உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

புதன், ஆகஸ்ட் 06, 2008

கால் சென்ட்டர்களும் கார் டிரைவர்களும்

தூக்கத்தில் பல வகை. அதே போல் ஆர்வத்திலும் பல வகை.

ஆர்வக் கோளாறு என்றிருப்பதைப் போல தூக்கக் கோளாறு என்று ஏதாவது இருக்கிறதா என்று தெரியவில்லை...
ஆர்வம் அதிகமாக இருக்கும் போது தூக்கமும் அதிகமாக இருந்தால்?

என்னடா இவன் மேட்டரை சொல்லாமல் ஓவராக பம்ப் அடிக்கிறான் என்று தோன்றுகிறதா?

சென்னையின் ஒரு பரபரப்பான IT பன்னாட்டு நிறுவனம். (மெட்ராஸ் பாஷையில் கால் சென்டர். தொலைப்பேசும் செய்யும் வேலை நடந்தாலும் நடக்கா விட்டாலும், அனைத்து BPO மற்றும் IT கம்பெனிகளுக்கும் இது தான் பொது பெயர்)

இந்த மாதிரி நிறுவனங்களில் பணியாளர்கள் ஓவர் டைம் செய்து வேலைப் பார்ப்பதெல்லாம் ரொம்ப சகஜம். முதல் நாள் காலை உள்ளே சென்று மறுநாள் இரவு திரும்புவதெல்லாம் சர்வ சாதாரணம்.

இப்படி கஷ்டபட்டு உழைக்கும் பணியாளர்களை நிறுவனமும் நன்றாக கவனிக்கவே செய்கிறது... அகால நேரத்தில் பணிக்கு வரும், போகும் பணியாளர்களுக்கு அலுவலகம் வந்து போக கார் வசதியும், ஏனையோருக்கு பஸ் வசதி உண்டு... இது போல நேரம் காலம், கண்ணு மண்ணு தெரியாமல் கடுமையாக உழைத்து களைத்த பணியாளர்களை நிறுவன ஒப்பந்த வாகனங்களில் அவர்கள் வீடு வரை கரை சேர்க்கவும், (உடனே )பிக்கப் செய்வதற்குமான வசதியை எல்லா நிறுவனங்களும் தருகின்றன....

இந்த ஒப்பந்த வாகனங்களின் கதை ஒரு சோக கதை...

பெரிய டிராவல் நிறுவனங்கள் இந்த வாகன ஒப்பந்தங்களை IT நிறுவனத்துடன் செய்துக் கொள்ளும்... இத்தனை வாகனங்களை IT நிறுவனத்தின் சார்பாக இயக்க வேண்டும் என்பதாக... பெரிய டிராவல் நிறூவனத்திடம் அவ்வளவு வாகனங்கள் இருக்காது... அவர்கள் சிறிய டிராவல் நிறுவனங்களிடமும், டூரிஸ்ட் வாகன ஓட்டிகளிடமும் துணை ஒப்பந்தங்கள் செய்து கொள்வர்...

இப்படிப் பட்ட வாகனங்களில் டிரைவராக பணியாற்றும் ஜீவன்கள், எப்போது என்ன பிக்கப், என்ன டிராப் தருவார்கள் என்று தெரியாமல் வாகனத்திலேயே IT நிறுவன வளாகத்தில் காத்திருக்க வேண்டும்....

இன்ன இடத்துக்கு, இத்தனை மணிக்கு, இத்தனை பேருக்கு வாகன வசதி தேவை என்ற தகவல் பணியாளரிடமிருந்து IT நிறுவன வாகன உதவி மையத்துக்கு போகும். அங்கிருந்து அதே வளாகத்திலேயே இருக்கும் பெரிய டிராவல் உதவி மையத்துக்கு இந்த தகவல் சேர்க்கப்படும். அங்குள்ள நபர் இதை ஏதவது ஒரு துணை ஒப்பந்த டிராவல் நிறுவன பொறுப்பாளரிடம் தருவார். அவர் எந்த வாகனத்துக்கு இந்த ட்ரிப்பை தருவது என்று வாகன இருப்பை பொறுத்து முடிவெடுத்து வாகனங்களை பணிப்பார்.

இப்படி பெரிய சுற்றுக்கு பின் டிரைவரிடம் அந்த ட்ரிப் ஷீட் வந்து சேரும். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பணியாளர் வந்து அமர்ந்தவுடன் வாகனம் அவரை குறிப்பிட்ட இடத்துக்கு கொண்டு சேர்க்கும்... இப்படி ஒவ்வொரு துணை நிறுவனமும் நூற்றுக்கணக்கில் வாகனங்களை பணியில் அமர்த்தியிருக்கும்.

இவைகளில் டிரைவராக பணியாற்றும் பெரும்பான்மையானோர் தென் தமிழ் நாட்டில் இருந்து வந்தவர்கள்..

அங்கன, இங்கன… அங்கிட்டு, இங்கிட்டு என்று வட்டார மொழியில் பேசிய படி சென்னை முழுதும் அதகளம் செய்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருப்பவர்கள்.

இந்த பின் புலம் போதும்...

ஒருநாள் அதிகாலை 3 மணி சுமார்... பின்னிரவு நேரம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும்... பணியையும், நிறுவனத்தையும் பெரிதும் நேசிக்க 2 நாட்களாக கட்டாயப் படுத்தப்பட்ட ஒரு கொலைவெறி பணியாளர்.. களைப்பாக அந்த வாகனத்துக்கு வந்து சேர்ந்தார்... வேறு வாகனம் எதும் இல்லாததால், ஒரு புத்தம் புது டிரைவர் ஒருவருக்கு அந்த டிராப் கிடைத்தது... அவர் சென்னைக்கு மட்டுமல்ல, கால் சென்டர் வாகன தொழிலுக்கே புதிது... யாரோ சொந்தக்காரர் ஒருவர் டிராவல்ஸ் ஒன்றில் வண்டி போட்டதால் திடீர் டிரைவராகியிருந்தார்...

நம் ஓட்டுநருக்கு ஆங்கிலம் தெரியாது...ட்ரிப் ஷீட் ஆங்கிலத்தில் தான் இருக்கும்..

"எங்கே சார் டிராப் செய்யனும்" என்று சூப்பர்வைசரை கேட்க, அவர் எரிச்சலாக
"திருமங்கலம்... ஏன் தொரை படிக்க மாட்டீயளோ"

என்று சொல்லிவிட்டு கிளம்ப யத்தனிக்க...

"சார் அவ்வளவு தூரம் போய் வர்றது கஷ்டம் சார்"

"வெங்காயம்... தினம் போய் வர்றவன் பைத்தியக்காரனா... போய்ட்டு வெரசா வாடே"

முதலில் ஓட்டுநருக்கு சற்று குழப்பம் இருந்தாலும் முதன் முதலில் புது கம்பெனியில் கிடைத்த பிக்கப் ஆகையால் அதீத ஆர்வத்துடன் புறப்பட்டார்... பணியாளர் 2 நாள் கம்ப்யூட்டரில் வெந்த களைப்பில் செம தூக்கக் கலக்கத்தில் இருந்தார்... வந்த வேகத்தில் பின் சீட் முழுதும் ஆக்ரமித்து படுத்து...

“திருமங்கலம் வந்ததும் சொல்லுங்க... வீட்டுக்கு வழி சொல்றேன்..."

அவ்வளவு தான் ஆள் மட்டையாகி விட்டார்..

வண்டி சென்றது... சென்றது... சென்றது... டீ குடிக்க ஒன்று இரண்டு இடங்களில் நின்றது... சென்றது.. திண்டிவனம், விழுப்புரம் நடுவே எங்கோ வரும் போது நம்ம கொலைவெறிப் பணியாளர் எழுந்து விட்டார்... ஸ்லோமோஷனில் வாட்ச்சை பார்த்தவர்… குழப்பமாய்…

"என்னங்க... எங்க போயிட்டிருக்கோம்?"

"சார் இப்ப தான் திண்டிவனம் தாண்டிப் போயிட்டிருக்கோம்... திருச்சி, மதுர அப்புறம் தான் திருமங்கலம்… இன்னும் நேரமிருக்கு படுங்க"

சென்னை அண்ணா நகரை அடுத்த திருமங்கலத்துக்கு போக வேண்டிய கொ.வெ. பணியாளர் போட்ட அலறலில் நெடுஞ்சாலை மொத்தமும் திரும்பி பார்த்ததாம்...

அய்யோ…அய்யோ…

இப்போது முதல் பாராவை மறுபடி படியுங்கள்...

(திரைக்கதை வசனம் தான் நான் எழுதியது... கதை உண்மையான சம்பவம்...)

(தலைப்பு முழுதும் ஆங்கிலம்... மன்னிக்க)

8 கருத்துகள்:

  1. /

    இப்போது முதல் பாராவை மறுபடி படியுங்கள்...

    (திரைக்கதை வசனம் தான் நான் எழுதியது... கதை உண்மையான சம்பவம்...)
    /

    :)))))))))))

    படிக்கிறதுக்கு ஜாலியா இருக்கு. பாவம் ட்ரைவரும் அந்த ஸ்டாஃபும்

    :)))))))))

    பதிலளிநீக்கு
  2. சிவா

    BPO-களில் இது போன்ற நகைச்சுவைகள் ஏராளமாக நடக்கும்... இன்னும் எழுதுவேன்...

    தங்கள் வருகைக்கு நன்றி...

    nathas

    நன்றி

    பதிலளிநீக்கு
  3. திருமங்களம் என்றால் எங்களுக்கெல்லாம் மதுரைக்கு அடுத்த திருமங்களம் தானே தெரியும் :) :)

    பதிலளிநீக்கு