உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

செவ்வாய், ஏப்ரல் 01, 2008

நடிகர்களும் நாடாளும் ஆசையும்

அவர் இவர் என்று இல்லாமல்... அநேகமாக எல்லா நடிகர்களுக்கும் அரசியல் ஆசை இருப்பதாகவே படுகிறது...
நடிப்புலகில அரசியல் இருக்கிறதும், அரசியல்ல நடிப்பு இருக்கிறதும் சகஜம் தானே...
ஒரு பெரிய நடிகர்... அரசியலுக்கு இவர் வந்து விடக்கூடாதே என்று பல கட்சிகளும் கூட்டணி வைத்துக்கொண்டு இவரையும் அப்பாவி (?) ரசிகர்களையும் குமுறு கஞ்சி காய்ச்சின... "முதலமைச்சர் ஆக போறியாமே? வீட்டை புல்டோசர் வெச்சு நிரவிடுவோம் " என்று கவுண்டமணிக்கு ஒரு படத்தில் மிரட்டல் வரும். தொல்லை பொறுக்க மாட்டாமல் "அடாடாடா கருமாந்திரம் புடிச்சவனுங்களா..." என்று படுக்கையில் கிடந்து புரளுவார்... அந்த ரேஞ்சுக்கு மிரட்டல் விடப்பட்டதால் அர்ஜண்டாக அரசியல் வாழ்க்கைக்கு ஒரு முற்றும் (அட்லீஸ்ட் ஒரு கமா) போட்டு கொண்டு இமய மலை, ஐஸ்வர்யா ராய் என்று செட்டில் ஆகி விட்டார் என்று படுகிறது...

ஒரு நடிகருக்கு மேற்கூறப்பட்ட புல்டோசர் இத்யாதிகள் இன்று நடந்து கொண்டு இருக்கிறது... அவரின் கல்யாண மண்டபம் முதற்கொண்டு அவர் கஷ்டப்பட்டு களவாண்டு வைத்த காலி இடம் வரை புல்டோசரை விட்டு புல் செதுக்கிக் கொண்டு இருக்கிறார்கள்...(என்னவோ புல்டோசர் இதற்காகவே கண்டுப்பிடிக்கப்பட்டது போல... நடிகருக்கு இப்போதெல்லாம், JCB, புல்டோசர் என்றாலே பிடிப்பதில்லையாம்... காலி இடத்தில புல்டோசர் வெச்சு எதைய்யா இடிப்பீங்க? உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?)

அவரும் அறிக்கை மேல் அறிக்கை விட்டு உளறி, T.ராஜேந்தர் முதல் தீப்பொறி ஆறுமுகம் வரை அனைவரிடமும் நன்றாக பதிலுக்கு வாங்கு வாங்கு என்று வாங்கி கட்டிக் கொள்கிறார்......

“வீட்டில தெலுங்கு பேசிட்டு, வெளியே தமிழ் பேசுற ஆள் அவரு”- உபயம் டி.ஆர்... தமிழ்நாட்டுல தெலுங்கு பேசினா யாருக்காவது புரியுமா? அதான் வீட்டில மட்டும் தெலுங்கு பேசிட்டு வெளிய தமிழ்ல பேசுறார்... இதெல்லாம் ஒரு பிரச்சினையாய்யா?

ஆமா.. அவருக்கு தெலுங்கு, தமிழ் தான் தெரியும்... ஹிந்தி, இங்கிலீஷ் தெரியாது.. அதனால தான் தீவிரவாதிகளை பிடிச்சா அவங்ககிட்ட தமிழ்லயே பேசி சவால் விடுறார்... அதுக்கென்ன இப்போ? இதெல்லாம் தேசிய ஒருமைப்பாடுங்க... கர்நாடகாவில தான் தமிழ் பேசினா தப்பு.. இங்கே தெலுங்கு பேசினா கூடவா தப்புன்னு அவரு கேக்க போறாரு...

அறிக்கை இவரைப்பொறுத்த வரை அரிக்கையாவே அமைஞ்சுடுது...

இவ்வளவு வாங்கிய பிறகும் அஞ்சாமல் அசராமல் மேலும் அறிக்கை விடுகிறார்....

ஒரு வேளை ஆட்சியை பிடித்தால் எல்லாவற்றையும் சரி செய்துக் கொள்ளலாம் என்ற வழக்கமான தைரியமாக இருக்குமோ?

இவரது கட்சிக்காரர்களும், ஆட்சியில் இருக்கும் கட்சிக்காரர்களுக்கும் எதில் போட்டி இருக்கிறதோ இல்லையோ.. டாடா சுமோ, ஸ்கார்பியோ, குவாலிஸ் போன்ற பெரிய வண்டிகளில் கொடிக்கட்டி பறக்க விட்டுக்கொண்டு வேகமாக சாலையில் சென்று மக்களை விரட்டிக்கொண்டும், மிரட்டிக்கொண்டும் போவதில் கடும் போட்டி....

அப்படி என்ன தான் ஆணிப்புடுங்கற வேலை இருக்குமோ...

ஆட்சியில இருக்கிறவங்க தான் அம்பது வருஷமா இதுல எல்லாம் ஊறி கரைக்கண்டவங்கன்னு பார்த்தா... இவரு பிஞ்சிலயே பழுத்தவரா இருக்காரு...
சீட் கேட்டு வந்த கட்சி பிரமுகர்களை எவ்வளவு சொத்து இருக்கு என்று கேட்டு அசரடித்தவர் அல்லவா.. (தேர்தல் கமிஷனுக்கு சொல்றதுக்காக கேட்டிருப்பாரு...தேர்தல் கமிஷனுக்காகவோ... தேர்தல் 'கமிஷனு'க்காகவோ...)

இப்ப இருக்கிற அதிரடி ஸ்டைல் ஒரு வேளை ஆட்சியை புடிச்சா நல்லது பண்ணுறதுலயும் இருக்கும்னு நம்புவோம்....

ஜனங்க பாவம்... அவங்களும் ஒரு நல்லவன் கிடைக்க மாட்டானான்னு தேடறாங்க... கிடைக்கவே மாட்டுறான்... ம்...

இவரு யானை வெடியை கொளுத்திப்போட்டு துவைச்சு, துடைச்சு துவம்சம் பண்ணிக்கிட்டிருக்காரு... சைடுல இன்னும் 2 நடிகர்கள் ஊசிப்பட்டாசு, கேப் வெடியெல்லாம் வெடிச்சு சத்தம் கேக்குதா, கேக்குதான்னு காமெடி பண்ணிட்டு இருக்காங்க...

அதுல ஒருத்தருக்கு ஜாதி அரசியல் பண்ணலாமா இல்லை கிடைச்ச தலைவர் பதவியில அப்படியே ஒட்டிக்கிட்டு லைஃபை ஓட்டிடலாமான்னு குழப்பமாவே இருந்தாரு போல... கட்சியே அவருக்கு கல்தா கொடுத்துடுச்சு...

இன்னொருத்தர் என்னென்னவோ பண்ணி பார்க்கிறார்.. ஆனா கூட்டம் தான் சேரவே மாட்டேங்குது... (ஆனானப்பட்ட நமீதாவை வெச்சு எடுத்த படத்துக்கே கூட்டம் சேரலை... இவரு தனியா மீட்டிங் போட்டா கூட்டம் சேருமா.. யாருப்பா அது.. இப்படியெல்லாம் அநாகரீகமா கமெண்டு அடிக்கக் கூடாது…)

ஒழுங்கா TV சீரியல் தயாரிச்சுக்கிட்டு இருந்த துணைவியாரையும் இதுல இழுத்து, என்ன நடக்க போகுதோ பாவம்... அவங்க பாட்டுக்கு பெண்களை மெகா சீரியல் காமிச்சு அழ வெச்சுட்டு இருந்தாங்க...

இன்னொரு நடிகர்... அவரு இப்போ எந்த கட்சியில இருக்காருன்னு அவருக்கே தெரியுமோ தெரியாதோங்கிற லெவல்ல காலையில, சாயங்காலம் ரெண்டு வேளையும் மாத்தி, மாத்தி பேசி சொந்த மகனையே குழப்பிக்கிட்டு இருக்காரு...

இதுல லேட்டஸ்ட்டா ஒருத்தர் கிளம்பியிருக்கார்... மெதுவா அடி(கொடி) போட ஆரம்பிச்சிருக்கார்... இப்பவே ஆரம்பிச்சா தானே 45-50 வயசுல ஒரு தனிக்கட்சி, அறிக்கைன்னு செட்டில் ஆக முடியும்... ஆனா அவர் ஒண்ணு யோசிச்சுக்கணும்.. அவருக்கும் கொஞ்சம் கல்யாண மண்டபம், அசையா சொத்து எல்லாம் இருக்கு...... அவ்ளோ தான் சொல்ல முடியும்...

ஆனா ஒண்ணு இப்போ ஆட்சியில இருக்கிற பழம்பெரும் திராவிட கட்சி அடுத்து ஆட்சியை பிடிக்க முடியாம போய், ஒரு வேளை யானைவெடி நடிகர் ஆட்சியை பிடிச்சுட்டார்னு வைங்க... அவரு ரிவன்ஜ் எடுத்தா என்ன ஆகிறதுன்னு யோசிக்காம ஏதேதோ பண்றாங்க.....

தமிழ்நாட்டு ஜனங்களை ரொம்ப நம்புறாங்க போல...

நல்லா நடிச்சுக்கிட்டு இருக்கிற ஒரு ஹீரோ திடீர்னு சம்மந்தம் இல்லாம ஒரு படத்துல சட்டுன்னு விரலை காமிராவைப் பார்த்து நீட்டி வசனம் பேச ஆரம்பிச்சுட்டாருன்னு வெச்சுக்குங்க... உடனே தெரிஞ்சுக்கலாம்... எவனோ குழப்பிட்டான்னு...

இவங்கெல்லாம் பத்தாதுன்னு டைரக்டர் ஒருத்தர் கிளம்பியிருக்கார்... அவர் பண்ற அட்டகாசம் இருக்கே... ஆரம்பகால ராமராஜன் மாதிரி இருந்துக்கிட்டு ராம்போ ஸ்டையில்ல வசனம் பேசுறாரு பாருங்க... தியேட்டர்ல சீட் இல்லைன்னா அவனவன் தரையில படுத்து புரண்டு புரண்டு சிரிப்பான்... அவ்ளோ காமெடி...

இவரு சும்மா இல்லாம, ஒழுங்கா நடிச்சுக்கிட்டிருந்த ஒரு இளம் நடிகரை ஆக்சன் ஹீரோ ஆக்கறேன்னு கிளம்பி... இப்போ அந்த இளம் நடிகர் “நான் யாரு நல்லவனா கெட்டவனா”ங்கிற ரேஞ்சுக்கு அலைஞ்சுக்கிட்டு இருக்கார் பாவம்... அய்யோ, அய்யோ...

மறைந்த ஒரு பெரும் நடிகர்.. அதிர்ஷ்ட கட்டை, கட்சியில இவரு காலை வெச்சாலே கட்சி கண்டம்டா என்று நாத்திகம் பேசும் திராவிட கட்சிகளாலேயே செண்டிமெண்ட் பார்க்கப்பட்டு ஒதுக்கப்பட்டவர்... தனிக்கட்சி எல்லாம் ஆரம்பித்து... பெயரைக் கெடுத்துக்கொண்டார்...

இன்னொரு வில்லன் நடிகர் ஒருத்தர் இருந்தார்... செம டைம் பாஸ்... என்னன்னவோ பண்ணி பரபரப்பா இருந்தாரு... ஒரே மாதிரி தலையை ஆட்டி ஆட்டி டயலாக் பேசி சம்பாதிச்ச காசையெல்லாம் அரசியல் படமா எடுத்து அம்போன்னு விட்டுட்டு காணாமயே போயிட்டார்...
இன்னும் பலப் பேரு சொல்லாம ஃபீல்டு அவுட் ஆயிட்டாங்க...

பொதுவா ஒருத்தரோட தனிப்பட்ட வாழ்க்கையை பார்த்து எந்த முடிவுக்கும் வரக்கூடாதுன்னு சொல்வாங்க...

ஆனா தனிப்பட்ட வாழ்க்கையில தானே வரி ஏய்ப்பு, நில ஆக்கிரமிப்பு, பண மோசடி போன்ற சமூகத்தை பாதிக்கிற தப்புக்களும் அடங்கியிருக்கு... பணத்துக்கு ஆசைப்பட்டு அவர்களை விரும்பும் ஆயிரம் பெண்களை சேர்த்துக்கிட்டு கும்மாளம் அடிக்கட்டும்.. நாறி நைந்து போகட்டும்.. அவர் பணம் அவர் இஷ்டம்...அது அவங்களை பாதிக்கும் தனி விஷயம்... சட்டத்துல மாட்டிக்காத வரை யாரும் கேள்வியே கேட்க மாட்டாங்க... ஆனா மக்களையும், அவங்களுக்கு சேர வேண்டிய வரி முதலான விஷயங்களையும் பாதிக்கிற மாதிரி கை சுத்தம் இல்லாத ஆளுங்களா இருந்துக்கிட்டு என்னத்துக்கு இவங்களுக்கு அரசியலும் இன்னொன்னும்...

தெலுங்கு சினிமா நடிகர்கள் கதை இதை விட காமெடி... இங்கே நாயகர்கள் மட்டும் தான் வேட்டியை வரிந்து கட்டுகிறார்கள் என்றால்... அங்கே நாயகிகளும் அரசியலில் புகுந்து விளையாடுகிறார்கள்... ஆந்திராவில் அனுதினமும் அதிரடி நகைச்சுவை காட்சிகள் தான்...

பொதுவா அரசியல்வாதிங்க அரசியலுக்கு வந்தப்புறம் தான் பிரபலமாகுறாங்க.. லைம்லைட் அவங்க மேல விழுந்த அப்புறம் தான் அவங்க பேண்ட், வேட்டி, டவுசர் எல்லாம் கிழியும்... நடிகர்கள் எல்லாம் நடிக்கும் போதே பிரபலம் ஆயிடறாங்க.. பேண்ட், டவுசர் எல்லாம் அப்பவே கிழிஞ்சு போகுது... அதை அப்படியாவது ஒட்டு போட்டுக்கிட்டு வந்து மறுபடியும் கிழிச்சுக்கணுமா?
(ஒரிஜினல் டவுசர் கிழிதல்-TM என்ற பதத்தின் காப்பிரைட் லக்கிபீடியாவசம் உள்ளது... பதிவுக்கு மிகவும் பொருந்தி வருவதால் GNU லைசன்ஸ் முறையில் இங்கு எடுத்தாளப்பட்டுள்ளது)

1 கருத்து:

  1. /
    நல்லா நடிச்சுக்கிட்டு இருக்கிற ஒரு ஹீரோ திடீர்னு சம்மந்தம் இல்லாம ஒரு படத்துல சட்டுன்னு விரலை காமிராவைப் பார்த்து நீட்டி வசனம் பேச ஆரம்பிச்சுட்டாருன்னு வெச்சுக்குங்க... உடனே தெரிஞ்சுக்கலாம்... எவனோ குழப்பிட்டான்னு...
    /

    :))))))))

    பதிலளிநீக்கு