிவுகளை ரகசியமாக கருந்துளைக்குள் தள்ளி விடுவதாக கூட வதந்திகள் உண்டு..."

"நாம் போகும் வழியில் ஒரு கருந்துளை தெரியும்... இதோ தெரிகிறது பாருங்கள்..." என்று திரையில் ஒரு இடத்தை சுட்டி காட்டினார்...

வர்மா பேச்சை மாற்ற விரும்பியவராய்

"செவ்வாய் கிரகம் பூமியை விட குளிர்ந்த கிரகம் இல்லையா?" என்று கேட்டார்...

"நிச்சயமாக..ஆனால் நீங்கள் குடியேற போகும் மார்ஸ் இந்தியன் ஷெல்ஸ் செயற்கையான் முறையில் அணு கதிர்வீச்சால் பாதுகாப்பான முறையில் வெப்பமூட்டப் பட்டிருக்கிறது.. கவலையே இல்லை. செவ்வாய் கிரகத்தில் வாழ்க்கை முறை ரொம்ப எளிமையானது... அதிகமான மக்கள் தொகை கிடையாது... விஷேச எந்திர மனிதர்களின் காவல் 24 மனி நெரம் 37 நிமிஷங்களும் இருக்கும்... பூமியுடன் எந்த நெரமும் தொடர்பு கொள்ளலாம்... அதுவுமில்லாமல் செவ்வாய் கிரகம் யுத்தமில்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டிருப்பது மற்றொரு வசதி..."

யோகேந்த் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்த லேசர் போன் கூப்பிட்டது...

திரையில் சைலேஷ் தெரிந்தான்...

ஆன் பண்ணியவுடன்

சிரித்தான்...

"புதிய இடத்துக்கு குடிபெயர்ந்து விட்டீர்களா வர்மா? பழைய குறியீட்டில் தாங்கள் இல்லையே?"

என்று ஆரம்பித்தான்..

"ஆமாம்" என்றார் குறும்பு சிரிப்புடன் வர்மா.

"நினைத்தேன்.. உங்கள் முதல் ஜாப் அபாரம்.. எங்கள் நிறுவன தலைவர் உச்சி குளிர்ந்து விட்டார்.. இரண்டாவது ஜாப் தரப்போகிறோம் நாளையே..."

"அப்படியா.. அந்த பொருளை என்ன தான் செய்தீர்கள்?"

ஆர்வ மிகுதியில் பக்க்த்தில் இருந்த யோகேந்தை மறந்தவராய் கேட்டார் வர்மா.

"நீங்கள் கொடுத்த இன்ட்ரூடர் வைரஸ்களில் எங்கள் விஷேச நிரலிகளை நிரப்பி எதிரி நிறுவன கணினி கேந்திரங்களை தாக்கி விட்டோம்... உங்களிடம் மறைப்பானேன்.. எதிரி நிறுவனத்தின் தானியங்கி வழிக்காட்டி நிரல்களை குழப்பி விட்டோம்... அவர்கள் எந்த கிரகத்துக்கு பயணம் புறப்பட்டாலும்... அவர்களுக்கு சரியாக போவது போல தான் தெரியும்... ஆனால் அவர்களுக்கே தெரியாமல்.... கருந்துளை என்று கேள்வி பட்டிருக்கிறீர்களா? சரி அது எதற்கு நமக்கு விடுங்கள்... நீல் ஆகாஷ் கேலக்ஸி டிரான்ஸ்வேக்கு இன்று முதல் போதாத காலம்..."

அடுத்து சைலேஷ் சொன்ன எதுவுமே காதில் விழாமல் யோகேந்த் உடனடியாக ஆன் போர்டு கேமிராவை இயக்க திரையில் ஒரு கருப்பு வட்டம் பெரிதாகிக் கொண்டிருந்தது....

"ஹோ" என்று அலறிய படி மூவரும் திரையைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே

படு பயங்கரமான அந்த கருந்துளையின் ஈர்ப்பு விசையில் இவர்களின் விண்கலம் சிக்கிக் கொண்டது...

இதே போன்று ஈர்ப்பு விசையில் சிக்கி நுழைந்திருந்த பல்வேறு பாறைகள், குப்பைகள், துகள்களோடு வேக்மாக ஒரு சுழல் போல...

அனைத்தையும் தன் கருப்பு உடலுக்குள் இழுத்துப் போட்டுக் கொன்டிருந்த கருந்துளைக்குள்,

கிர்ரென்ற புயல் வேகத்தில் விண்கலம் செல்ல ஆரம்பித்து இருந்தது...

சுயநலச் சுழல் - பாகம் 1 (அறிவியல் சிறுகதை போட்டிக்காக)

அந்த மிக உயரமான 910 மாடி கட்டிடத்தின் 903-வது மாடியில் இருந்த அந்த ஆஃபீஸில் இருவர் பேசிக்கொண்டிருந்தனர்.

சைலேஷ்- ஒரு மிகப்பெரிய கம்பெனியின் கம்ப்யூட்ட்ர் பிரிவு தலைவர். ஹார்மோன் பிறப்பு மூலம் பிறந்திருந்த அவரது உருவம் டாக்டர்களால் கச்சிதமாக உருவாக்கப்பட்டிருந்தது.

டி.என்.ஏ மூலக்கூறுகளை விஞ்ஞானிகள் படிக்க முடிந்தது ஒரு மிகப்பெரிய மருத்துவப்புரட்சி என்று இந்திய வல்லரசு சொல்லிக்கொண்டிருந்த நேரம் அது.

கி.பி.2220.

பூமியே ரசாயன போர்களால் அல்லோலோகப் பட்டிருக்கும் நேரம். சிதறி கிடந்த நாடுகள் ஒன்றாகி 7 வல்லரசுகளாகி பூமியையே ரணகளம் ஆக்கியிருந்த ஒரு இக்கட்டான நேரம்.

எங்கு நோக்கினும் சண்டை நடக்கும் பண்டைய காலம் போல் அல்லாமல் விஷேச உடை அணுகுண்டு பாதுகாப்பு உடை அணிந்து விஷேசமாக சண்டையிடுவதற்கென்றே உருவாக்கப்பட்டிருந்த வீரர்கள் தங்கள் திறமைகளை பயன்படுத்தி ரசாயன போர்கள் செய்து உலகின் ஒரு பக்கத்தில் தங்கி சண்டையிட்டு கொண்டிருந்தனர். மறுப்பக்கம் அமைதியான உலகம் அமைந்திருந்தாலும், ரசாயன போர்களின் பாதிப்புகள் அவர்களையும் அலைக்கழித்து கொண்டிருந்தன.

எய்ட்ஸ் போன்ற பண்டைய கால வியாதிகள் காற்றில் பரவக்கூடிய புதிய ரூபத்தில் வந்து மக்களை சேதப்படுத்திக் கொண்டிருந்தன.
ஏரியல் ட்ராஃபிக் (Arial Traffic) என்று சொல்லப்படும் வான்வழி போக்குவரத்து நெரிசலாகி விட்டிருந்தது. ஓஸோன் படலத்தை செயற்கையாக தயாரித்துப் படர விட்டிருந்தாலும் சூரிய அல்ட்ரா வயலட் கதிர்கள் தங்கள் கோர ரூபத்தை காட்டிக்கொண்டு தான் இருந்தன.

விண்வெளி நிலையங்கள் பல்வேறு கோள்களில் அமைக்கபட்டிருந்தன. செவ்வாய் கிரகம் மனிதர்கள் வாழும் இடமாகியிருந்தது. மனிதர்கள் பலர் அமைதி வாழ்வைத்தேடி த்ங்கள் கலங்களில் விண்வெளியில் சுற்றியலைந்துக் கொண்டிருந்தனர்.

செவ்வாய் கிரகத்தை இந்திய வல்லரசு கைப்பற்றி தங்கள் நாட்டவரை அங்கே குடி வைத்திருந்தது. இருந்தாலும் மணி ஆஃப் கேலக்ஸி (Money of Galaxy) என்று சொல்லப்படும் விண்வெளியில் உள்ள அனைத்து இடங்களிலும் செல்லும் பொதுவான பணத்தைப் பெற்றுக்கொண்டு பிறரையும் அனுமதித்தது. ஸிரா (Zira) என்று சொல்லப்பட்ட இந்த பணம் சர்வதேச பணம் மட்டுமல்ல சர்வ கிரக பணம்.

வேற்று கிரகத்தவருடன் பல்வேறு வகைகளில் தொடர்புக்கொண்டு நமது பால்வீதியின் பக்கத்து நட்சத்திரத்தை சுற்றிக்கொண்டிருந்த கோள்களில் ஒன்றில் காணப்பட்ட விண்வெளி மனித இனத்துடன் நட்பு பூண்டிருந்தனர், மனிதர்கள்.

பூமி வேகமாக காலியாகிக் கொண்டிருந்தது. பனிப்பொழிவு கடல் கொந்தளிப்பு பூமி சுற்றும் வேகம் நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டிருந்த ஆபத்து இவைக் காரணமாக பூமியில் இன்னும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் வாழ முடியாது என்பதால் அனைவரும் வாழக்கூடிய கோள்களில் குடியேறிக் கொண்டிருந்தனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் நம் கதை துவங்குகிறது. 910 மாடி கட்டிடத்தில் பேசிக்கொண்டிருந்த மற்றொரு நபர், வர்மா.

"என்ன சொல்கிறீர்கள் சைலேஷ்? அந்த கம்ப்யூட்டர் வைரஸ்கள் ஆபத்தானவையாயிற்றே?"

"தெரியும் வர்மா! அதுவும் தெரியும்! நீங்கள் எப்படிப்பட்ட புத்திசாலி கம்ப்யூட்டர்களையும் ஏமாற்றி தகவல்களை அழிக்கக் கூடிய வைரஸ்களை படைக்கக் கூடியவர் என்பதும் தெரியும்! வைரஸ்களை அனுமதிக்காத கம்ப்யூட்டர்களையும் தாக்கும் வல்லமைப்படைத்த வைரஸ்களை நீங்கள் எங்களுக்காக உருவாக்கித்தர வேண்டும்..."

"மிஸ்டர் சைலேஷ்! உங்களுக்கு தெரியும்.. கம்ப்யூட்டர் வைரஸ்கள் த்யாரிப்பது கம்ப்யூட்டர் சட்ட்த்தின் கீழ் மரண தண்டனை வழங்கும் அளவுக்கு கொடிய குற்றம்.. காரணம் கம்ப்யூட்டர்கள் இல்லாவிட்டால் இந்த உலகத்தில் குழந்தை கூட பிறக்க முடியாது... அதுமில்லாமல் வீட்டுக்கு வீடு, கம்ப்யூட்டருக்கு கம்ப்யூட்டர் இணைக்கப்பட்டிருக்கிறது... மிக ஆபத்தான விஷயம்...."

அவர் தயங்கி தயங்கி இழுப்பதை பார்த்த சைலேஷ் சிரித்தான்..

"நீங்கள் எங்கு வருகிறீர்கள் என்பது எனக்கு தெரியும். எவ்வளவு ஸிரா வேண்டும் என்பது உங்கள் விருப்பம்... அந்த வைரஸ்களை எம்ப்டியாக 5000 எண்ணிக்கையில் தயாரித்து தரவேண்டும் உடனடியாக... ஒரு 5 லட்சம் பைட்கள் பிடிக்கும் அளவிற்கு ஒவ்வொரு வைரஸும் இருக்க வேண்டும்...தாய் வைரஸ்கள் 2000 இருந்தால் கூட போதும்.. நான் லேசர் போனில் தடர்பு கொள்கிறேன். உங்களுடைய திறமைக்கு எங்கள் கம்பெனி கடமைப்பட்டதாகும்...இன்த ஜாபை வெற்றி கரமாக முடித்துக் கொடுத்தால் இன்னும் மூன்று ஜாப்கள் தருவோம்.வருகிறேன் மிஸ்டர் வர்மா" என்று பதிலுக்கு காத்திருக்காமல் கிளம்பினார்...

மனிதக்காற்று சமீபிப்பதை அறிந்த ஏர் சென்சார் ஒர்க்கில் கதவு தானாக திறந்தது. வெளியேறியவுடன் மூடியது...

வர்மா எழுந்து ரிலாக்ஸ்டாக ஃப்ரீ மைண்ட் நாற்காலியில் அமர்ந்தார். உடனே அறையில் அவருக்கு பிடித்த மென்மையான இசை அறையில் பரவியது...

தொடர்ந்து பக்கத்து அறையிலிருந்து அவரது இப்போதைய லைஃப் பார்ட்னர் மேகலா வந்தாள்.

"வர்மா.. என்ன சொன்னார் சைலேஷ்"

"சைலேஷ் நமக்கு எவ்வளவு ஸிரா வேண்டுமானாலும் தர தயார்...அவருக்கு அந்த வைரஸ்கள் தயாரித்து தர வேண்டுமாம்"

"வர்மா இதை விட நமக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது! செவ்வாய் கிரகத்தில் குடியேற நமக்கு தேவைப்படும் 7 மில்லியன் ஸிராவையும் இந்த ஒரே ஜாபில் சம்பாதித்து விட முடியும்.. நாம் ஏற்கனவே சம்பாதித்து வைத்திருக்கும் 16 மில்லியன் ஸிராவை தாராளமாக செலவு செய்து வாழலாம்.. இன்று இரவு முழுவதும் வேலை செய்தாலே போதும் அவ்ர்கள் கேட்கும் வைரஸ்களை தயாரித்து விட முடியும்..."

வர்மா மௌனமாக தலையாட்டினார்.

உடனே தன்னுடைய பிரத்யேக லேபில் வைரஸ் தயரிக்க கிளம்பினார்..

==============================

மறுநாள்

வர்மா அந்த மெகா டி.வி.யில் த்ரீ.டீ என்று சொல்லப்படும் முப்பரிமாண தொலைக்கட்சியில் பாடல்களை ரசித்துக் கொண்டிருந்தார்.
பாடிக்கொண்டிருந்த டி.வி பெண் த்ரீ டீ எஃபக்ட்டில் நெருங்கி நெருங்கி வந்தாள். அவரை சுற்றி சுற்றி பாடினாள். அவர் தலைக்கு மேல் தாவினாள்.

அப்போது அந்த உருவம் திடீரென ஒரு மூலையில் தெரிந்தது. அது சைலேஷ். லேசர் போனில் கூப்பிட்டுக் கொண்டிருந்தான்.

அவன் உருவம் முதலில் தெரிந்தவுடன் இவர் கனெக்ஷனை ரிசீவ் செய்யும் பட்ட்னை ரிமோட்டில் தட்ட, இவர் உருவம் அங்கே தெரிந்தவுடன் சைலேஷ் புன்னகைத்தான்.

டி.வி.யை அணைத்தார், வர்மா.

"என்ன சைலெஷ்? எப்படியிருக்கிறது பொருள்?"

"சூப்பர்.... நன்றாக வேலை செய்கிறது. எங்கள் கம்பெனிக்கு நீங்கள் செய்த உதவிக்கு எங்கள் கம்பெனி செய்யும் பதிலுதவி... லேசர் பிரிண்டரை ஆன் பண்ணுங்கள் வர்மா.."

என்றவுடன் ரிமோட்டில் அந்த போனின் அருகிலிருந்த பிரிண்டரை ஆன் செய்தார் வர்மா.

சைலேஷ் பட்டனைத் தட்டியவுடன் பிரிண்டர் வேலை செய்தது.
'உய்ய்ய்' என்ற மெல்லிய உறுத்தாத உறுமல். தொடர்ந்து அந்த கார்டு அவர் கைக்கு வந்தது.

10 மில்லியன் ஸிராவிற்கான காசோலை கார்டு.

எல்லா நிதியமைப்பிலும் செல்லுபடியாகும் ப்ளூட்டோனியம் கார்டு. பரவசமானார் வர்மா.

"உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை சைலேஷ்..இவ்வளவு பணத்தை கொடுக்குமளவு பெரிய கம்பெனி.. அது என்ன கம்பெனி சொல்லுங்கள் சைலேஷ்?"

"சொல்கிறேன் வர்மா... இப்போதல்ல... நாளை மறுநாள் இரண்டாவது ஜாபை ஒப்படைக்கும் போது... அதுவரை பை பை"

அவனது உருவம் மறைந்தது. வர்மா மேகலாவை அழைத்தார்.

"மேகலா 10 மில்லியன் ஸிரா கிடைத்திருக்கிறது... ஹே... நாம் உடனே செவ்வாய் கிரகம் போகிறோம்.. நான் இப்போதே டிராவல் ஏஜன்ஸி ஒன்றை தொடர்பு கொள்கிறேன்.. பாவம் சைலேஷ்.. இரண்டாவது ஜாபை ஒப்படைக்கிறேன் என்றான்.. சரி என்று சொல்லி விட்டேன்.. அவன் அடுத்த முறை தொடர்பு கொள்ளும் போது நாம் விண்வெளி கலத்தில் இருப்போமோ, செவ்வாய் கிரகத்தில் இருப்போமோ தெரியவில்லை.. ஆனால் தொடர்பு கொண்டு விட முடியும்.. நாம் தான் அவனுக்கு உதவ முடியாது..."

"வர்மா.. நான் ஏரியல் ஷாப்பிங்கில் நமக்கு தேவையான உபகரணங்களை வாங்கிக் கொண்டு வந்து விடுகிறேன்.. நீங்கள் நீல் ஆகாஷ் கேலக்ஸி டிரான்ஸ்வேக்கு போய் நம் நண்பர் யோகேந்தை காண்டக்ட் பண்ணுங்கள்"

என்று சொல்லிவிட்டு பரபரப்பாக கிளம்பினாள்..

வியாழன், ஜூலை 24, 2008

சென்னையின் மர்மக்கொலைகள்

சென்னையில் கடந்த சில மாதங்களாக எல்லோரது தூக்கத்தையும் கெடுத்து வருவது சைக்கோ கொலைகாரன் பற்றிய பீதி...

பரபரப்பு செய்திகளை காசு பண்ணும் பத்திரிகைகள்...

தூக்கமிழந்த ஊர்காவல் படையினர், காவல் துறையினர்...

திடீர் ஹீரோவாக ரோந்து சுற்றி வரும் இளவட்டங்கள்...

ஒதுங்க இடமின்றி அலையும் சென்னையின் பரிதாபத்தற்குரிய நடைபாதை வாசிகள்,

அநாதை சிறுவர்கள், பிச்சைக்காரர்கள், பேப்பர் பொறுக்கும் வேலை செய்வோர்...

தெருவில் படுத்துறங்கும் வெளியூர் தொழிலாளிகள்... என்று

பகட்டான மனிதர்கள் முதல் பரிதாபத்துக்குரிய மனிதர்கள் வரை அனைவரின் அன்றாட சாதாரணமான வாழ்வியலை ஏதோ ஒரு வகையில் பாதித்துக் கொண்டு இருக்கிறது...

இத்தனை கொலைகள் நடந்தும் ஏன் இன்னும் கொலைகாரனை பிடிக்கவில்லை என்று எல்லா தரப்பும் போலீசை சாடிக் கொண்டிருக்கின்றனர்....

சென்னையில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான வீதிகளில், படுத்துறங்கும் லட்சக்கணக்கான மனிதர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிப்பது என்பது நடவாத செயல்... நடைமுறையில் சாத்தியம் இல்லையும் கூட...

சைக்கோ கொலைக்காரன் பேரில் வேறு யாராவது முன்விரோதத்தில் கொன்றிருப்பார்களோ என்பதில் ஆரம்பித்து, தடயங்கள் சேகரித்தல், விசாரணை என்று ஒரு கொலைக்கே போலீசாரின் உயிர் போய் விடும்... இதில் இது வரை 8 கொலைகள் நடந்துள்ளது... நிச்சயம் அவ்வளவு சுலபத்தில் விசாரணையை முடித்து விட முடியாது..

இதில் மீடியாக்களின் பிரஷர், அரசாங்கத்திலிருந்து பிரஷர்... என்ன தான் செய்யும் போலீஸ்...

எல்லா TV-களிலும் பேட்டி அளிக்கும் பொது மக்கள் அனைவரும் போலீஸ் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை ஒரு ஸ்டாண்டர்ட் கேள்வியாக கேட்பதை பார்த்தால் வெறுப்பாக இருக்கிறது...

நம்மை சுற்றியுள்ள சமூகத்தில் நடைபெறும் தவறுகளை தட்டிக்கேட்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது... குறைந்தபட்சம் நாம் பாதிக்கப்படும் போதாவது எதிர்த்து குரல் கொடுக்க பழகிக்கொள்ள வேண்டும்...

நம் அண்டை வீடுகளில், நம் தெருவில் வசிப்பவர்கள் யார் யாரென நாம் தெரிந்து வைத்துக்கொண்டாலே பல சிறு குற்றங்களை தடுத்து விடலாம்.. சிறு குற்றங்கள் தான் பெரும் திருட்டு கொலை, கொள்ளை சம்பவங்களுக்கு அடிப்படையாக அமையும்....

மக்களுக்கு குற்றங்கள் பற்றிய போதிய விழிப்புணர்வு, வாழும் மனிதர்களுக்குள் ஒற்றுமை, பிறருக்கு உதவி செய்யும் மனிதநேய மனம் இவை ஏற்படும் வரை போலீசாருக்கு அதிக வேலை இருந்து கொண்டு தான் இருக்கும்...

புதன், ஜூலை 23, 2008

குதிரை பேரமும், குப்பனும் சுப்பனும்

MP-கள் தேர்தலில் குதிரை பேரம்- MP-களுக்கு 50 கோடி வரை லஞ்சம் (பத்திரிகை செய்திகள்)

அந்தாளு அப்பாவி வியாபாரி போல... டெல்லியில குதிரைப்பேரம் நடக்குதுன்னு பேப்பர்ல படிச்சுட்டு தன் குதிரையெல்லாம் லாரியில ஏத்தி விக்க கொண்டு வந்துட்டாராம்...

அப்புறம் தான், அடடா… நடந்தது கழுதை பேரம்னு தெரிஞ்சு வருத்தப்பட்டாராம்....




சே.. இப்படி ஆகி போச்சே... காங்கரசுக்கு பதிலா ஆட்சியில பி.ஜே.பி இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும்?

ம்ம்... பி.ஜே.பி அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிச்சு இருக்கும்.. காங்கிரஸ் எதிர்த்து இருக்கும்... என்னடா நாட்டு நடப்பு தெரியாம கேள்வி கேட்டுக்கிட்டு?




நம்பிக்கை வாக்கெடுப்பு முடிஞ்சு போச்சு.. இனிமே என்னண்ணே ஆகும்

புடிச்சு கட்டி வெச்சிருந்த எம்.பிங்களை அவுத்து விட்டுருவாங்க... ஜெயில்ல இருந்து கூட்டிட்டு வந்த MP-ங்க தப்பிச்சு போகாம இருந்தா மறுபடியும் கொண்டு போய் ஜெயில்ல போட்ருவாங்க... கட்சி மாறி ஓட்டு போட்டவங்களுக்கு அவங்கவங்க கட்சி கல்தா கொடுக்கும்...2-3 கட்சி உடையும், எப்படியும் மினிமம் 10 பேரு அணி மாறுவாங்க... நிறைய வேலை இருக்கும்பா...




ஏன் அந்த MP-கள் எல்லாம் ஆளுங்கட்சி அமைச்சரை சுத்தி நின்னு கத்தி கலாட்டா பண்ணிட்டு இருக்காங்க?

5 கோடி பணம் மட்டுமில்லாம அதை பத்திரமா கொண்டு போக ஆளுக்கு 5 கேடியும் சப்ளை பண்ணனும்னு கேட்டு தகராறு பண்றாங்க...…




செய்திய ஒழுங்கா கேக்குறானுங்களா? கம்முனாட்டிங்க... காதை மூடி கேட்டுட்டு கண்டபடி கதை கட்டி விட்டுடுறானுங்க...

என்னாச்சுப்பா?

எம்.பிங்க ஓட்டு போடறதுக்கு 5 கோடின்ற செய்தியை அரைகுறையா கேட்டுட்டு.. வரப்போற எம்.பி தேர்தல்ல ஓட்டு போட 5 கோடி தர்றாங்களாம்னு எவனோ ஊதி விட்டுட்டான்.. என் தாத்தா மாரை பிடிச்சுட்டு சாஞ்சுட்டார்...




நாங்கள் MP-களை விலைக்கு வாங்கவில்லை...

மக்கள்-
பாவிங்களா... விலை என்னன்னு போஸ்டர் ஒண்ணு தான் அடிக்கலை.. பக்கத்துல இருந்துக்கிட்டு தொகுதி பக்கம் கூட வராத அத்தனை பயலும் பின்னே அங்கே எதுக்கு வந்தானுங்க?...

விலைக்கு வாங்கவில்லைன்னு சொன்னா என்ன அர்த்தம்? ஓஹோ....அவங்க விலை அதிகம்… படியாதுன்னு தான் ஒரு நாள் வாடகைக்கு எடுத்துக்கிட்டீங்களா? சூப்பர்ங்க... MPங்கல்லாம் ஹயர் சைக்கிள் மாதிரி ஆயிட்டாங்க...




எங்கள் வெற்றி உண்மைக்கு கிடைத்த வெற்றி...

யோவ் பேசிக்கினே காந்தி சிலையாண்ட போய்க்கினு கீற பாரு... சிலை கையில தடி கீது.... ஜாக்கிரதை




2 தமிழ்க்கட்சி MPங்க கொறடா கட்டளையை மீறி கட்சி மாறி ஓட்டு போட்டங்களாமே... ப்தவி பூடாது?

டேய்... விஷயம் புரியாத ஆளாருக்கியே? இன்னும் 6 மாசம் அப்புறம் தேர்தல் வரப்போது.. எப்படியும் கட்சியில இருந்து கல்தா கொடுத்துட்டாங்க... 6 மாசத்துல பெரிசா என்னத்தை சம்பாதிச்சிட முடியும்?...அதான் வந்த வரை லாபம்னு செட்டில் ஆயிட்டாங்க போல...


இவரு கட்சி கொறடா சரி... அவரு யாருப்பா?

அவரு கட்சி மொறடா சார்... நம்பிக்கை வாக்கெடுப்பு முடியற வரை MP-களை கடத்தி கொண்டு வந்து மொறட்டுத்தனமா கட்டிப்போட்டு வெச்சுடுவாரு சார்...

அவரு?

அவரா? அவரு கட்சி தொறடா... மத்த கட்சி MP-ங்களுக்கு பணப்பொட்டிய தொறந்து தொறந்து காட்டி நம்ம பக்கம் இழுப்பார்...




ஏன் எல்லா கூட்டணி தலைவர்களும் வாழ்த்து சொல்ல நேர்ல போறாங்க?

பண விஷயத்துல எப்பயுமே கொஞ்சம் கவனமா தான் இருக்கணும்



திங்கள், ஜூலை 21, 2008

அங்கிள் சாமும், அறிவிக்கப்பட்ட மின்வெட்டும்

எப்படியோ அறிவிக்கப்படாத மின்வெட்டை பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு ஒரு வழியாய் அறிவிக்கப்பட்ட மின்வெட்டாய் மாற்றி விட்டார்கள்...

ஒரு மணி நேரத்துக்கு அதிகமாய் கரண்ட் கட் இருக்காது என்ற உத்திரவாதமாவது இதன் மூலம் இருக்கும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்....

இதில் புதிதாய் கிளம்பியுள்ள இன்னொரு புரளி தமிழகத்தில் எப்போதும் பழக்கத்தில்(?) இல்லாத அறிவிக்கப்பட்ட மின்வெட்டு இப்போது மட்டும் ஏன்?

தமிழகம் அல்லாது பல மாநிலங்களிலும் இதே போல மின்வெட்டு நடைமுறையில் இருக்கிறது... ஏன்?

நம் ஆட்சியாளர்களுக்கு புதிதாக ஏற்படப்போகும் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு திண்ணமாய் ஒரு காரணம் வேண்டும்....

புள்ளி விவரங்கள், எதிர்கால கணிப்புகள் விஞ்ஞானிகளையும், பொருளாதார அறிஞர்களையும் வேண்டுமானால் திருப்தி படுத்தலாம்.. ஆனால் மக்கள்? அவர்களுக்கு விளங்க வைக்க ஒரே வழி மின்வெட்டு தான்....

இந்தியாவின் மின் தேவையின் எதிர்காலத்தை மக்களுக்கு புரிய வைக்க தேர்தலை கூட மனதில் வைத்துக் கொள்ளாமல் மின்வெட்டு அறிவிக்குமா அரசாங்கங்கள்?

இந்த அணுசக்தி காண்டிராக்ட் 50000 கோடி மதிப்புள்ளது... அது கைக்கு கிடைத்தாக வேண்டும்... அணு ஒப்பந்தத்தை ஆதரித்தால் மீண்டும் ஆட்சி அமைக்க சி.ஐ.ஏ உதவி செய்வதாக கூட வாக்களித்து இருக்கலாம்....(சி.ஐ.ஏ இது போன்ற காரியங்களுக்கு பெயர் போனது.. யாருக்கு தெரியும் வலைப்பூக்களை கூட ட்ரான்ஸ்லேட்டர் வைத்து கண்காணித்து கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...)

உண்மையில் நம் நாட்டில் மின்வெட்டு கொண்டு வரும் அளவிற்கு மின் பற்றாக்குறை இல்லையாம்...

இப்படி போகிறது அந்த புரளி...

எது உண்மையோ, எது நன்மையோ ஆண்டவனுக்கே சாரி... அங்கிள் சாமுக்கே வெளிச்சம்...

ஞாயிறு, ஜூலை 20, 2008

மழலை சிரிப்பின் மாயம்...

நான் சமீபத்தில் வலை மேய்ந்து கொண்டிருந்த போது இந்த வீடியோக்களை பார்க்க நேர்ந்தது...

குழந்தையின் சிரிப்புக்கு தான் என்ன சக்தி... மனம் அப்படியே லேசாகி விடுகிறது... இரண்டு வீடியோவையும் இறக்க்ம் செய்து வைத்துக் கொண்டேன்.. இப்போதெல்லாம் டென்ஷன் மிகுந்த வேலையின் நடுவே இந்த வீடியோக்களை பார்க்க தவறுவதில்லை நான்....

அப்பா கொடுக்கும் வித்தியாசமான சப்தத்துக்கு.. மூச்சு முட்ட சிரிக்கும் குழந்தை...



அப்பா கொடுக்கும் வித்தியாசமான சப்தத்துக்கு.. மூச்சு முட்ட சிரிக்கும் குழந்தை...



உலகத்தில் உள்நாட்டு கலவரங்களும், போர் அபாயத்தில் சிக்கி கிடக்கும் நாடுகளிலும் ஊர்களிலும் இது போன்ற கள்ளமில்லா குழந்தைகள் இருக்குமில்லையா?

ம்ம்ம்ம்... நினைத்தால் மனது பாரமாக தான் இருக்கிறது.. அந்த பாரத்தை போக்கி கொள்ளவும் இந்த வீடியோவை தான் பார்க்க வேண்டியிருக்கிறது....

PKP-யின் பயனுள்ள பதிவுகள்...

PKP

இவருடைய பதிவுகளுக்கு அறிமுகம் தேவை இருக்காது என்றே நினைக்கிறேன்.. என்றாலும் புதியவர்களின் வசதிக்காக இந்த பதிவு...

www.pkp.blogspot.com

என்ற blog முகவரியில் இயங்கி வரும் நண்பர் PKP-யின் பிலாகைப் பற்றி எனக்கே 2 வாரம் முன்பு தான் தெரிய வந்தது...

மிக எளிய மொழி நடையில், அருமையான உதாரணங்களோடு பல புதிய தொழில்நுட்பங்களைப் பற்றியும், புதிய கணினி விஷயங்களையும் அருமையாக விளக்குகிறார்...

4 வருடங்களாக இவர் பதிவிட்டு வருகிறார்... 2004-ம் வருடம் 71 பதிவுகள் ஆரம்பித்து 2006-ல் 207, 2007-ல் 224 எனப் பதிவுகளாக எழுதிக் குவித்து இருக்கிறார்... இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் பெரும்பான்மையான பதிவுகள் நமக்கு புதிய விஷயங்களை அறிமுகப் படுத்தும் விதமாகவும், நமக்கு உதவிகரமான கணினி டிப்ஸ் பதிவுகளாக இருப்பதும் தான்....

கணினி அறிமுகம் அதிகம் இல்லாதவர்களுக்கும் புரியும் விதமாக சுவாரஸ்மான தகவல்களை தருவது அருமை... இதில் இன்னும் சிறப்பு நிறைய தமிழ் மின்னூல்களும் தேடிப் பிடித்து பதிவிறக்கம் செய்ய தோதாக இணைப்புகள் கொடுக்கிறார்....

இன்னும் முடிந்து விடவில்லை... பயனாளர்களின் டெக்னிக்கல் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காகவே ஒரு FஓறூM ஒன்றையும் நடத்தி வருகிறார்...(இதை நான் இன்னும் பயன்படுத்த ஆரம்பிக்கவில்லை).. http://wiki.pkp.in/forum:start


பொதுவாக நான் வாரம் ஒரு பதிவரை தேர்ந்தெடுத்து கூகிள் ரீடரில் இணைத்து படிக்க ஆரம்பிப்பேன்... PKP அவர்களின் இடுகைகளை 2 வாரமாக படித்து வருகிறேன்... நிறைய பயனுள்ள தகவல்கள் இருக்கின்றன...

நேரம் ஒதுக்கி அவசியம் அவர் பதிவுக்கு ஒரு முறை சென்று பாருங்கள்....

PKP தங்கள் பணி மேலும் வளர, சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்....

எனது பதிவில் தங்களின் பதிவுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன்... அனுமதி மறுக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்....

நன்றியும்.. வாழ்த்துக்களும்...