உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

வியாழன், ஜனவரி 21, 2010

செல்போனும் செல்ஃப் எடுக்காத அம்மாவும்

செல்போனில் பேசியபடி நாம் என்னென்ன வேலைகள் பார்க்கிறோம்?


செல்போனில் பேசிக்கொண்டே நடந்து எதிரே வருபவர் மீது எசகு பிசகாக மோதி விளையாடி பின் சாரி கேட்டு வழிபவர்களை இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது...
அப்படி மோதுவதில் கணிசமான பெண்களும் சாதனை படைக்கிறார்கள் என்கிறது ஒரு ஜொள்ளி ஸாரி புள்ளி விவரம்...
(எத்தனை பேர் இப்படி இரயில்வே தண்டவாளத்தைக் கடந்து ரெயிலில் அடிப்பட்டு இறந்திருப்பார்கள் என்று ஏதவது புள்ளி விவரம் கிடைக்குமா தெரியவில்லை)


செல்போனில் பேசிக்கொண்டே சமைக்கிறேன் பேர்வழி என்று, என் தோழி கத்தரிக்காய் சாம்பார் வைப்பதற்கு பதில் கத்தரிக்காய் ரசம் வைத்த கதை எல்லாம் நடந்து இருக்கிறது... (அவள் புருஷன் அதை சாப்பிட்டு அப்புறம் அதை க்ளீன் பண்ண அவர் வாய்க்குள் டாக்டர் கத்தியை விட்டு சுற்றியது ஒரு தனிக்கதை...)


பாத்திரத்தை டிஷ் வாஷரில் வைப்பதற்கு பதிலாக வாஷிங் மெஷினில் போட்டு துவைத்த கதையும் உண்டு...


செல்போனில் பேசியபடி வாகனத்தை செலுத்துகிறோம்...


செலுத்தும் வாகனத்தின் அளவைப் பொறுத்து விபரீதங்களை ஏற்படுத்தி தானும் கஷ்டபட்டு அடுத்தவரையும் கஷ்டபடுத்துகிறார்கள்...


வீட்டுக்காரம்மாவுடன் என்ன மளிகை சாமான் வாங்கி வர வேண்டும் என் ஸ்டைலாக மொபைலில் பேசிய படியே மளிகை கடைக்குள் லாரியோடு நுழையும் லாரி டிரைவர்கள் நிறைய பேர்..


"பக்கத்துல எங்கயாவது பால் கிடைக்குதா பாருங்க"  என்ற வீட்டம்மாவின் உத்தரவை காதில் வாங்குகிறேன் பேர்வழியென்று பக்கத்தில் சைக்கிளில் போவோருக்கு பாலூற்ற முனைப்பாகி விடும் கார்காரர்கள் ஒரு புறம்....


இந்த இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கின்ற கூத்து சொல்லி மாளாது…


 பேசிக் கொண்டே போய் முன்னால் நிற்கும் வாகனத்தின் டிக்கியின் வலிமையை பரிசோதிப்பது,


குழியின் உள்ளே விழுந்து குழியின் அளவை செ.மீ க்யூபில் அளப்பது,


சிக்னலில் நிறுத்தாமல் திடீரென உணர்ந்து பிரேக் போட்டு இதை பார்த்து டென்ஷனாகி விஜய்காந்த் போல நாக்கை துறுத்திக் கொண்டு ஏய்யென்று கூச்சல் போட்டுக் கொண்டு ஓடி வரும் போக்குவரத்துக் காவலரின் இரு கால்களுக்கு நடுவே முன் சக்கரத்தை நுழைத்து வண்டியை நிறுத்துவது,


கழுத்து வலி வந்தவனை போல் கழுத்தை சாய்த்து பேசிக்கொண்டே லாரியை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் வருவதாக நினைத்து நடுவில் போவது...


அப்படியொரு அக்கப்போர்...


இந்த நகைச்சுவை சம்பவத்தை கேளுங்கள்...


என் நண்பர் ஒருவரும், அவருடைய அலுவலக நண்பர் ஒருவரும் ஒருநாள் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார்கள்...


என் நண்பர் 2 கிலோ மைதாவை கொடுத்தால் ஒரே கையில் பரோட்டாவுக்கு மாவு பிசைந்து விடுவார்.. அப்படியொரு பெரிய உருவம்... அவருடைய நண்பர் அந்த பரோட்டாவை அப்படியே மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு ஏப்பம் விடும் அளவுக்கு பெரிய உருவம்... இரண்டு பேரும் வேலை பார்ப்பது மத்திய அரசின் ஒரு துறையில்.


அவர்களுக்கு முன்னால் ஒரு இளம்பெண் தன் குழந்தையுடன் கைனெட்டிக் ஹோண்டா வண்டியில் சென்று கொண்டிருந்தார்... குழந்தைக்கு என்ன ஒரு 2 1/2, 3 வயதிருக்கும். பின்னால் உட்கார்ந்து அம்மாவை பிடித்து கொண்டிருந்தது...


போனவர் சும்மா போகவில்லை... செல்போனை ஒரு காதில் வைத்து... ஒரு கையால் ஸ்டைலாக வண்டி ஓட்டிக் கொண்டிருந்தார் போல... குழந்தை செம தூக்க கலக்கத்தில் இருந்தது... அப்படியே இந்த பக்கம் சாய்வதும், அந்த பக்கம் சாய்வதுமாய், LR ஈஸ்வரி பாட்டு கேட்டது போல அப்படியொரு சாமியாட்டமாம்...


நம் நண்பர்கள் இதைக் கவனித்து விட்டனர்... அந்த பெண்மணியை எச்சரிக்கலாம் என்று தான் முதலில் நெருங்கியிருக்கின்றனர்... ஆனால் அவர் செல்போனில் பேசுவதை பார்த்து கடுப்பாகி விட்டனர்...


எங்கோ ஒரு இடத்தில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் வேகம் குறைந்த போது.. குழந்தையை அலாக்காக கைனெட்டிக் ஹோண்டாவில் இருந்து தூக்கி தம் வண்டியில் இருத்தி கொண்டனர்...


அந்த பெண் இதை கவனிக்கவேயில்லை... அவ்வளவு சுவாரசியமான பேச்சு.. அநேகமாக ஏதாவது மெகா சீரியல் கதையாக தான் இருக்கும் என்று தோன்றுகிறது...


குழந்தையை தூக்கியவுடன் அது விழித்துக் கொண்டது போலும்.. பைக்கின் பெட்ரோல் டாங்கில் உட்கார்ந்து அப்படியொரு சிரிப்பு, எக்காளமாம்... ஹேயென்று சந்தோஷ கூச்சல் போட்டுக் கொண்டே வந்திருக்கிறது...


இவர்கள் குறுக்கும் நெடுக்குமாக இரண்டு மூன்று முறை அந்த பெண்மணியை கடந்து செல்வதும், பின் செல்வதுமாக இருந்திருக்கின்றனர்... அந்த பெண் டாங்கில் அமர்ந்திருந்த குழந்தையை அரசல் புரசலாக பார்த்தும் அடையாளம் கண்டுக்கொள்ள வில்லையாம்...


குழந்தை வேறு தன் பங்குக்கு அம்மாவை பார்த்து உற்சாகமாக கையசைத்து இருக்கிறது...


அப்போதும் அம்மையருக்கு செல்ஃப் எடுக்க வில்லையாம்... அப்புறம் இந்த குழந்தையை எங்கோ பார்த்தது மாதிரி இருக்கிறதே என்று யோசித்திருப்பார் போலும்... சட்டென்று திரும்பி பின்னால் குழந்தையை தேடியவருக்கு அப்போது தான் குழந்தையை காணவில்லை என்று உறைத்திருக்கிறது...


பிறகு தான் அந்த பைக்கில் போவது தன் குழந்தை என உணர்ந்து கூச்சல் போட துவங்கியுள்ளார்.. உடனே நம் நண்பர்கள் பைக்கை ஓரம் கட்டி நிறுத்தினார்கள்...


அந்த பெண் சற்று தூரத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு ஓடி வந்து ஏதோ சொல்ல வாயெடுத்தார்...


"உனக்கு அறிவிருக்கா?" என்று ஆரம்பித்த இரண்டு நண்பர்களும், 10 நிமிஷம் கேப் விடாமல் திட்டி தீர்த்திருக்கிறார்கள்...


கூட்டம் சேர்ந்து அவர்களும் நடந்ததை உணர்ந்து அந்த பெண்ணை பிடித்து செம கத்தாம்...


எல்லாம் சுபமாக முடிந்து கிளம்பும் போது...


அந்த குழந்தை நம் நண்பர்கள் இருவரையும் பார்த்து டாட்டா காண்பித்தது தான் ஹைலைட்...


வந்து நடந்ததை சொல்லி விழுந்து விழுந்து சிரித்தார் என் நண்பர்.


காமெடியையும் மீறி ஒரு வேளை அந்த குழந்தை தவறி விழுந்திருந்தால் என்னாகியிருக்கும் என்று எண்ணும் போது ஒரு படபடப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை...

3 கருத்துகள்:

  1. இதை படித்தபோது என்னை மீறி சிரித்து விட்டேன்.இதெல்லாம் நாட்டில் நடக்கத்தான் செய்கிறது.

    பதிலளிநீக்கு
  2. நகைச்சுவைகளில் உச்சகட்டமானவை நிஜவாழ்வில் நடப்பவை தான்.. நன்றி இளமுருகன்

    பதிலளிநீக்கு
  3. entha oru thozhilnutpaththaiyum varambu meerip payanpaduthuvadhil nammai vinja aalae kidayadhu.

    பதிலளிநீக்கு