உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

வியாழன், ஜூன் 26, 2008

க்ரெடிட் கார்டும் கிரகம் பிடிச்ச ஏஜெண்டுகளும்

நீங்கள் உலக மகா முக்கியத்துவம் வாய்ந்த ஏதாவது வேலையில் மூழ்கி இருக்கும் போது க்ரெடிட் கார்டு, இன்சூரன்ஸ், பெர்ஸனல் லோன், க்ளப் மெம்பர்ஷிப் இப்படி தமிங்கலத்தில் பேசி உங்களை திணறடிக்கும் அழைப்புகளின் போது உங்களுக்கு என்ன தோன்றும்?

உங்கள் தெள்ளுத்தமிழ் பெயரை பிய்த்து காக்காய்க்கு போட்டு அழைத்து, உங்களை அலைபேசியில் விடாமல் துரத்தும் குரல்களை கேட்கும் போது என்ன தோன்றும்?

வெவ்வேறு சந்தர்ப்பத்தில் இந்த அழைப்புகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதைப் பற்றி ஒரு கற்பனை...


ஹலோ....
சார் நாங்க XXX பேங்கல இருந்து கால் பண்றோம்...
உங்களுக்கு க்ரெடிட் கார்டு ஆஃபர் பண்ணியிருக்காங்க...

அப்படியா? நொ ப்ராப்ளம்...உடனே அனுப்பி வைங்க... யூஸ் பண்ணிக்கறேன்...பில்லை நீங்களும், உங்க மேனேஜரும் சேர்ந்து கட்டிடுங்க....




சார் நாங்க.. XXX பேங்க்ல இருந்து பேசறோம்... உங்களுக்கு லோன் ஏதாவது தேவைப்படுதா?

ஆமா தேவைபடுது... அட்ரஸ் தரேன்.. உடனே மணியார்டர் பண்ணிடுங்க....




சார் தேவநாதன் சாருங்களா?

இல்லை... அவரோட ஒண்ணு விட்ட சித்தப்பாவோட மச்சினி புருஷனோட சகலபாடி பேசறேன்... என்ன விஷயம்னு சொல்லுங்க...




சார் கிருஸ்ணன் சார் இருக்காருங்களா?

இல்லைங்க... அவன் பக்கத்து வூட்டுக்காரன் பொண்டாட்டிய கூட்டிட்டு ஓடி போயிட்டான்... போற அவசரத்துல செல்லை விட்டுட்டு போயிட்டான்.. சொல்லுமா என்ன வேணும்?




சார் புது இன்சூரன்ஸ் ஸ்கீம் ஒண்ணு வந்திருக்கு... அதை பத்தி உங்கக்கிட்ட ஒரு 5 நிமிஷம் பேசலாமா?

அந்த நாயோட ஏஜண்டா நீ? கம்முனாட்டி லேடீஸ் காலேஜ் வாசல்ல ஈவ் டீசிங்க் பண்ற நாய்க்கு இன்சூரன்ஸ் ஒரு கேடா? 15 நாள் ரிமாண்டுக்கு அப்புறம் வெளிய வந்தான்னா பேசிக்க... வை ஃபோனை....




சார் ஒரு க்ளப் மெம்பர்ஷிப் பத்தி உங்களுக்கு எக்ஸ்ப்ளெயின் பண்ணலாமா?

பண்ணுங்களேன்... உங்க க்ளப்புல, சீட்டாட்டம், காபரே இதெல்லாம் இருக்கா? காபரே பார்க்க ஃபேமிலியோட வரலாமா? குழந்தைகளுக்கு ஏதாவது டிஸ்கவுண்ட் தருவீங்களா?




உங்க க்ரெடிட் கார்டு பேஸ் பண்ணி உங்களுக்கு 1 லேக் லோன் எலிஜிபிலிட்டி கொடுத்திருக்காங்க...

1 லேக் எல்லாம் பத்தாதுமா.... என் பையன் வாங்கியிருக்கிற மார்க்குக்கு இன்ஜினியரிங் சீட் வாங்கனும்னா உங்க பேங்கை கொள்ளை தான் அடிக்கணும்... அட்ரஸ் தர்றீங்களா?




சார் உங்களுக்கு 2 லேக்ஸ்க்கு மேல லோன் வாங்கற ஐடியா இருக்கா?

இப்போதைக்கு கைமாத்தா 100 ரூபா வாங்கிர ஐடியா தான் இருக்கு... சைட் டிஷ்க்கு குறையுது... உனக்கெல்லாம் யாரும்மா நம்பர் தராங்க? ..... தண்ணியடிக்க கூட வுடாம நொய்யி நொய்யின்னு... வைம்மா?




சார்... ரஞ்சித் சாருங்களா? சார் நாங்க டீமாட் அக்கவுண்ட் ஓப்பன் பண்றோம்....

ஓ... அதுக்கு நான் ஃபைனான்ஸ் பண்ணனுமா? முன்னாடியெல்லாம் திருப்பதி உண்டியில போட பணம் கேட்டு வீட்டுக்கு நாமம் போட்டுக்கிட்டு நேரா வந்துக்கிட்டு இருந்தீங்க... இப்பல்லாம் ஷேர் மார்கெட்ல பணம் போட போன் போட்டு கலெக்ஷன் பண்றீங்களா?... வேலையைப் பார்த்துக்கினு போய்யா...




செவ்வாய், ஜூன் 24, 2008

கேபிள் கனெக்ஷனும் கேணப்பய மக்களும்

என்னடா பக்கதுக்கு ஒண்ணா ஹால்ல மூணு TV வெச்சு பாத்துட்டிருக்கே? எந்த சீரியல் பார்க்கிறதுன்னு உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் ஏதாவது பிரச்சினையா?

அட நீ ஒண்ணு... வேற வேற கட்சி கேபிள்காரங்க மிரட்டி ஆளுக்கு ஒரு செட் டாப் பாக்ஸ் கொண்டு வந்து வெச்சுட்டு பொயிட்டாங்க.. எப்படி சந்தா கட்டரதுன்னு தெரியாம முழி பிதுங்கி உக்காந்திருக்கேன்...




உங்க வீட்டுல எதுக்குடா ரெண்டு கேபிள் கனெக்ஷன் வாங்கியிருக்க?..

ஒண்ணுத்துல சன் TV தவிர எல்லா சேனலும் வரும்... அடுத்ததுல சன் TV மட்டும் வரும்....




ஏங்க ரெண்டு நாளா கேபிள் கட் ஆயிருக்கே... கேபிள் ஆபிஸுல புகார் கொடுத்தீங்களா? இல்லையா?

அடி போடி... அவனுக்கே யார்ட்ட இருந்து கனெக்ஷன் வருதுன்னு தெரியலையாம்... நாலஞ்சு MSO-க்கு சொல்லி விட்டிருக்கானாம்... பார்க்கலாம்...




கேபிளை அரசு ஏற்று நடத்தும் அரசு ஏற்று நடத்தும்னு தலைவர் அறிக்கை விட்டதை நம்பி ஏமாந்துட்டேங்க...

ஏன் என்னாச்சு....

அரசு ஏற்று நடத்தும்னு பார்த்தா கடைசியா தலைவரோட அக்கா பையன் அரசு கேபிளை ஏற்று நடத்தறான்...




ஒரு பேரன் சினிமா எடுக்கிறார்... ஒருத்தர் புதுசா கேபிள் நடத்தறேன்னு உயிரை எடுக்கிறார்... ஒரு பேத்தி மாநாட்டுல அரசியல் வாதியா அவதாரம் எடுக்கிறார்...
எக்ஸ் பேரன் மறுபடி அமைச்சராக முடியுமான்னு தாத்தா வீட்டுக்கு படை எடுக்கிறார்... மக்கள் என்னயா பண்றது?

வழக்கம் போல பிச்சை எடுக்க வேண்டியது தான்...




சார் என் வீட்டுல TV இல்லை... உங்களுக்கு வீட்டுக்கு ஒரு இணைப்பு கண்டிப்பா கொடுக்கனும்னு ரேடியோவுக்கு கேபிள் கனெக்ஷன் கொடுத்துட்டு காசு கேட்டு மிரட்டுறது நல்லாயில்லை...




1 கோடி ரூபாய்க்கு இன்ஸ்யூர் பண்ணியிருக்காரா யார் அவரு? ஸ்டண்ட் மேனா?

இல்லைங்க.. அதுக்கும் மேல ரிஸ்கான தொழில் பண்றார்... கேபிள் TV நடத்தறார்...




எங்கிட்ட ஏற்கனவே செட் டாப் பாக்ஸ் இருக்குங்க...ஏன்யா இப்படி மிரட்டி இன்னொரு செட் டாப் பாக்ஸ் வாங்கிக்க சொல்றீங்க இது நியாயமா?

அந்தம்மா ஆட்சிக்கு வந்தா TVயும் சேர்த்து வாங்கிக்க சொல்லும்.... அய்யாவுக்கு எப்படி வசதி?




ஏங்க உங்க அய்யாவை பத்தி உயர்வா அந்த வெளிநாட்டு நியூஸ் TVல காட்டிட்டாங்கிறதுக்காக எல்லா சேனல்லயும் அதே TV-ய காமிக்கிறது கொஞ்சம் கூட நல்லாயில்லைங்க.....




ஏம்பா நல்ல வருமானம் வர்ற முக்கியமான தொழில்(கேபிள், சாராயம், மணல் எடுத்தல்) எல்லாத்தையும் அரசாங்கமே ஏத்து நடத்துது?

முன்னாடியெல்லாம் அரசாங்கம்னு சொன்னா கட்சின்னு அர்த்தம்... இப்ப எல்லாம் அரசாங்கம்னா குடும்பம்னு அர்த்தம்டா... அதான்...




இன்றைய பஞ்ச்

எப்படி தலைவர்கள் எல்லாம் கோடி கோடியாக சேர்க்கிறார்கள் என்று ஒரு தொண்டனுமே கேள்வி கேட்பதில்லை... அவன் பங்கு பத்து ரூபாய் ஒட்டு போடும் போதே அவனுக்கு கிடைத்து விடுகிறதே......


வியாழன், ஜூன் 19, 2008

அரசியலும் அல்பாயுசான கொள்கைகளும்...

ஒவ்வொரு அமைப்பும், அமைப்பு சார்ந்த இயக்கமும் சில கோட்பாடுகளினாலும், தத்துவங்களினாலும் துவக்கப்பட்டு, அந்த பொருள், கோட்பாடு, கொள்கை, தத்துவம் வழி நடக்கும்.

அரசியல் கட்சி என்பதும் ஒரு அமைப்பு. ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் சில கொள்கைகள் இருக்கும்... அக்கொள்கைகளை நோக்கிய பயணமாகவே கட்சியின் நடவடிக்கைகள் அமைய வேண்டும். ஒரு வேளை கட்சி வழி மாறி பயணிக்கும் எனில் கேள்வி கேட்க உறுப்பினர்களுக்கு உரிமை உண்டு. மக்களுக்கும் ஓட்டளித்தவர்கள் என்ற முறையில் அவ்வுரிமை உண்டு. ஏனெனில் கட்சியின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு தான் கட்சிக்கு அவர்கள் வாக்கு அளிக்கிறார்கள். (?).அப்படியிருக்க கொள்கை மாறுவது துரோகம் இல்லையா?

கொள்கைகளுக்கு அரசியல் கட்சிகள் அளிக்கும் முக்கியத்துவம் பற்றி சில மலரும் நினைவுகள்...

ஜெயலலிதாவுடன் இ.காங்கிரஸ் கூட்டு செருவதை எதிர்த்து மூப்பனார் அவர்களால் துவங்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கடைசியில் அவருடனே கூட்டணி அமைத்து போட்டியிட்டது....

கலைஞர் குடும்ப அரசியல் செய்வதாக கூறி வெளியேறி ம.தி.மு.க ஆரம்பித்த வை.கோ திரும்ப கலைஞருடனே கூட்டு வைத்துக் கொண்டது....

கடவுள் மறுப்பு இயக்கங்களான தி.மு.கவும், அ.தி.மு.கவும் மாறி மாறி மத வெறி கட்சியான பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்தது...

உயர்சாதி மனப்பான்மைக் கொண்ட வன்னியர்களை எதிர்ப்போம் என்று குரல் கொடுத்து வந்த தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த சகோதரர்கள் அவர்களுடனே கூட்டணி அமைத்தது...

Secularist காங்கிரஸுக்கு socialist இடது சாரிகள் ஆதரவு அளிப்பது...

பிரச்சினை அடிப்படையிலான அரசியல் என்ற பெயரில், கொள்கைகளை காற்றில் பறக்க விடும் அரசியல் கட்சிகள் இன்னும் என்னென்ன செய்ய போகின்றன?

இவ்வளவு கொள்கை மீறல்கள் நடக்கிறது... ஏன் யாருமே கேள்வி எழுப்புவதில்லை? கண்டுக்கொண்டதாக கூட தெரியவில்லை?

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்று கவுண்டமணி சொல்வதைப் போல மக்களை பழக்கி வைத்து இருக்கிறார்கள்...

சரியான தலைவர் அடையாளப்படுத்த படாவிட்டால் கலைஞருக்கு பிறகு தி.மு.க உடையும் சூழ்நிலை உருவாகலாம். அப்படி நடந்து விட்டால் யார் கண்டது அ.தி.மு.க - தி.மு.க கூட்டணி கூட சாத்தியமே.

விஜயகாந்த்-மு.க.அழகிரி கூட கூட்டணி அமைக்கலாம்...

பணமும் பதவியும் கிடைக்கும் என்றால் இன்னும் என்னவெல்லாம் செய்வார்களோ?

நம் தலையெழுத்து... இருக்கும் பல திருடர்களில் ரொம்ப கம்மியா திருடும் திருடனாய் பார்த்து ஓட்டளிக்க வேண்டிய நிலை தான் எப்போதும் இருக்கும் போல இருக்கிறது....




ஏதாவது அத்தியாவசிய பொருளின் விலை ஏறினால் போதும்... நம் அரசியல் தலைவர்கள் அறிக்கை விட கிளம்பி விடுவார்கள்... அறிக்கையை சீண்டுவாரில்லாத நடிகர் சரத்குமார் ஆரம்பித்து, அமைச்சர்கள் வரை ஒரே அறிக்கை தான்.... “ஆன்லைன் வர்த்தகத்தை தடைச்செய்ய வேண்டும்...”

ஆன்லைன் வர்த்தகத்தில் எத்துணை வகை உள்ளது... அதில் அத்திவாசிய பொருட்களின் விலையை பாதிக்கும் வர்த்தகம் எது... அது அரசு அனுமதியுடன் தான் நடத்த படுகிறது.. அதில் வரும் வருமானத்துக்கு பல வரிகளும், சேவைக்கட்டணங்களும் அரசாங்கமே வசூலித்து கொழுக்கிறது... என்பது உள்பட அடிப்படை தகவல்கள் ஏதாவது இவர்களுக்கு தெரியுமா?

பொத்தாம் பொதுவாக அவன் அறிக்கை விட்டான், இவன் அறிக்கை விட்டான் என்பதற்காக ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று வீராவேசமாக அறிக்கை விடுவதெல்லாம் அடாத செயல் என்று இவர்களுக்கு யார் சொல்வது...




சென்னையில் கட்சிக் கொடிகளுடன் வலம் வரும் பெரிய ரக கார்களின் அராஜகம் மிக அதிகமாகி கொண்டிருக்கிறது...

வட்டம், மாவட்டம் கொடிக் கட்டியது போய், எடுப்பு, தொடுப்பு, அல்லக்கைகள் வரை கார்களில் கொடிக் கட்டி கொண்டு அட்டூழியம் செய்து கொண்டிருக்கிறார்கள்... இவர்களை போக்குவரத்து போலீசாரும் கண்டும் காணாமல் விடும் போக்கு தான் நிலவுகிறது....

பிற வாகனங்களை உரசுவது போல முந்திச்செல்லுதல் , படுவேகமாக வாகனத்தைச் செலுத்துதல், பின்னால் வரும் வாகனத்துக்கு வழி விடாமல் செல்லுதல்(ஆம்புலன்ஸ் கூட இதற்கு விதி விலக்கல்ல) இப்படி எல்லாமும் இவர்கள் அராஜகத்தில் அடக்கம். இவ்வளவும் கொடி கட்டியிருக்கும் தைரியத்தில் தான் செய்கிறார்கள்.

இந்த பதவியில் இருப்பவர்கள் தான் சிவப்பு சுழல் விளக்கு பொருத்த வேண்டும் என்று விதிகள் இருப்பதை போல கொடி கட்டுவதற்கும் ஒரு விதிமுறை கொண்டு வந்தால் தான் இவர்கள் கொட்டம் அடங்கும்...




நெருவுக்கு பின் இந்திரா, இந்திராவுக்கு பின் ராஜீவ், ராஜீவுக்கு பின் சோனியா, சோனியாவுக்கு பின் ராகுல், பிரியங்கா...

லாலுவுக்கு பின் ராஃப்ரி தேவி,

கலைஞருக்கு பின் ஸ்டாலின், அழகிரி

மாறனுக்கு பின் தயாநிதி, கலாநிதி,

ராமதாஸுக்கு பின் அன்புமணி,

மூப்பனாருக்கு பின் வாசன்,

என்.டி.ஆருக்கு பின் சந்திரபாபு நாயுடு,

தேவகௌடாவுக்கு பின் குமாரசாமி,

யார் சொன்னது இந்தியாவில் மன்னர் ஆட்சி முறை ஒழிந்து விட்டது என்று?




அரசியல் நிச்சயம் ஒரு சாக்கடை தான். அதனால் தான் அது சீக்கிரம் சுத்தப் படுத்தப் பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

புதன், ஜூன் 18, 2008

தசாவதாரம் பேசும் ஒழுங்கின்மைக் கோட்பாடு


தசாவதாரம் குறித்து சலிக்க சலிக்க விமரிசனங்கள் பார்த்தாயிற்று...

தசாவதாரம் எனக்குள் ஏற்படுத்திய தாக்கங்கள், தசாவதாரம் பேசும் ஒழுங்கின்மைக் கோட்பாடு பற்றி மட்டும் சில கருத்துக்கள்

மதங்கள் எவ்வாறு தான் வாழும் காலத்தில் தன்னை சுற்றியிருந்த சிறு மதங்களையும், நம்பிக்கைகளையும் வாரி சுருட்டி தன்னகத்தே கொண்டு வளர்ந்திருக்கின்றன என்பதை இப்படம் தெளிவாக உணர்த்துகிறது...

ஒரு காலத்தில் ஒன்றுக்கொன்று பெரும் சவாலாய் இருந்த சைவம், வைணவம் என்ற இரு பெரும் மாற்று மதங்களை ஒன்றாக இணைத்து தழைத்தோங்கி நம்முன் நிற்கிறது இன்றைய இந்து மதம்... ராமானுஜர், நம்பி(?), அப்பர் போன்றோர் அவரவர் மதத்துக்கு செய்த தியாகங்கள் விழுங்கி ஏப்பம் விடப்பட்டு இருக்கிறது...

என் மதம் தான் சிறந்தது.. பிற மதத்துக்கு தலை சாய்க்க மாட்டேன் என்று முழங்கி அவர்கள் தங்கள் மதத்துக்கு செய்த தியாகம், கலகம், போராட்டம்….. இன்று வைணவம், சைவம், ஜைனம் எல்லாம் ஒன்றாகி ஒரே இந்து மதமானதில் காணாமல் போய் விட்டது அல்லவா?

ஒரு வேளை எதிர்காலத்தில் வேற்று கிரகத்து உயிரினங்கள் கண்டுபிடிக்கப் பட்டு பிரபஞ்சம் ஒரே குடையின் கீழ் வரும் போது, இந்து, இசுலாம், கிருத்துவம் எல்லாம் கலந்து விடக்கூடும்... என் மதம் என் மதம் என்று ஏன் இந்த அர்த்தமற்ற மோதல்கள் நமக்குள்...

ஒழுங்கற்ற தன்மையோடு இருக்கும் தொடர் செயல்களில் ஒரு ஒழுங்கை தேடும் நிலை தான் ஒழுங்கின்மை கோட்பாடு. (Chaos Theory). (கிட்டத்தட்ட)

பிரபஞ்சமே ஒரு ஒழுங்கான நிலையில் இருந்து, ஒரு ஒழுங்கற்ற நிலைக்கு சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது...

ஒழுங்கின்மை கோட்பாடு, வண்ணத்துப்பூச்சி விளைவு ஒரு அறிமுகம்...

ஒழுங்கற்ற ஒரு அமைப்பிலோ, ஒரு தொடர் செயற்பாட்டிலோ ஒரு ஒழுங்கை தேடும் இயலை பற்றி விவரிப்பது தான் இந்த ஒழுங்கின்மைச் சித்தாந்தம் (Chaos Theory).

ஆரம்ப கட்ட சூழ்நிலைகளில் மேல் நுண்-உணர்வினை கொண்டுள்ள எந்த ஒரு அமைப்பையும், இந்த சித்தாந்ததின் கீழ் வகை படுத்த முடியும்.

உதாரணத்திற்கு, ஒரு நாள் நீங்கள் தங்கள் நண்பரிடம் சற்று மாறுபட்ட வகையில் நடந்து கொள்வதாக வைத்துக்கொள்ளுங்கள். அவர் சொன்ன யோசனைக்கு "சரி" என்று கூறுவதற்க்கு பதிலாக "சரி. எனக்கு தெரியும்" என சொல்லிவிட்டீர்கள். அதை அவர் மனதில் வைத்துக்கொண்டு மெல்ல மெல்ல உங்களை பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்திக்கொள்கிறார்.
ஒரு 20- 25 வருடம் கழித்து உங்களுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் 10 கோடி ருபாய் பணம் தேவைப்படுகிறது. அது உங்கள் நண்பரிடம் இருக்கிறது. நீங்கள் அவரிடம் சென்று கேட்கின்றிர்கள். தங்கள் மேலுள்ள தவரான எண்ணத்தால் அவர் அதை தர மறுக்கின்றார். சூழ்நிலையை கட்டுப்படுத்த முடியாத்தால் உங்கள் தொழிற்சாலை மூடப்படுகிறது...இதன் விளைவாக சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன. ..
நீங்கள் அவ்வாறு 20 வருடத்திற்க்கு முன் "சரி" என்று மட்டும் சொல்லியிருந்தால், இன்று 10 கோடி உங்கள் கையிலே. இவ்வகைப்பட்ட உங்கள் நண்பனின் செயல்பாட்டை இந்த சித்தாந்ததின் கீழ் வகைப்படுத்தலாம்.

இவ்வகை விளைவினை விஞ்ஞானிகள் வண்ணதுப்பூச்சி விளைவு என அழைக்கின்றனர்.
அதாவது, மயிலாபூரில் பறந்து கொண்டிருந்த வண்ணத்துபூச்சியின் சிறகினால் அசையப்பெற்ற காற்றானது, காற்றுமண்டலத்தில் மிகச்சிறு மாறுதல் ஒன்றை ஏற்படுத்துகிறது., இது படிபடியாக பிற மாற்றங்களை ஏற்படுத்தியதன் விளைவாக, 6 மாதம் கழித்து ஒரிசாவில் ஏற்படவிருந்த புயல் ஏற்படவில்லை.

சுருங்கச் சொன்னால், ஆரம்ப கட்ட சூழ்நிலைகளில் மேல் நுண்-உணர்வினை கொண்டுள்ள தன்மை.
”( நன்றி - sivam - agarathai.blogspot.com

தசாவதாரம் படம் பார்த்த பலர் மனதிலுள்ள ஒரு கேள்வி..... முதலில் காட்டப்படும் 12-ம் நூற்றாண்டு ரங்கராஜன் நம்பி கடலில் வீசபடும் கதைக்கும், 21-ம் நூற்றாண்டில் நடக்கும் கதைக்கும் என்ன சம்மந்தம்?

அங்கே தான் ஒழுங்கின்மை கோட்பாட்டியல் வருகிறது.......

12-ம் நூற்றாண்டில் கடலில் எறியப்படும் கருங்கல்லால் ஆன பெரிய சிலை கடலில் ஏற்படுத்தும் சிறு பாதிப்பு பல நூற்றாண்டுகளாய் தொடர்ந்து நடக்கும் பல தொடர் விளைவுகளுக்கு காரணமாகி 21-ம் நூற்றாண்டில் ஏற்படும் சுனாமிக்கு வழிவகுத்து அதன் மூலம் மனித குலத்துக்கு ஏற்படவிருந்த பேராபத்தை நீக்குகிறது...

அன்று அந்த சிலை எறியப்படாமல் போயிருந்தால், சுனாமி இல்லை... சுனாமி இல்லையென்றால் புதிய கிருமி ஆயுதத்தால் மனித குலம் கூண்டோடு அழிந்து பொயிருக்கும்.. என்பதே தசாவதாரத்தில் காட்டப்படும் பட்டர்பிளை எஃபக்ட்...

ஒழுங்கின்மை கோட்பாட்டை மறைத்து அண்டம் என்ற ஒரு ஒழுங்கற்றத் தன்மைக்கு இறைவன் என்ற பெயரில் ஒரு ஒழுங்கு வடிவம் கொடுக்க முயலும் ஆன்மீகம்... அதில் ஆரம்பித்து, ஒழுங்கின்மை கோட்பாட்டை விளக்க முயலும் விஞ்ஞானத்தில் கொண்டு வந்து முடிக்கிறார்கள்...

ரொம்ப ஹெவியான ஒரு விஷயத்தை ஜனரஞ்சகமாக சொல்ல முயலும் போது திரைக்கதையில் பல குழப்பங்கள் நிகழ வாய்ப்புண்டு... குழப்பங்களை தவிர்த்து தெளிவான திரைக்கதை அமைந்ததில் தான் படத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது....

எனக்கென்னவோ இந்தியன் படத்தில் மேக்கப் நன்றாக பொருந்தியது போல தசாவதாரம் படத்தில் மேக்கப் பொருந்தவில்லையோ என்று படுகிறது....