உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

வியாழன், ஜூலை 31, 2008

காற்றில் அந்த குரல் - பாயிருபாய்

என்னுடைய சிறு வயது பெரும்பான்மையாக சென்னையில் உள்ள நுங்கம்பாக்கத்தில் கழிந்தது.
நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் அங்கே தான்...

சிறுவனும் அல்லாத, பெரியவனும் அல்லாத பிராயத்தில், கூட தன் வயதையொத்த பிள்ளைகள் குடும்பத்தில் யாருமில்லாத சமயத்தில், புது வீட்டுக்கு அதுவும் கோடை விடுமுறையின் போது குடி போவது என்பது கொடுமையான விஷயம்.

அது போன்ற ஒரு கோடை விடுமறையில் வசமாக சிக்கிய சமயம் அது.

அப்போதெல்லாம் TV கூட மாலை 5.30 மணிக்கு மேல் தான் ஒளிபரப்பை துவங்கும். தூர்தர்ஸன் தொலைக்காட்சி துறையில் தனி ஆவர்தனம் செய்து கொண்டிருந்த காலம். பெரும்பாலும் அந்த தனி ஆவர்தனம் அபஸ்வரமாகவே இருந்ததில் ஆச்சர்யம் இல்லை.... (வயலும் வாழ்வும், உலா வரும் ஒளிகதிர், இளந்தென்றல் - மறக்கக் கூடிய நிகழ்ச்சிகளா அவை? அவர்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாது சார்)

நூலகம் எல்லாம் தெரியாத வயது... ஒரே பொழுது போக்கு சாலையை பார்த்தபடி இருக்கும் ஜன்னலில் சாலையில் போவோர் வருவோரை வேடிக்கை பார்ப்பதாக தான் இருக்கும்....

இப்போது போல மோட்டார் பைக்குகள் எல்லாம் அதிகம் கிடையாது... ஜாவா, ராஜ்தூத், புதிதாக வந்திருந்த யமஹா, ஹீரோ ஹோண்டா, இண்ட் சுசுகி போன்றவை இங்கொன்றும் அங்கொன்றுமாய் சுற்றிக் கொண்டிருக்கும்...

ஆயிரம் பைக்குகள் சென்றாலும், ஜாவா மோட்டார் பைக்கின் சத்தம் தான் நெஞ்சை அள்ளும்....

அப்போதெல்லாம் பேங்க்கில் நல்ல உத்தியோகத்தில் இருப்பவராயிருந்தால் பஜாஜ் அல்லது எல்.எம்.எல் போன்ற ஏதாவது ஸ்கூட்டர் வைத்திருப்பார்கள்.. கொஞ்சம் வசதியான டாக்டர்கள் எல்லாரும் கட்டாயம் ப்ரீமியர் பத்மினி கார் தான் வைத்திருப்பார்கள்...

காய்கறி, ப்ளாஸ்டிக் சாமான், பேன்ஸி ஐட்டங்கள், ஐஸ் வண்டி, சைக்கிளில் மீன்காரர், பால்காரர் என்று தெருக்கள் எப்போதும் பரபரவென இருக்கும்... அநேகமாக அனைத்து வீடுகளிலும் இருக்கும் பெண்களும் ரிலாக்ஸ்டாக மதிய நேரத்தில் தான் பேரம் பேசி வியாபாரம் செய்வார்கள்... மெகா தொடர்கள் எதுவுமில்லாத காலத்தில் அவர்களின் பிரதான பொழுதுபோக்கே இது போன்ற சில்லறை வியாபரங்களும் அக்கம் பக்கத்தில் அலர் பேசுவதும் தான்...

தினம் தினம் வேடிக்கைப் பார்த்து பார்த்து... மண்ணெண்ணய், புளி, சமையல் கேஸ், கோல மாவு என்று எந்த வண்டி போனாலும் என்னால் சத்தத்தை வைத்தே இனம் காண முடியும்.. பின்னே ஜன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பதே வேலை என்று இருந்தால்...

ஆனால் வெகு நாட்களாக ஒரு சத்தம் மட்டும் இன்னது என்று என்னால் அடையாளம் காண முடியாததாய் இருந்து வந்தது...

யாரோ ஒருவர் அடி தொண்டையில் ஆரம்பித்து, உச்ச ஸ்தாயில் சத்தமாக கத்தும் ஒரு குரல்...

"பாயிருபாய்... பாயிருபாய்..."

அதை ராகமாக அவ்ர் சொல்லும் விதமே அலாதி... எங்கள் தெரு சமீபத்தில் அந்த குரல் கேட்டதென்றால் மணி பதினொன்றரை பக்கம் என்று நிச்சயம் சொல்லலாம்... ஞாயிறு தவிர்த்து அநேகமாக எல்லா நாளும் அந்த குரலை கேட்கலாம்...

அது யார்... என்ன வியாபாரம் செய்கிறார் என்று தெரிந்து கொள்ள எனக்கு கொள்ளை ஆசை... எங்கள் தெரு மீது அவருக்கென்ன கோபமோ தெரியவில்லை... அவர் எங்கள் தெருவுக்குள் வருவதேயில்லை... பக்கத்து தெருவிலிருந்து எதிர் தெருவிற்கு போவாராயிருக்கும்... அப்போது குரல் தெளிவாக கேட்கும்...

"பாயிருபாய்...."

* * * * * * * * * *

ரொம்ப நாட்கள் கேட்டு கேட்டு குரல் பழகி என்ன வியாபரம் என்று தெரிந்து கொள்ளும் ஆசை எல்லாம் போன பின் ஒரு நாள் என் தாத்தாவுடன் சைக்கிளில் செல்லும் போது எத்தேச்சையாக வெகு அருகில் அந்த குரல் கேட்டு திரும்பி பார்த்தேன்...

"பாயிருபாய்..."

ஒரு அழுக்கு சட்டையும், பாவாடை போன்ற காக்கி டிராயரும் (சல்லாடம் என்று சொல்வார்கள்) அணிந்து ஒரு இரும்பு தள்ளு வண்டியை தள்ளிக் கொண்டு ஒரு பெரியவர்... வயது அறுபது பக்கம் இருக்கும்...

ரோடு போடும் போது தார் ஊற்றிய ஜல்லி கற்களை தள்ளி கொண்டு வந்து கொட்ட பயன்படும் இரும்பு சக்கரம் வைத்த தள்ளு வண்டி அது...

அதில் என்ன வைத்து விற்கிறார் என்று பார்பதற்குள்... என் தாத்தா அவரை தாண்டி வேகமாக சென்று விட்டார்...

"பாயிருபாய்...."

குரல் தேய்ந்து காற்றில் கலந்து விட்டது...

* * * * * * * * * *

அதன் பிறகு நாங்கள் வீடு மாற்றி விட்டோம்... இந்த முறை நாங்கள் குடியேறிய வீடு சற்று தள்ளி உள்வாங்கி ஒரு சந்தினுள் அமைந்திருந்தது... எந்த சத்தமும் கேட்காத அமைதியான இடம்...

அதன் பிறகு கொஞ்ச காலம் அப்படியே கழிய, அந்த குரலை பற்றி நான் மறந்தே போனேன்...

நான் வளர்ந்து தி.நகரில் இருக்கும் பள்ளி, நூலகம் என்று எல்லா இடத்துக்கும் தனியாக செல்ல ஆரம்பித்த நாட்கள்.

ஒருநாள் காலையில் எத்தேச்சையாக அந்த பெரியவரை பார்த்தேன்... ஒரு தேநீர் கடையில் தேநீர் அருந்திய படி யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார்.. அவருடைய தள்ளு வண்டி சற்று தள்ளி சாலை ஓரமாக நிறுத்த பட்டிருந்தது....

மறுபடியும் பழைய ஆர்வம் வந்து என்னை தொற்றிக் கொண்டது... நைசாக சாலையை கடந்து அந்த வண்டிக்குள் என்ன தான் இருக்கும் என்று பார்ப்பதற்காக போனேன்... போய் எட்டிப் பார்த்தால்...

காலியாக இருந்தது... சே.. என்னவொரு ஏமாற்றம்...

* * * * * * * * * *

நான் சைக்கிள் வாங்கி கிரிக்கெட், திருவிழா, நூலகம் என்று சுற்ற ஆரம்பித்த நேரம்...

நுங்கம்பாக்கத்தில் உள்ள பல பிசியான தெருக்களில் ஒன்றில் இருந்த என் மாமாவின் நண்பரின் கடையில் நானும் என் பால்ய சினேகிதன் ஒருவனும் சும்மா பொழுது போக்கிக் கொண்டிருந்த போது...

அந்த சத்தம் கேட்டது...

"பாயிருபாய்...." அந்த பழைய கம்பீரம் சற்று குறைந்தாற் போல தோன்றினாலும், அதே குரல்...

அந்த பெரியவர் இப்போது சற்று தளர்ந்தவராய் அதே வண்டியை உருட்டியபடி எங்களை கடந்து சென்றுக் கொண்டிருந்தார்...

என் நண்பன் ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜா... அவனிடம் கேட்டால் ஏதாவது விவரம் தெரியுமோ என்று பேச்சு கொடுத்தேன்..

"டேய்.. அந்த தாத்தா என்ன வியாபாரம்டா பண்றாரு?"

"யாரு பாயா?" என்றான் அசுவாரஸியமாய்...

"அவரு பாயா? பாயிருப்பாய்னு ஏதோ விக்கிறாரே அவரையா சொல்றே?"

"ஆங்.. அவரு தான்.. எங்க ஊட்டாண்ட தான் மின்னாடி குடித்தனம் இருந்தாரு... "

"என்ன தாண்டா விக்கிறாரு அவரு?"

"விக்கிலை டா.. வாங்குறாரு…… பழைய இரும்பு சாமான் வாங்குவாரு"

ஓஹோ

பாயிருபாய் என்பதன் அர்த்தம் "பழைய இரும்பு"-ஆ...

அடக்கடவுளே..

சே இது தெரியாமல் போயிற்றே என்று ஒரு இனம் புரியாத ஏமாற்றம் மனதின் எங்கோ ஒரு மூலையில் ஏற்பட்டாலும்...

ஏதோ தொடர்கதையை படித்து முடித்த திருப்தி அந்த கணத்தில் ஏற்பட்டதை மறுக்க முடியாது...

* * * * * * * * * *

அதன் பிறகு சில சமயம் இங்குமங்கும் அவரைப் பார்த்திருப்பேன்...

நான் போரூருக்கு குடி பெயர்ந்த பின், அவ்வபோது பழைய தொடர்புகளால் நுங்கம்பாக்கம் போய் வந்து கொண்டிருந்தாலும் அவரை பார்க்கும் வாய்ப்பு ஏனோ எனக்கு கிடைக்கவில்லை...

ஆனால் அந்த கம்பீரமான, அடிதொண்டையிலிருந்து புறப்படும் அந்த பிரத்தியேக குரலை மட்டும் என்னால் இதுவரை மறக்கவே முடியவில்லை....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக